சிக்கனத்தின் சிறப்பு!

விலைவாசி நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், சிக்கனத்தின் அவசியத்தைப் பற்றிக் கூற வேண்டியதில்லை.
சிக்கனம் என்பது எப்போதாவது கடைப்பிடிக்கும் விஷயமாக அல்லாமல், வாழ்க்கைமுறையாகவே மாறிவிட்டால் நன்மை பயக்கும்.
சிக்கன வாழ்க்கைமுறை என்பது சிக்கனமாக, விவேகமாக வாழ்க்கையை அணுகும் முறை. பொருட்களைப் பயன்படுத்துதல், சமூக நிலை, தொழில், நேரம் என்று பல்வேறு விஷயங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம்.
சந்தையில் காணும் பொருட்களை எல்லாம் வீட்டில் வாங்கிக் குவித்துப் பயன்படுத்த நினைப்பது மேலைநாட்டு நுகர்வுக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் இறுதியில் தருவது கஷ்டத்தையே என்பது மேலைநாடுகளும் உணர்ந்திருக்கும் பாடம்.
ஆடம்பரச் செலவுகள், வீணாக்குவதைத் தவிர்ப்பது, வரவுக்கு ஏற்பச் செலவை அமைத்துக் கொள்வது ஆகியவற்றைத்தான் நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இனிமையான வாழ்க்கைக்கு அதுவே இலக்கணம். எதையும் தானே செய்வது, பகிர்தல், மறுபயன்பாடு, படைப்பாற்றல் ஆகியவற்றைச் சிக்கன வாழ்க்கை முறை ஊக்குவிக்கிறது.
சிக்கனத்தின் சில அடிப்படை அம்சங்களைப் பார்ப்போம்…
பயன்பாடு
சிக்கன வாழ்க்கைக்கு அடித்தளம், பயன்பாட்டில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதுதான். உதாரணமாக, இந்தக் கோடை காலத்தில் வண்ண வண்ண குளிர்பானங்களை வீட்டில் வாங்கி அடுக்குவதை விட, நிறைய நீரும், மோரும் பருகுவதே உடலுக்கும், பர்ஸுக்கும் நலம். பகலில் எல்லா அறைகளிலும் மின்விளக்குகளை எரிய விட வேண்டியதில்லை.
பகிர்தல்
நூல்கள், திரைப்பட சி.டி.கள் போன்றவை தற்போது அவற்றுக்கான லைப்ரரிகளில் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எரிபொருள் விலை கூடிக்கொண்டே செல்லும் நிலையில் வீட்டில் ஆளுக்கொரு வாகனத்தைப் பயன்படுத்தாமல், சிறிது திட்டமிட்டு ஒரே வாகனத்தில் இருவர் செல்லலாம். வெளியே செல்வதை அதற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.
தானே செய்வது
தனியாக வசிக்கும் நபராக இருந்தாலும் உணவகம் சென்று உண்ணாமல் தானே சமையலில் இறங்குவது, சேமிப்பு மட்டுமல்ல, ஒரு நல்ல கலையைக் கற்றுக்கொள்ளும் விஷயமும் ஆகும். ஓட்டலில் நீங்கள் உணவுக்குக் கொடுக்கும் விலை, ஓட்டலை நடத்துவதற்கு, சமைப்பதற்கு, பரிமாறுவதற்கு எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் என்பதை உணருங்கள்.
மாற்று வழிகள்
மாதக் கட்டணம் செலுத்தி `ஜிம்’மில்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று ஓடலாம், யோகாசனம் செய்யலாம், விளையாட்டில் பங்கேற்கலாம்.
மறுபயன்பாடு, மறுஉருவாக்கம்
`யூஸ் அண்ட் த்ரோ’ என்ற பயன்படுத்தி எறியும் முறையே இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம். ஒரு சிறிய உபகரணம் பழுதாகிவிட்டால் உடனே அதைத் தூக்கி எறியாமல் பழுது நீக்கிப் பயன்படுத்தலாம். உபரியாக ஒன்று இருந்தால், தேவைப்படும் வேறொருவருக்கு அதைக் கொடுக்கலாம், விற்கலாம்.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சற்று யோசித்துச் செயல்பட்டால் பாக்கெட்டில் நிறையவே பைசா மிச்சமாகும்!