அஸ்திவாரம் இல்லாத வீடு!

ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமானால் முதலில் அஸ்திவாரம் அமைப்பது வழக்கமான நடைமுறை. அஸ்திவாரம் அமைக்காமலே கட்டிடம் கட்டும் முறை ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
யூரி விளாசவ் என்பவர் கண்டுபிடித்த இந்த முறை, `மண்ணை அழுத்துதல்’ என்று கூறப்படுகிறது.
1968-ம் ஆண்டு, நோவோசி பிர்ஸ்க் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடம், களிமண்ணும், மணலும் கொண்ட பரப்பு உடையது. எனவே அங்கு 16 மீட்டர் ஆழத்துக்கு அஸ்திவாரம் தோண்டினால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும் என்று தீர்மானித்தனர்.
ஆனால் 11 மீட்டர் அளவுக்குத் தோண்டும்போதே அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அதற்குக் கீழே கடும் பாறையாக இருந்ததுதான் காரணம். உடனே மண்ணைப் பற்றி ஆராயத் தொடங்கினர்.
அந்தச் சமயத்தில்தான், 16 மீட்டர் ஆழத்துக்குத் தோண்டாமல் மண்ணை அழுத்திக் கடினமாக்கினால், அதன் மூலம் கட்டிடம் மண்ணை அழுத்தும்போது மண் மிக உறுதியாக இருந்து கட்டிடத்தைத் தாங்கும் என்று விளாசவ் கண்டுபிடித்து உதவினார். அது நல்ல பலனைத் தந்தது.
விளாசவ் முறைப்படி, 12 அல்லது 14 டன் எடையுள்ள உலோக சிலிண்டரை ஒரு கிரேனுடன் இணைக்க வேண்டும். கிரேன் சுழன்று, சிலிண்டரை 15 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே போடும்.
அப்போது மணற்பரப்பில் 3 மீட்டர் ஆழமுள்ள துளை விழும். அதை அடைத்துவிட்டு, மீண்டும் அதே முறையில் பரப்பை அழுத்த வேண்டும். இந்த அதிஅழுத்த சக்தியால் பரப்பில் இருந்து நீர் நன்கு வெளியேற்றப்படும். (பரப்பின் அடியில் உள்ள நீர்க்கசிவே கட்டிடம் பலவீனம் அடைவதற்குக் காரணம். எனவே பரப்பை நீர் வற்றி உலரச் செய்ய வேண்டும்.) அப்போது அந்தப் பரப்பு, 300 டன் எடையுள்ள கட்டிடத்தையும் தாங்கும் வலுவை அடைந்துவிடும்.
இதனால் கட்டிடம் கட்டும் செலவு, நேரம் குறைகிறது. அதேநேரம் உறுதி அதிகரிக்கிறது.