தொகுப்பு

Archive for the ‘குழந்தை பராமரிப்பு’ Category

வளரும் பருவத்தில்…

29/01/2013 பின்னூட்டம் நிறுத்து

வளரும் பருவத்தில்...

குழந்தைப் பருவம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. இந்தப் பருவம் சரியாக அமையும் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் பிரகாசிக்கிறார்கள். குழந்தைகள் பராமரிப்பு என்பது உணவு, உடை, கல்வி இவற்றுடன் முடிந்து விடாது. இதை விடவும் முக்கியம், அவர்களுடைய பழக்க வழக்கங்கள். அதிலும் முக்கியமாக நல்லொழுக்கம்.
பிள்ளைகள் வளரும் பருவத்தில் நாம் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் தான் பெரியவர்களாகும் போதும் அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கும் . அவர்கள் காணும் ஒவ்வொரு விஷயமும் மனதில் ஆழமாக பதிந்து விடும்.
அது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாக மாற வாய்ப்பிருக்கிறது. கடுமையான உள்ளப் பதிவுகள் அவர்களை மனநோயாளியாக மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. அவர்களின் பல தீய செய்கைகளுக்கு கடந்த கால வாழ்க்கையும் காரணமாக இருக்கலாம்.
ஆரோக்கிய உணவு
: ஆரோக்கியமான உணவு வகைகளை ஐந்து வயதுக்குள் சாப்பிட பழக்கி விட வேண்டும். சிறுவயதில் பழக்கப்படாத உணவு வகைகளை அப்புறமாய்  உடல் ஏற்காது. அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதனால் எல்லா வகையான உணவுகளையும் சிறுவயது முதற்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட பழக்கிவிட வேண்டும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் வீட்டில் பிள்ளைகள் சாப்பிட மறுக்கும் போது அப்படியே விட்டுவிடக் கூடாது. மாதத்திற்கு ஒரு முறையாவது நல்ல உணவகத்திற்கு அழைத்துச் சென்று சுவையான உணவு வகைகளை சாப்பிட பழக்கிவிடும் போது அதை விரும்பிச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். பிறகு நாம் வீட்டில் சமைக்கும் உணவு சுவை குறைவாக இருந்தாலும் அதை தொடர்ந்து சாப்பிடுவார்கள்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை அடித்து பயமுறுத்துவது தவறான அμகுமுறை. அவர்களுக்கு நல்ல பசியை வரவழைத்து உணவை கொடுத்துப் பாருங்கள். அதே போல திருமண வீடுகளுக்குச் சென்றாலும் அருகில் அமர வைத்து எதை முதலில் சாப்பிட வேண்டும். எதை கடைசியில் சாப்பிட வேண்டும் என்பதையும், இலையில் மீதம் வைக்காமல் எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் கற்றுத் தாருங்கள்.
அதுமாதிரி தொடர்ந்து சைவம் சாப்பிட்டு வரும் குழந்தைகளிடம் திடீரென்று அசைவத்தை திணிக்க வேண்டாம். அது புட் பாயிசனாக மாறிவிடும் அபாயம் உண்டு. அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஐந்து வய துக்குள் தீர்மானித்து விடுங்கள்.
எதிர்பார்ப்பு: அதிகமாக சேட்டைகள் செய்யும் குழந்தைகளை உற்றுப் பார்த்தால் நிச்சயம் அவர்களிடம் ஏதாவது எதிர்பார்ப்பு இருப்பதை உணர முடியும். நம் கவனத்தை ஈர்க்க அப்படி சேட்டைகள் செய்யலாம். நாம் சிறிய குழந்தைகளை அதிகம் கவனிக்கும் போது தங்கள் மீது கவனம் திரும்ப வேண்டும் என்று பெரிய குழந்தைகள் சேட்டைகள் செய்யலாம். அவர்கள் கோபத்தை எரிச்சலை நம் மீது காட்ட எதையாவது உடைக்கலாம்.
நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பொருளை தொலைத்து விட்டு தேட விடலாம். இதற்கெல்லாம் உள் காரணங்கள் என்ன என்பதை மனோரீதியாக உணர்ந்தால் சேட்டைகளை குறைக்க வகை தேடலாம். நீங்கள் அன்பை கொட்டினால் பதிலுக்கு அவர்களும் வள்ளலாக மாறி பாசத்தை கொட்டுவார்கள்.
மேலும் தம்பி, தங்கைகளின் முக்கியத்துவத்தை அன்பாக சொல்லி புரியவைத்தால், அவர்களும் பராமரிப்பில் கைகொடுப்பார்கள். மாறாக திட்டி உதைத்து அவர்கள் மனதை மாற்ற முற்பட்டால், தன்னை மற்றவர்கள் வெறுக்க காரணமான தம்பி தங்கைகளை அவர்கள் வெறுக்கலாம். அதுவே காலப் போக்கில் பாச இடைவெளியை ஏற்படுத்தி விடும் அபாயமும் உண்டு.
ஒப்பிடும் குணம்: பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.
அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.
குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.
பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல்.
மரியாதை: குழந்தைகள் தானே என்று நினைத்து மரியாதை கொடுக்காமல் ஒதுக்கி விடாதீர்கள். குறிப்பாக உறவினர்கள் மத்தியில் தங்களை குறைகூறுவதை அவர்கள் ஒரு போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். நாம் பெரியவர்களுக்கு நிகராக அவர்களுக்குத்தரும் மரியாதை அவர்களைப் பெருமைப்படுத்தி மகிழ வைக்கும். அது அவர்கள் நமக்கு கட்டுப்பட்டு நடக்க அனுகூலமாக இருக்கும். அவர்களும் மகிழ்ச்சியாக மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள்.
சண்டை வேண்டாம்: முக்கியமான, தீர்க்க முடியாத குடும்ப பிரச்சினைகளை ஒருபோதும் குழந்தைகள் முன் பேசிக் கொள்ளாதீர்கள். அது அவர்கள் மனதில் பதிந்து ஒரு ஆழமான திகிலை உண்டாக்கி விடும். நம் குடும்பத்தில் இப்படி தீர்க்க முடியாத பிரச்சினை தொடர்ந்து விட்டால் என்னாவது என்று அவர்கள் தீவிரமாக கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
இது அவர்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கி விடும். நாளடைவில் மனோவியாதியாகவும் மாறி விடும். பிள்ளைகள் முன்பாக சில பெற்றோர் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதன் விளைவு மிகவும் விபரீதமாக இருக்கும். பெற்றோர் சண்டை முடிந்து இயல்பான பின்னும் பிள்ளைகள் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
இது அவர்களை எதிர்காலத்தில் மன நோயாளிகளாக மாற்றி விடும். படிப்பில் கவனக் குறைவு ஏற்படலாம். எதிர்கால நம்பிக்கையை இழக்கலாம். குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்று நினைக்கும் பெற்றோர் ஒரு போதும் தங்கள் பிள்ளைகள் முன் எந்த சண்டை சச்சரவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது.
குழந்தைகள் ஒருவரிடம் மற்றவர் அன்பாக இருக்க கற்றுக் கொடுங்கள். சண்டை சச்சரவுகள் வரும்போது எரிச்சலோடு நடந்து கொள்ளாதீர்கள். பிரச்சினையை கேட்டு அதற்கு தீர்வு சொல்லுங்கள். சண்டை ஏற்படாமல் இருக்க நல்ல ஆலோசனைகளை கூறுங்கள். தவறு செய்த பிள்ளைகளை மென்மையாக கண்டிக்கவும் செய்யுங்கள்.
இதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு உங்களிடம் ஓடிவரும் குழந்தைகளை அன்பாக அணுகி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை கூறுங்கள். அந்த ஆலோசனைகள் அவர்களுக்கு வருங்காலத்திலும் பயன்படலாம்.
சிறிய குழந்தைகள் பெரிய குழந்தைகளை தாக்க வரும் போது அவர்களை திருப்பி அடிக்கவோ கீழே தள்ளி விடவோ கூடாது. மாறாக அவர்களிடமிருந்து விலகிக் கொள்ளவும், முடிந்தால் தப்பித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்.
படிப்பில் கவனம்: குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சில நேரங்களில் அது எதிர்பார்த்தபடி நடப்பதில்லை. அப்போது அவர்களிடம் சிடுசிடுக்காமல் மூலகாரணம் என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அவர்களுடைய சோர்வுக்கு பின் னால் ஏதேனும் ஒரு வலியிருக்கும்.
வெளியில் ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம். எதையாவது பார்த்து பயந்திருக்கலாம். அதை கேட்டறிந்து தெளிவு படுத்திய பின் பாடத்தை தொடரச் சொல்லுங்கள். எப்போதும் நீங்கள் துணையிருப்பதை நினைவுபடுத்துங்கள்.
புதிய பலம் பெறுவார்கள். தூக்கத்தில் உளறுவது, கெட்ட கனவு கண்டு அடிக்கடி அலறுவது போன்ற செயல்களிருந்தால் சிறுவயதில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கலாம். நல்ல குழந்தை மனநல மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு குணப்படுத்துங்கள். கவனிக்காமல் விடும்பட்சத்தில் அந்தப் பிரச்சினை அவர்க ளுடைய எதிர்காலத்தை பெரிதாக பாதிக்கலாம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,847 other followers