தொகுப்பு

Archive for the ‘ஆன்மீகம்’ Category

புதிய இந்தியாவை உருவாக்குங்கள்

டிசம்பர் 9, 2009 vayal மறுமொழியவும்


உண்மை, அன்பு, நேர்மை ஆகியவற்றை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீ நேர்மை உள்ளவனாக இருக்கிறாயா? உயிருக்கே ஆபத்து வந்தாலும் சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? அன்பு செலுத்துபவனாக இருக்கிறாயா? அப்படியானால் மரணத்துக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.

பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித் தன்மையினாலும் அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. ஆனால், உண்மையான மதத்தின் தலை சிறந்த சமய போதனையாகவும், மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால்தான் பலவிதமான இன்ப துன்பங்களிலிருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவை பாதுகாத்து வைத்திருக்கிறார்.

நீங்கள் மகத்தான பணியை செய்ய பிறந்தவர்கள்தான் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய் குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்.

மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப் போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும். கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும்.

பக்திக்கு பகையில்லை! (ஆன்மிகம்)

டிசம்பர் 8, 2009 vayal மறுமொழியவும்

டிச., 10 – மெய்ப்பொருளார் குருபூஜை
பக்தி உடையவர்களுக்கு, பகைவர்களே கிடையாது. பகைவர்கள் துன்பமிழைத்தாலும், தங்களுக்கே உரித்தான பொறுமை சுபாவத்தால், அவர்களை மன்னிக்கும் ஆற்றலை பக்தர்கள் பெற்று விடுகின்றனர். பகைவனை மன்னிக்கும் குணம் எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அவன் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறான்.
திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார் மெய்ப்பொருளார் என்னும் மன்னர். இவர், தீவிர சிவபக்தர்; பல சிவாலயங்களில் திருப்பணி செய்தவர்; வீரத்திலும் இவருக்கு இணை இவரே. இவருக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களாகவே பல தேசத்து மன்னர்களும் இருந்தனர். இதுகண்டு, பக்கத்து நாட்டு மன்னனான முத்தநாதன் என்பவனுக்கு பொறாமை ஏற்பட்டது; ஆனால், கோழையான அவனிடம், மெய்ப்பொருளாரை எதிர்த்து நிற்கும் திராணி இல்லை.
கோழைகளின் உள்ளத்தில் தான் வஞ்சக எண்ணங்கள் எழும்; முத்தநாதனின் மனதிலும்,மெய்ப்பொருளாரை குறுக்கு வழியில் கொல்லும் வஞ்சக எண்ணம் பிறந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் எது பலமோ, அதுவே பலவீனம் என்ற மனோதத்துவத்தை அறிந்த முத்தப்பன், மெய்ப்பொருளாரின் சிவபக்தி என்னும் பலத்தையே, பலவீனமாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். சிவனடியாரைப் போல வேடமிட்ட அவன், உடலெங்கும் திருநீறு பூசி, நீண்ட தாடி வைத்து திருக்கோவிலூர் வந்து சேர்ந்தான். தங்கள் ஊருக்கு வந்துள்ள சிவனடியாரை, அன்புடன் வரவேற்று, மரியாதையுடன், அரண்மனைக்கு அழைத்து வந்தனர் மக்கள். அந்த அரண்மனைக்குள் சிவனடியார்கள் நுழைய எவ்வித தடையும் கிடையாது என்பதால், அரசரின் அந்தப்புர அறைக்கே சென்று விட்டான் முத்தப்பன்.
“ராணியாருடன் அரசர் தனித்திருக்கிறார்…’ என்று, அரசரின் மெய்க்காப்பாளரான தத்தன் சொன்னதை பொருட்படுத்தாத முத்தப்பன், அவனையும் மீறி அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டான். அவனது கைகளில் சில ஓலைச்சுவடிகளும், அதனுள் ஒரு உடைவாளும் இருந்தது. தங்கள் அறைக்குள் யாரோ வருவதை அறிந்த ராணி, சுதாரித்து, மன்னரை எழுப்பினாள்.
தன் முன், சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்ட மன்னர், அவரைப் பணிந்து வணங்கினார்.
“அடியவரே… அந்தப்புரத்துக்குள்ளேயே நுழைய வேண்டுமென்றால், தாங்கள் அவசர காரியமாகத்தான் வந்திருப்பீர்கள். தாங்கள் எது கேட்டாலும், செய்கிறேன்…’ என்றதுடன், முத்தப்பனுக்கு ஆசனம் அளித்து கவுரவித்தார்.
“மன்னா… என் கையிலுள்ள ஓலைச்சுவடிகள், எனக்கு, நேரடியாக சிவபெருமானால் தரப்பட்டவை. இதிலுள்ளவற்றை உங்களிடம் வாசித்துக் காட்டவே வந்தேன்…’ என்றதும், மன்னரும், ராணியும் மிகவும் மகிழ்ந்தனர்; தங்கள் வாழ்வில் கிடைத்த பேறாகக் கருதினர்.
“இதை வாசிக்கும் போது பெண்கள் உடனிருக்கக் கூடாது…’ என்று, முத்தப்பன் சொன்னதால், உள்ளே போய்விட்டாள் ராணி. முத்தப்பன் முன் தரையில் அமர்ந்தார் மன்னர். ஓலைச்சுவடியை வாசிக்கும்படி முத்தப்பனின் பாதத்தில் குனிந்து வணங்கினார். அப்போது, மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து, மன்னரின் முதுகில் குத்திவிட்டான் முத்தப்பன். வெளியே நின்ற தத்தன், இதைப் பார்த்து ஓடிவந்து, முத்தப்பனைக் கொல்ல முயன்றான்.
“திருநீறு பூசிய அடியவர்களைக் கொல்வது பாவம். இவர் நம்மவர்…’ என்று தடுத்த மன்னர், உடனடியாக, நாட்டின் எல்லை வரை பாதுகாப்புடன் முத்தப்பனை விட்டு வருமாறு தத்தனுக்கு உத்தரவிட்டார். செய்தியறிந்த, பக்தி வாய்ந்த மக்களும், மன்னரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, முத்தப்பனை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். மன்னரின் உயிர் பிரிந்தது, ராணி அழுதாள். அப்போது, அங்கு தோன்றி, மன்னருக்கு உயிர் கொடுத்து, பக்தனுக்கு தேவை பொறுமையும், தியாக மனப்பான்மையுமே என்பதை உணர்த்தவே இந்த லீலையை நிகழ்த்தியதாகக் கூறினார் சிவபெருமான்.
பொறுமைசீலரான மெய்ப்பொருளார், கார்த்திகை மாத உத்திரநட்சத்திரத்தன்று முக்தியடைந்தார். அவரது குருபூஜை நாளில், பகைவர்களையும் மன்னிக்கும் குணம் வேண்டி பிரார்த்திப்போம்.

புல்லைத் தின்னும் மிருகங்கள்

டிசம்பர் 8, 2009 vayal மறுமொழியவும்


பக்தி என்பது தூய்மையை அடிப்படையாக கொண்டே எழுகிறது. புறத்தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால், அதைக் காட்டிலும் மேன்மையான அகத்தூய்மையை மாற்ற முடியாது. அகத்தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீண் எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத்தூய்மை யை அடையலாம்.

எண்ணம், சொல், செயல் இவற்றால் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க வேண்டும். புலால் உண்ணாமல் இருப்பதால் மட்டும், யாரும் தூயவர்களாகி விடமுடியாது. கணவனை இழந்த பெண் அல்லது ஆதரவற்றவர்களை ஏமாற்றுபவனும், பொருளுக்காக எத்தகைய கொடுமைகளையும் செய்பவனும், புல்லை மட்டுமே உண்பவனாக இருந்தாலும் அவன் மிருகமே ஆவான். எவருக்கும் தீங்கு நினைக்காமல் பகைவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன், பன்றி மாமிசம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அவனே பரமயோகியாவான்.

பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சி செய்யும் ஆற்றல் பெற்றிருக்கும். எத்தகைய இடர்களையும் விலக்கிக் கொண்டு முன்னேற, அதனால் தான் முடியும். அதே நேரம், அளவுக்கு மீறிய மகிழ்ச்சி கூடாது. அது, நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைத்து விடும்.

கூட்டுப் பிரார்த்தனையால் ஏற்படும் பலன்! (ஆன்மிகம்)

டிசம்பர் 7, 2009 vayal மறுமொழியவும்

எல்லாருமே எதெதற்காகவோ, பகவானிடம் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை என்பது கோரிக்கை தான். பகவானை துதிப்பது வேறு; அவனிடம் பிரார்த்திப்பது வேறு.
பகவானைத் துதித்து, அவன் புகழ் பாடினாலே போதும்… பக்தனுக்கு என்ன வேண்டுமோ, அதை கொடுத்து விடுவான். அவன் கொடுப்பான் என்ற நம்பிக்கை மட்டுமிருந்தால் போதும். பகவானைத் துதிப்பதை ஒருவராகவும் செய்யலாம்; பலர் சேர்ந்து பஜனை கோஷ்டியாகவும் செய்யலாம். பகவான் நாமாவை திருப்பித் திருப்பிச் சொன்னாலே போதும், பக்தனுக்கு வேண்டியதை அளிக்கிறார் பகவான்.
“பையன் பாஸ் ஆகணும்; நல்ல வேலை கிடைக்கணும்; பெண்ணுக்கு சீக்கிரம் கல்யாணமாக வேண்டும்…’ என்று சொல்லி, கோவிலில் போய் நிற்பது, தேங்காய் உடைப்பது எல்லாம் பிரார்த்தனை; இது எதையும் விரும்பாமல், கோவிலுக்கு போய், அந்தந்த தெய்வ நாமாவளியைச் சொல்லிவிட்டு வருவது துதி. தனியாக பிரார்த்திக்கும்போது, சுயநலம் முன் நிற்கிறது; கூட்டாக சேர்ந்து பிரார்த்திக்கும்போது, பொது நலம் முன் நிற்கிறது.
ஒரு தெருவில், குழாய் தண்ணீர் வரவில்லை. ஒரு வீட்டுக்காரர் மட்டும் முனிசிபாலிடி ஆபீசரைப் பார்த்து, “எங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை…’ என்றால், “சரிதான், போங்க சார்! எல்லார் வீட்டுக் குழாயிலும் தான் தண்ணீர் வரலை; எங்க வீட்டுல கூடத்தான் வரலை; எல்லாம் ரெண்டு நாளில் வரும், போங்க…’ என்கிறார்.
அதுவே, தெருக்காரர்கள் ஒன்று சேர்ந்து, கூட்டமாக அந்த ஆபீசர் முன் நின்று கோஷம் போட்டு, கோரிக்கை வைத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார் ஆபீசர். மறுநாளே குழாயில் தண்ணீர் வந்து விடுகிறது. அதனால், தனியாக பகவானிடம் பிரார்த்திப்பதை விட, கூட்டாக பலர் சேர்ந்து பிரார்த்தித்தால் பலன் கிடைக்கும்.
தேவலோகத்தில் அசுரர்களின் கொடுமை தாங்க முடியவில்லை என்று பகவானிடம், தேவர்கள் கூட்டமாக சென்று பிரார்த்தித்தனர். உடனடி நடவடிக்கை எடுத்து, தேவர்களின் துயரை பகவான் போக்கினார் என்பது புராணம். கூட்டுப் பிரார்த்தனை என்றால், எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரார்த்திப்பது. இது, நல்ல பலனைத் தரும்!

டிசம்பர் 7, 2009 vayal மறுமொழியவும்


மரணத்தை வென்றவர் யார்?
* மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை. மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணியக்ஷத்திரங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை.
* மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார்.
* வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மனிதன் விட்டொழிக்க வேண்டும். வெவ்வேறு இடங்களுக்கு ஓடுவதால் தனது வலிமையை மனிதன் வீணே இழக்கிறான்.
* மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே.
* இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இவ்வுடலில் இருக்கும்போதே கடவுளை அறியும் தன்மை பெறுகிறான்.
* உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருந்தாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள். உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை விரைவில் உன்னால் உணரமுடியும்.
-விவேகானந்தர்

கோமாதாவை பூஜித்தால்… (ஆன்மிகம்)

டிசம்பர் 6, 2009 vayal மறுமொழியவும்

பகவானால் படைக்கப்பட்டுள்ள விலங்குகளில் பசுக்களும் அடங்கும். பசுமாடு என்றால், பால் கொடுக்கும் ஒரு விலங்கு என்று நினைக்கிறோம்; ஆனால், அது ஒரு தெய்வீக விலங்கு. மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த பசுக்கள் எப்படி தோன்றியது என்பதும் புராணத்தில் உள்ளது.
ஆதிகாலத்தில், கடும் தவம் செய்து சுரபி என்னும் கோவையும், அதோடு கூட ஒரு ஆச்சரியமான புருஷனையும் உண்டு பண்ணினார் பிரம்ம தேவர். இவர்களின் வழி வந்தவை தான் பசுக்கள். இவர்களால் பசுக் கூட்டம் உண்டாயிற்று.
பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளினாராம். பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர்.
பசுவின் கொம்பு, முகம், நாக்கு இவைகளில் தேவேந்திரன் இருக்கிறான்; எல்லா துவாரங்களிலும் வாயு இருக்கிறான்; கால்களில் – சப்த மருத்துக்கன்; கொண்டையில்- ருத்ரன்; வயிற்றில்-அக்னி; காம்புகளில்- சரஸ்வதி; கோமயத்தில்-லட்சுமி; மலத்தில்-கீர்த்தியும், கங்கையும்; பாலில்-மேதை; வாயில்- சந்திர பகவானும்…
இதயத்தில் – எமனும்; வாலில் – தர்ம தேவதையும்; மயிர்க்கால்களில் – யாகம் முதலிய கிரியைகளும்; கண்களில் – சூரியனும்; பூட்டுக்களில் – சித்தர்களும்; அசைவில்- காரிய சித்தியும், தவமும், சக்தியும் உள்ளனர்.
இப்படி, பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். உலகிற்கு சிறந்த புண்ணியமும், ஹோமத் திரவியமும் கொடுக்கிறது.
சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு, துக்கப்பட்ட பிறகு, வம்சத்து ரிஷி ஒருவர், பசும்பாலின் நுரையை உட்கொண்டு கோலோகத்தை அடைந்தாராம். பசுவை வளர்த்துப் பாதுகாப்பதிலேயே, கண்ணும், கருத்துமாக இருந்தார் அந்த ரிஷி. பசுவின் பாலை கறக்காமல், கன்றுக் குட்டி குடிக்கட்டும் என்று விட்டுவிடுவார்.
தாய்ப் பசுவிடம், கன்றுக் குட்டிகள் பால் குடித்த பிறகு, பசுவின் மடியில் இருக்கும் பாலின் நுரையை மட்டும் இவர் சாப்பிட்டு ஜீவித்து வந்தார். தபஸ்வியான இவர் இப்படி செய்து, பிறகு சொர்க்கம் சென்றார் என்பது கதை.
பசு மாடு என்றால், அதன் பாலை ஒட்டக் கறந்து விடக்கூடாது என்பது தர்மம்; கன்றுக் குட்டிக்கும் பால் விட வேண்டும். நம் குழந்தை மாதிரி, பசுவுக்கு அதன் கன்றும் குழந்தை தானே! பசுவின் மடியில் உள்ள நான்கு காம்புகளில், ஒரு காம்பு தேவதைகளுக்கும், ஒன்று, பூஜைக்கும், ஒன்று, கன்றுக் குட்டிக்கும் என்பது சாஸ்திரம்.
கன்றுக்குட்டி இல்லாத பசுவின் பால், பூஜைக்கு உதவாது என்று சாஸ்திரம் உள்ளது. வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டியைக் காட்டி கறக்கப்படும் பசும் பால் கூட பூஜைக்கு உதவாதாம்.
புண்ணியமான ஜீவன் பசு. அதை ரட்சிக்க வேண்டும்; பூஜிக்க வேண்டும். பசுமாடு வந்து விட்டால், தடி எடுத்து அடித்து விரட்டாமலிருந்தாலே போதும், அதுவே புண்ணியம் தான்.

கிருபானந்த வாரியார்- பக்திக்கு வேண்டாம் பணம்

நவம்பர் 30, 2009 vayal மறுமொழியவும்

ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.

கிருபானந்த வாரியார்- லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி

நவம்பர் 29, 2009 vayal மறுமொழியவும்

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.

* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.

கிருபானந்த வாரியார்- அமைதி உங்கள் மனைவி

நவம்பர் 28, 2009 vayal மறுமொழியவும்

*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.

*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.

*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.

*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.

*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.

*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது

கிருபானந்த வாரியார்- கடவுளை எளிமையாக வழிபடுங்கள்

நவம்பர் 27, 2009 vayal மறுமொழியவும்

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்