உலவும் ஆவிகள்-(அர்த்தமுள்ள இந்துமதம்- கவியரசு கண்ணதாசன்)

இறந்து போனவர்களுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரியமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மற்றவர்களோடு பேசுகிறார்கள் என்பது உண்மை.

அண்மையில் ஒரு பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு.பி.ஜி. கருத்திருமன் அவர்கள் இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாகக் கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!

சாதாரண நேரங்களில் `மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது `தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமான பதார்த்தங்களைச் செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்!

தர்க்கத்திற்கு இது நிற்கமுடியாது என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பவங்களைத் தம் வாழ்நாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக் கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

1. இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர், இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பார்க்கவேண்டும்; ஆனால் தமிழைத் தாய் பாஷையாகக் கொண்ட மீடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷையாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்வி கேட்டுப் பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல்ல, இறந்தவருடைய வாக்கே என்று உறுதியாகக் கூற முடியுமென்று சொன்னார்.

தம்பியார், “யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை; ஆபீசர் சொல்வது சரியான சோதனையே; சோதித்துப் பார்ப்போமே” என்று பார்த்தார்.

`உருது’ ஒரு வார்த்தையும் தெரியாத பிராமணச் சிறுவன் மீடியமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில் பதில் வரவே ஆபீசரும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.

மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபீசரும் விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், `இப்பொழுது மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்று அறிவித்து விட்டாள். அதன்படி அவர் வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்.    எனவே நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்குத் தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாம் என்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ, மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்றே தன்னுடைய கருத்தை ஆவி உலகக் கருத்தாக வெளிப்படுத்துகின்ற போலித்தனமோ, ஓர் அணுவளவும் கலக்கமுடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?

2. மறதியாகப் பணம் வைக்கப்பட்ட இடத்தை இறந்தவர் அறிவித்தல்:

ஆவி உலகத்திலிருந்து அறிவித்தபடியே அந்த வருமானவரி அதிகாரி தன்னுடைய வீட்டில் உருது பாஷையில் தன்னுடைய சொந்த மகளை மீடியமாக வைத்துப் பேசியதில், அவருடைய மனைவியின் தங்கை ஆவியுலகத் திலிருந்து பல அரிய விஷயங்களை அறிவித்ததாகத் தெரிவித்தார். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

ஒருநாள் அவருடைய சட்டைப் பையில் போட்டு வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணாத காரணத்தால், அவர் தம்முடைய வேலைக்காரன் திருடியிருக்கலாம் என்று கருதி, அவனைக் கடுமையாகக் கோபித்து அடித்து விட்டார். மறுமுறை ஆவி உலகத்திலிருந்த தன்னுடைய கொழுந்தியாளோடு பேசியபோது காணாமற்போன ரூபாயைக் குறித்து அவர் ஒன்றும் பேசாதிருக்க, அந்த அம்மையார் அதைக் குறித்துப் பேசியதாகவும், அந்த ரூபாயை சட்டையின் மேல் பையில் இருப்பதாகவும், அவரே ஞாபக் குறைவாக அதில் போட்டிருக்க, கீழ்ப்பையில் போட்டதாக எண்ணிக் கொண்டதாகவும், அந்த வேலைக்காரனைப் பேசியதும் அடித்ததும் பாவமான காரியமென்றும், அந்தப் பாவத்தைப் போக்குவதற்கு அவனிடம் உண்மையைச் சொல்லி, அவனுக்கு ஒரு ரூபாய் வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அறிவித்ததாகவும், அவர் அதன்படியே நடந்துகொண்டதாகவும், அதிலிருந்து ஆவி உலகத்தில் புண்ணியப் பகுதியிலுள்ள சுற்றத்தார் தாங்கள் இருந்த வீட்டில் ஏதாவது விபரீதமான காரியங்கள் நடந்தால், அதை எவ்வளவு கருத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ள முடிந்ததாகவும் அறிவித்தார்.

3. இறந்த இஸ்லாமியர் தானாகவே வலிய வந்து தன் மகனது வியாகூலத்தை நீக்கல்:

ஈரோடு மார்க்கத்தில் கரூருக்குச் சமீபமாயுள்ள புகழூரிலே ஒரு நாள் இரவு 1 மணிக்கு இறந்துபோன சுற்றத்தாருடன் பேசிக் கொண்டிருக்கையில் ஆவி உலகத்திலிருந்த ஓர் இஸ்லாமியர் வந்து தாம் அவ்வூரிலுள்ள (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரியினுடைய தகப்பனார் என்றும், தம்முடைய மகன் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும், அவன் அவனுடைய மனைவியின் உடல்நிலை விஷயமாகவும் அவளுடைய பிள்ளைப் பேறு விஷயமாகவும் நினைத்துக் கொண்டே இருப்பதாகவும், அவனைத் தயவுசெய்து கூட்டிக் கொண்டு வந்து தம்மோடு பேச வைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாராம்.

இரவில் 1 மணிக்கு அவரை அவ்விதம் கூப்பிடுவது சரியல்லவே என்று கேட்டபொழுது, “அவன் தூங்கிக் கொண்டிருப்பானானால் எழுப்பக்கூடாதுதான். ஆனால் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது தெரு வாயில் கதவை லேசாகத் தட்டினாலே அவன் வந்து திறந்து விடுவான்; அதைப்பற்றி யாதும் யோசிக்க வேண்டாம். அந்த உதவியைச் செய்து தரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். அதன்படி ஒரு வேலைக்காரனை அனுப்பி, `அவருடைய வீட்டுக் கதவைத் தட்டிப் பார்; விழித்திருந்து உடனே கதவண்டை வந்து யாரென்று கேட்டால், விவரம் சொல்லிக் கூட்டி வா; இல்லாவிடில் வந்துவிடு’ என்று அறிவித்திருந்தோம். அவனும் (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரி வீட்டுக்குச் சென்று லேசாகக் கதவைத் தட்ட, அவர் எழுந்து வந்து யாரென்று கேட்டு விவரம் அறிந்து, தகப்பனாரிடம் பேச வந்துவிட்டார். நாங்கள் இறந்தவர்களோடு பேசும் வழக்கமுள்ளவர்கள் என்பது மாத்திரம் அவருக்கு முன்னமேயே தெரியும். ஆவி உலகத்திலுள்ள தந்தையார் தமது மகனிடம், `கவலைப்பட வேண்டாம்; மனைவிக்குச் சுகமான பிரசவம் நடைபெறும்; பிறக்கப் போவது ஆண் குழந்தை’ என்று சொல்லி, குடும்ப சம்பந்தமாக எல்லா நலங்களும் உண்டாவதற்கு மேலுலகத்தில் தாமும் ஆண்டவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும், வேறு சில இடைறுகளை வரவொட்டாமல் தாம் தடுத்து விட்டதாகவும் சொல்லி, மகனை உற்சாகப்படுத்தி அனுப்பி விட்டார்.

பின்னர், அதன்படியே மனைவிக்குச் சுக பிரவசம் நடந்து ஆண் மகவு பெற்றெடுத்தாள் என்பதை அறிவோம். இதிலிருந்து ஆவி உலகத்திலுள்ளவர்கள், நாம் நினைத்த மாத்திரத்தில் அந்த இடத்திற்கு வந்து நம்முடைய நிலைகளை நன்றாக அறிய முடிகிறதென்பதை உணருகிறோம். இதனை உபமானமாகக் கொண்டுவிட்டால் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன், நாம் நினைப்பதையும் பேசுவதையும் சொல்வதையும் அறிந்து கொண்டும் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க முடியும் என்பதை யாரும் உய்த்து உணர்ந்து கொள்ளமுடியும் அல்லவா?

4. இறந்தவர் தம் தம்பியிடம் தனது மகனுடைய அந்தரங்கச் செயல்களை அறிவித்து மணம் முடிக்கச் செய்தல்:

ஒரு நாள் மதுரைக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவர், அம்மைய நாயக்கனூருக்குத் தம்முடைய சொந்த மோட்டார் காரில் வந்து, காலம் சென்ற தம் தந்தையாருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அதன்
படியே அவர் தம் தந்தையாருடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தந்தையார் தம்முடன் ஆவி உலகத்தில் இருந்த மூத்தமகன் (மதுரையிலிருந்து வந்திருந்த செட்டியாருடைய காலஞ்சென்ற தமையன்) தம்பியுடன் அவசரமாகப் பேசவேண்டுமென்று தம்முடன் வந்திருப்பதாக அறிவித்தார்.    அந்த அண்ணாவைப் பேசச் சொன்னபொழுது அவர், தம்முடைய மகன் காட்டுப்புத்தூரில் படித்துக் கொண்டிருப்பது போதுமென்றும், அவனைப் பற்றி அவ்வூரில் சில புகார்கள் வருகின்றனவென்றும், அவனும் இன்னொரு வயது வந்த பெண்ணும் காதல் கடிதங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்களென்றும், காரியம் முற்றிவிடுவதன் முன், அவனை ஊருக்குக் கூட்டிக் கொண்டு போய், வேறு பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென் றும், இனி யாதொரு தாமதமும் செய்யக்கூடா தென்றும், அம்மைய நாயக்கனூருக்குக் கொண்டு வந்திருக்கிற காரிலேயே நேராகக் காட்டுப் புத்தூருக்குப் போய் அங்குள்ள தம் மகனைக் கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பேச வந்த செட்டியாருக்கு ஒன்றும் புலப்படவில்லை. தாம் மதுரையில் அநேகரைக் காக்க வைத்துவிட்டு, இரவு திரும்பி வந்துவிடுவதாக அம்மை நாயக்கனூருக்கு வந்ததாகவும், ஆனதால் நேரே மதுரைக்குத் திரும்பிப் போய் அங்குள்ள காரியங்களைப் பார்த்துவிட்டு, மறுநாள் காட்டுப்புத்தூர் போவதாகவும் பதில் அறிவித்தார்.

ஆவி உலகத்திலிருந்து பேசிய தமையனும், மதுரைக் காரியத்தைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், காட்டுப்புத்தூர் காரியம் மிகவும் அவசரமானது என்றும், மதுரைக்குத் தந்தியைக் கொடுத்துவிட்டு, நேரே காட்டுப் புத்தூருக்குச் சென்று, தன்னுடைய மகன் விஷயத்தைக் கொஞ்சமும் தாமதியாமல் கவனித்து ஆவன செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். அதைப்பற்றித் தன் தந்தையாரிடம் செட்டியார் கேட்டபொழுது அவரும் அது மிகவும் அவசரமான காரியம்தான் என்று சொல்லவே மதுரைக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த செட்டியார், அந்த எண்ணத்தை மாற்றி, தந்தியில் தான் காட்டுப்புத்தூருக்குச் சென்று வருவதாக அறிவித்துவிட்டு, அம்மையநாயக்கனூரிலிருந்தே காரில் காட்டுப்புத்தூருக்குப் போய்விட்டார்.

அங்கு சென்று காரியங்களைப் பரிசீலனை செய்து பார்க்க, தம் தமையனார் சொன்னது முற்றிலும் உண்மை என்று புலனாயிற்று. ஆனதால், தன் தமையனார் தனக்கு அறிவித்ததுபோல், படித்துக் கொண்டிருந்த பையனுடைய படிப்புக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று, காலதாமதமில்லாமல் கல்யாணமும் செய்து வைத்துவிட்டார். நாங்களும் அக்கல்யாணத்திற்குச் சென்று சிறப்பித்தோம்.

ஆகவே, ஆவி உலகத்திலிருக்கிற தந்தை தம்முடைய மகனுடைய நடத்தைகளைக் கண்காணித்து வருகிறார் என்பதும், அதற்கு இன்னது செய்யவேண்டுமென்று அறிவிக்க ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறார் என்பதும் இதிலிருந்து புலப்படுகிறதல்லவா? அல்லாமலும் அம்மையும் அப்பனும் ஆகிய சர்வ வல்லமையுள்ள ஆண்டவனும், நாம் செய்கின்ற காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் கண்காணித்து வருகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளவும், நாம் நம்முடைய நடத்தைகளைத் திருத்தி அமைத்துக் கொள்ளவும், இச்சம்பவம் உள்ளத்தைத் தூண்டுகிற அளவுக்கு, எத்தனை புத்தகப் படிப்பும் மக்களைத் தூண்ட முடியாதன்றோ!

ஒரு மறுமொழி

  1. After death everybody born again. Then how they will become ghost and contact their family? Only those who dies in accident or suicide persons will not born again and they will roam as ghost for the rest of their life. This is written in one magazine. But I want to know the truth. Will you please clear my doubt?