இந்தத் தொடர் கட்டுரை பற்றி எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.
பெரும்பாலான கடிதங்களில் வேதனையும், சோதனையும், விம்மலும் தொனிக்கின்றன.
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான் என்பதை அறியமுடியாத, பக்குவமற்ற இளம் உள்ளங்கள், தங்கள் ஏக்கத்தை வெளியிட்டிருக்கின்றன.
சில கடிதங்கள் திகைப்பளிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, வடஆற்காடு திருப்பத்தூரிலிருந்து ஒரு சகோதரி, தனக்கு வேண்டிய வேறு ஒருவரது காதல் கவலையை வெளியிட்டிருக்கிறார்.
அந்தக் காதல், நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
ஒரு பெண் தனது பெரியப்பாவின் மகனைக் காதலிக்கிறாளாம்.
இந்துக்களின் அழுத்தமான பண்பாட்டின்படி ரத்தபந்த சகோதரனாகிய ஒருவனை அவள் காதலிக்கக்கூடாதுதான் என்றும், ஆனால் எப்படியோ இருவருக்கும் அன்பு அரும்பிவிட்டதென்றும், இது பூர்வஜென்மத் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என்றும், அவர் தெரிவிக்கிறார்.
இந்துக்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத கெட்ட கனவு, தீய நினைவு என்றே நான் இதைக் குறிப்பிடுவேன்.
“அந்த ஒருத்தி, ஒருவனை மனப்பூர்வமாகக் காதலித்துவிட்டதால் வேறொருவனை அவள் திருமணம் செய்துகொள்வது அவளது கற்பியல்பிற்குக் களங்கமல்லவா?” என்று அவர் கேட்கிறார்.
நான் அப்படி நினைக்கவில்லை.
ரத்த பந்தத்தை உணர்ந்துகொள்ளாத நினைவு காதலாகாது.
ஆகவே, அவள் வேறு ஒருவனை மணந்து கொள்வது தவறாகாது.
இந்துக்களின் உறவு முறைகள் மிகவும் கண்டிப்பானவை, அர்த்தமுள்ளவை. அதிலே தொய்வோ மாறுதலோ இதுவரை ஏற்பட்டதில்லை.
பங்காளி உறவும், மாமன் மைத்துனன் உறவும் வேறு வேறானவை.
அவை ரத்தத்தை அனுசரித்தே உண்டாக்கப்பட்டவை.
ஆகவே, பண்புகெட்ட நினைவிலிருந்து மீண்டும் வேறு திசையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒழுக்கத்திற்கு உயர்வே தவிர தவறாகாது என்பதை அந்தச் சகோதரிக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னொரு நண்பர் மகுடஞ்சாவடி, அ.தாழைரிலிருந்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“என் தாய் மாமனுக்கு ஆறு பெண்கள். அவர்களில் ஒருத்தியை நான் மனமார விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். எங்கள் காதலைத் தங்கள் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், `சரீரத்தின் தாளம் அல்ல; ஆத்மாவின் ராகம்.’ தாங்கள் குறிப்பிடும் நற்குடியைச் சேர்ந்தவள். அதைவிட மேலாக, நைந்துபோன உறவை மீண்டும் ஏற்படுத்த, என் தாயே அப்பெண்ணை மருமகளாக்கப் பெரிதும் ஆவலாய் உள்ளார். ஆனால், என் சோதனை என் தந்தையிடம்தான் ஆரம்பிக்கிறது. என் தந்தை, அவருக்கும் என் மாமாவிற்கும் முன்பு ஏற்பட்ட மனஸ்தாபத்தைக் காரணமாக வைத்து, என் மாமாவின் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்க மறுக்கிறார். அதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் என் மாமா வீட்டிற்குப் பக்கத்து வீட்டிலேயே ஒரு பெண்ணை எனக்குத் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். அவர் பார்க்கும் பெண்ணும், தங்கள் கூற்றுப்படி `நற்குடி’ப் பெண்தான். நானும் கண்டு பேசியிருக்கிறேன்… நல்ல அழகு, நல்ல குணம், நல்ல ஒழுக்கம் நிறைந்தவள்தான்.
நீங்கள் கூறுகிறீர்கள், “பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் கேட்க வேண்டும்; அவர்கள் பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள்” என்று. என்னைப் பொறுத்தவரை என் தாயும் தந்தையும் இருவேறு பெண்களை எனக்குப் பேசி முடிக்க விரும்புகின்றார்கள். அந்த இரு பெண்களுமே, நீங்கள் எத்தகைய பெண்களைச் சிபாரிசு செய்கிறீர்களோ அத்தனை தகுதிகளும் உடையவர்களே. ஆனால் என் மனம் என் மாமாவின் பெண்ணைத்தான் நாடுகிறது. என் தந்தையோ அதற்குச் சிறிதும் இணங்கத் தயாராய் இல்லை. அவரை மீறவும் எனக்குத் தைரியம் போதவில்லை. அம்மாவைப் புறக்கணிக்கவும் என் மனம் இடந்தரவில்லை. நான் அழுகிறேன்; குழம்புகிறேன்; துடிக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் தங்கள் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
`நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!’
எனவே, எனது இந்தக் கடிதத்திற்குத் தாங்கள் தயவு செய்து கொஞ்சம் மதிப்புக் கொடுத்து, என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவும். நான் எவ்வாறு நடந்து கொண்டால் பிரச்சனை தீரும் என்பதற்கு வழிகாட்டித் தாங்கள் பதிலளித்தீர்களானால் எனக்கு வழி காட்டிய `கண்ணனாக’வே தங்களைப் பூஜிப்பேன் எனக் கூறி என் கடிதத்தை முடிக்கிறேன்.’
இந்த நண்பரின் துயரம் எனக்குப் புரிகிறது.
`பெற்றோர்தான் பெண் தேடித்தர வேண்டும்’ என்று நான் சொன்னதை ஒப்புக் கொண்டே அவர், தாயும் தகப்பனும் வேறு வேறு பெண்ணைப் பார்த்தால் என்ன செய்வது என்று கேட்கிறார்.
அப்போது விஷயத்தைப் `புல் பெஞ்சு’க்கு விட்டுவிட வேண்டும். அதாவது, இருவரும் ஒரு நீதிபதியாக அமர்ந்து விடவேண்டும்.
எந்தப் பெண்ணுக்கு இவருடைய `ஓட்டு’ விழுகிறதோ அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஓட்டு விழுந்துவிட்டதாக அர்த்தம்.
மெஜாரிடியை நம்புகிற ஜனநாயகத்தில், இத்தகைய முடிவுதான் சரியானது.
பொதுவில் தங்களது காதல் துயரங்களையும் வேறு பல துயரங்களையும் ரசிகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
“நான் கடவுளை மனதார நம்புகிறேன். எனினும் எனக்கு துயரத்தின் மேல் துயரம் வருகிறதே என்ன செய்ய?” என்று தஞ்சாவூரிலுள்ள ஒருவர் கேட்கிறார்.
எப்போது நமக்குத் துயரம் தொடர்ந்து வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
வாரியார் சுவாமிகளும் அதைத்தான் கூறினார்.
சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று அர்த்தம்.
உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.
திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான்.
பக்தர்களைப் பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.
முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம் பெற்று விடுகிறது.
பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.
வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப் போய் நிதானம் வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது.
சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன.
சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.
ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.
நண்பா, வருகின்ற சோதனைகளையெல்லாம் தாங்கிப் பார்க்க வேண்டும்.
ராசி மாறும்போது, ஜாதகத்தின் நல்ல நேரம் தோன்றும்போது, அதன் பலன் தெரியும்.
“நிழலருமை வெய்யிலிலே
நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையில்
காண்மின்”
என்றார்கள்.
வீழ்ந்தவன் வீழ்ந்துகொண்டே இருந்து, வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவர இயங்கவில்லை என்று பொருள்.
ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியையும், எழுந்தவனுக்கு வீழ்ச்சியையும் மாறி மாறி நான் காண்கிறேன்.
இந்த எழுச்சியும் வீழ்ச்சியும்தான், இறைவன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கின்றன.
பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனாலே கணிக்கப்பெறுகிறது.
வேறு, வேறான பாதைகளும், வாதைகளும் இறைவனை நினைக்க வைக்கின்றன. மனிதனைப் பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி மாற்றி அமைக்கிறான்.
விதியும் பூர்வஜென்மமும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதற்குக் காரணமும் இதுதான்.
ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம், `கண்ணா’ என்றோ, `கந்தா’ என்றோ ஒருமுறை அழைத்து, அதைத் தாங்கிக்கொண்டு அமைதியடைய வேண்டும்.
`துன்பம் வரும்போது சிரி; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது’ என்று வள்ளுவன் அறுதியிட்டுக் கூறினான்.
இந்துமதம் வேரூன்றியுள்ள இந்தியாவில் காலநிலையின் மாறுபாட்டுக் கணிதத்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?
கோடைக்கால வெயிலால் காய்ந்துபோன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?
“காலம் ஒருநாள் மாறும் நம்
கவலைகள் யாவும் தீரும்!”
என் வாழ்க்கையிலேகூடப் பல நேரங்களில், துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்ததுண்டு.
அது நடக்காமற் போனதற்குக் காரணம், என்னாலும் `ஏதோ ஆகும்’ என்று இறைவன் எழுதியிருப்பதுதான்.
பலமுறை தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ், இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?
பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.
`போதுமே, இந்தக் கஷ்டம்’ என்று தோன்றும்.
`போய்ச் சேர்ந்துவிடலாம் அவனிடம்’ என்று எண்ணும்.
குழம்பும், புலம்பும், தவிக்கும், தத்தளிக்கும்; நன்மை கிடைத்தவுடன் `வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற சபலம் வரும்.
அது அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் வந்துவிடும்.
அந்த நம்பிக்கையிலேதான் நண்பா சோதனைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.
இறைவன் யாரையும் கைவிடமாட்டான்.
இது சத்தியம்.