வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால்கூட, அதற்குப் பதிலடி உனக்குக் கிடைக்கிறது.
வண்டி மாட்டுக்கு நீ வைக்கோல் போட்டால்கூட, அதற்குக் கைம்மாறாக ஒரு கவளச்சோறு உனக்குக் கிடைக்கிறது.
ஆகவே விரும்பு; முடிந்தால் செய்; முடியாவிட்டால் விரும்பு.
`விரும்பு’ என்ற உடனேயே தஞ்சாவூரைப் பார்த்து, இந்த நிலமெல்லாம் நம்முடைய நிலமாக இருக்கக்கூடாதா என்று விரும்பாதே!
அதன் பெயர் விருப்பமல்ல; ஆசை!
விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும்.
தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும்.
ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு அடுத்தவனுக்கு அரை ஏக்கர் கூடக் கொடுக்க விரும்பாதவன் இறுதியில் அனுபவிக்கப் போவது எத்தனை ஏக்கர்?
வெறும் ஆறடிதான்!
இந்து சம்பிரதாயத்தில் அதுகூடக் கிடையாது.
ஆறடி நிலத்தில் மாறி மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள்.
இறைவன் தன்னுடைய விருப்பத்தைப் பூமியில் எப்படிப் பரவலாக வைத்தான்?
நீ சிந்தும் துளித் தண்ணீர், எறும்பு குளிக்கும் படித்துறையாகி விடுகிறது.
கழுதைக்கும் உணவாகட்டும் என்றுதானே காகிதத்தைக் கண்டு பிடிக்கும் அறிவை மனிதனுக்குக் கொடுத்தான்.
விளைவுகளில் நல்லவை எல்லாம் இறைவனது விருப்பத்தின் விளைவுகளே!
`நெல்’ என்று ஒன்றை அவன் படைக்க விரும்பாமல் இருந்திருந்தால், `சோறு’ என்ற ஒன்றை நாம் கண்டிருக்க மாட்டோம்.
`இறைக்கின்ற கேணி ஊறும்’ என்று ஏன் கூறுகிறார்கள்?
`கொடுக்கின்ற இடத்திலேதான் இறைவன் அருள் சுரக்கும்’ என்பதால்.
தேங்கிய நீர் தேங்கியே கிடந்து விட்டால், நோய்களுக்கு அது காரணமாகிறது.
தேங்கிய செல்வமும் தேங்கியே கிடந்து விட்டால் பாவங்களுக்கு அது காரணமாகி விடுகிறது.
இல்லாமை கொடுமையல்ல; இயலாமை குற்றமல்ல; விரும்பாமையே பாபமாகும்.
மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் `சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது?
ஒவ்வொரு மனிதனும் ஏதோ அகத்தியர் காலத்திலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பது போலவும், இன்னும் ஆயிரம் ஆண்டுக் காலத்துக்கு வாழப்போவது போலவும் திட்டமிட்டே பொருள்களைப் பதுக்கி வைக்கிறான்.
குருட்டுப் பிச்சைக்காரனின் சட்டியில் பத்துப் பைசாவைப் போட்டுவிட்டு இருபது பைசாச் சில்லரை எடுப்பவனும் இருக்கிறான்.
செய்ய விரும்பாமையும், திருட்டுத்தனமுமே சமூகத்தைப் பாழ்படுத்துகின்றன.
பிள்ளையே இல்லாத ஒரு கோடீஸ்வரர், எல்லையே இல்லாத ஒரு வீடு கட்டி இருக்கிறார்.
கணவனும் மனைவியும் மட்டுமே மாடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் விரும்பினால் எத்தனையோ சுற்றங்களை வாழ வைக்கலாமே!
மனக் கதவு அடைத்துக் கொண்டது; அதனால் வாசற் கதவும் அடைப்பட்டு விட்டது!
கடைசியில் அவரது சமாதியாவது அந்த வீட்டிற்குள் அமையப் போகிறதா என்றால் இல்லை.
அவரது வேலைக்காரனை எரித்த இடத்திலே தான் அவரையும் எரிக்கப் போகிறார்கள்.
வெறும் பிரமை, மயக்கம், சகலமுமே நிலையாகி விட்டது போல் தனக்குள்ளே ஒரு தோற்றம்!
இத்தகைய மூடர்களுக்காகவே இந்து மதம் நிலையாமையைப் போதித்தது. |
நல்ல பதிவு.