Monthly Archives: மே, 2011

இணைப்புகளை ஸ்கேன் செய்க

படம், பாடல், வீடியோ பைல்கள் உங்கள் இமெயிலுடன் இணைக்கப் பட்டு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆர்வம் மேலிட அதனை உடனே டவுண்லோட் செய்திடக் கிளிக் செய்வீர்கள். டவுண்லோட் ஆனவுடன், பைல் மீது கிளிக் செய்து இயக்குவீர்கள். இயக்கத் தொடங்கியவுடன், சில பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை மூடலாம்; அல்லது வேறு பாதக விளைவு களை ஏற்படுத்தலாம். இந்த இணைப்பு கள் அல்லது அவற்றுடன் இணைக்கப் பட்ட புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரின் தகவல்களைக் கைப்பற்றும் கெடுதல் புரோகிராம்களாக இருக்கலாம்.
எனவே இவற்றை ஸ்கேன் செய்து டவுண்லோட் செய்வது நல்லது. இப்போ தெல்லாம், பல இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள், இது போன்ற இணைக்கப் பட்ட பைல்களை ஸ்கேன் செய்திடும் வசதியினைக் கொண்டுள்ளன. இருப்பினும் ஹேக்கர்கள் வடிவமைத்து அனுப்பும் கெடுக்கும் புரோகிராம்கள் முன் இவை தோற்றுவிடும் வாய்ப்புகளும் இருக்கலாம் என்பதால், நாம் தான் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
இதற்கென இலவசமாக ஸ்கேன் செய்திடும் தளம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் இதுதான். அப்படியே அந்த இணைப்பு பைலை scan@virustotal.com என்ற முகவரிக்கு இமெயிலாக அனுப்ப வேண்டியதுதான். இதற்கு அந்த இமெயில் அஞ்சலில், செய்தி உள்ள இடத்தில் உள்ள அனைத்து சொற்களையும் நீக்கவும். சப்ஜெக்ட் லைனில் SCAN என டைப் செய்திடவும். சில நிமிடங்களில் உங்கள் இமெயில் முகவரிக்கு, அந்த இணைப்பின் பாதுகாப்பு தன்மை குறித்த அறிக்கை கிடைக்கும். அதில் நீங்கள் அனுப்பிய பைல் எத்தனை வைரஸ் ஸ்கேனர்களால், ஸ்கேன் செய்யப்பட்டு அவை காட்டிய முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கும். இந்த இணைய தள சேவை மிக நம்பிக்கைக்குரிய ஒன்றாக அனைவரும் மதிப்பிட்டுள் ளனர். எனவே இந்த தளம் ஸ்கேன் செய்து, கெடுதல் ஒன்றும் இல்லை என்ற பைல்களை, நாம் நம்பிக்கையுடன் திறந்து பயன் படுத்தலாம்.
இது இலவசம் என்பதால், மின் அஞ்சலில் கிடைக்கும் அனைத்து இணைப்பு பைல்களையும் இதற்கு அனுப்ப வேண்டாம். சந்தேகப்படும் அல்லது அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இணைப்பு கோப்புகளை மட்டும் அனுப்பி முடிவினைப் பெறவும்.
மேலும் சந்தேகங்கள் இருப்பின், இணைப்பு பைலை டவுண்லோட் செய்து விட்டு, அதனைத் திறக்காமல் அல்லது இயக்காமல், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பில் அதனை ஸ்கேன் செய்து முடிவினைக் காணவும்.

விநாடிகள் 6 : பலி 1 – இன்று புகையிலை எதிர்ப்பு தினம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால், மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. “புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது “சிகரெட்’. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

“ஸ்டைல்’ : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் “சிகரெட்’ பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் “ஸ்டைலுக்காக’ புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

மறுப்போம், மறப்போம் மயானக்குச்சியை : இளம்வயதில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. ஒருநாளில் 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். அவர் தன்னை கெடுப்பதுடன், மனைவி, குழந்தைகளையும் கெடுக்கிறார். பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை. எனவே சிகரெட்டும் ஒரு வெடிகுண்டுதான்.

விளைவுகள்:புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். இது இருதய துடிப்பையும், ரத்தக்கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், வீரியக்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
* புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
* புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம்,
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
* எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.

நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
* ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல்
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.

புகைத்தால் புற்றுநோய் நிச்சயம் : *சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக் குழாய், சிறுநீர பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய் புற்றுநோய் ஏற்பட காரணம் புகைபிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி., என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகைப் பழக்கத்தை நிறுத்த தற்போது வாயில் மெல்லும் வகையில் சூயிங்கம், தோலில் ஒட்டிக் கொள்ளும் வகையில் நிகோட்டின் ஸ்டிக்கர் போன்றவை வந்துள்ளன.

நன்றி-தினமலர்

அதிகமாகத் தூங்கினாலும், தூங்காவிட்டாலும் ஆபத்து!


அதிகமான தூக்கமும், குறைவான தூக்கமும் மூளையை அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை முன்னதாகவே முதுமை அடைய வைக்கின்றன என்று கூறுகிறது ஓர் ஆய்வு.

இந்த ஆய்வை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஒருநாளைக்கு 6 முதல் முதல் 8 மணி நேரத்துக்கு மேலாகத் தூங்குபவர்களுக்கும், 6 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்குபவர்களுக்கும் பாதிப்பு அபாயம் இருக்கிறது என்கிறார்கள் இவர்கள். குறைவான அல்லது அதிகமான தூக்கம், ஒருவரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் வீழ்ச்சி அடையச் செய்கிறது. அத்தகையவர்களை சீக்கிரமாக மரணம் நெருங்கிவிடும் என்கிறார்கள்.

லண்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஏழு மணி நேரத் தூக்கம், மூளையை அதன் உச்சபட்சக் கூர்மை நிலைக்குக் கொண்டு போகிறது என்று கூறுகிறார்கள். ஆனால், குறைவான தூக்கம், தர்க்கரீதியாகச் சிந்திப்பதையும், மொழித்திறனையும் பாதிக்கிறது என்கின்றனர்.

குறைவான அல்லது அதிகமான தூக்கம் தொடரும்போது அதன் தாக்கம், நான்கு முதல் ஏழு வயது கூடியதற்குச் சமமாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

பரிந்துரைக்கப்படும் அளவைவிட அதிகமாகத் தூங்குவோரில் 7 முதல் 8 சதவீதம் பேர், அறிவுத் திறனைச் சோதிக்கும் தேர்வுகளில் மோசமாகச் செயல்பட்டனர்.

இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஜேன் பெர்ரி கூறும்போது, “தூங்கும்முறையைத் தடாலடியாக மாற்றுவது, மத்திய வயதின் பின்பகுதியில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துவதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இப்போதெல்லாம் 24 நேரமும் இயங்கும் சமூகச் சூழல் அதிகரித்து வருவதால் இதுகுறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மின்சாரம் தயாரிக்கப்படுவது எப்படி?

மின்சாரத்தின் அருமை, மின்வெட்டு நேரமான இந்தக் கோடைகாலத்தில் நமக்கு நன்கு தெரியும். மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா?

அதிகளவிலான மின்சாரத்தைப் பெற நாம் `ஜெனரேட்டர்’ எனப்படும் மின்னாக்கிகளைப் பயன்படுத்துகிறோம். மின்கலங்களில் இருந்து நம்மால் மிகக் குறைவான மின்சக்தியைத்தான் பெற முடியும்.

மின்னாக்கிகளில் எந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. பெரும் மின்னாக்கிகளை இயக்க `டர்பைன்கள்’ பயன்படுகின்றன. உலகில் மூன்றில் இரண்டு பங்கு மின்நிலையங் களின் மின்னாக்கி களில் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவற்றில், டர்பைன்களைச் சுழலச் செய்ய நீர் பயன்படுகிறது. இவற்றை நீர்மின் நிலையங்கள் என்கிறோம்.

சில மின்னாக்கிகள், பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. சில பண்ணைகளில் காற்று டர்பைன்களை பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக இருக்கும் மின்நிலையங்களில், கொதிகலன்களை எரிபொருளை எரித்துச் சூடாக்கி, அதிக அழுத்தத்தில் நீராவியை உண்டாக்குகிறார்கள். வெளியேறும் நீராவி, டர்பைனை சுழலும்படி செய்கிறது. மிகப் பெரிய நீராவி டர்பைன் மின்னாக்கிகள், 500 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்னாற்றலை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்னாற்றல், 50 லட்சம் விளக்குகளை எரியவைக்கப் போதுமானதாகும்.

ஒரு மின்நிலையத்தில் இதைப் போன்ற பல டர்பைன்கள் இருக்கும். கொதிகலன்களை வெப்பப்படுத்த எல்லா வகையான எரிபொருட்களையும் பயன்படுத்துகிறார்கள். பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எல்லா மின்நிலையங்களிலும் எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. இன்று நிலக்கரியை பெரும் துண்டுகளாக எரிக்கப் பயன்படுத்துவதில்லை. மாறாக, அதை மென்மையான தூளாக்கிப் பயன்படுத்து கிறார்கள்.

நீர் மின்நிலையங்கள், உயரத்தில் இருந்து விழும் நீரின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. மேலிருந்து விழும் நீர், நீர் டர்பைன்களை சுழலச் செய்கிறது. டர்பைன்கள் மின்னாக்கிகளை சுழலச் செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. உலகில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய மின்திட்டங்கள் எல்லாம் நீர்மின் திட்டங்கள்தான்.

பல மின்நிலையங் களில் எண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வாயு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

எளிதில் மின்சாரத்தைப் பெற இன்று டீசல் என்ஜின்களைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரண நீராவி டர்பைன்களை இயக்க முதலில் அவற்றை குறிப்பிட்ட வெப்பநிலைக்குச் சூடுபடுத்த வேண்டும். ஆனால், டீசல் என்ஜின்களை உடனே இயக்க முடியும்.

அணுமின் நிலையங்களில், நீரை வெப்பப்படுத்தி நீராவி ஆக்குவதற்கான வெப்பத்தை அணுக்கரு உலையிலிருந்து பெறுகிறார்கள். அதன்பின் நீராவி, டர்பைனை இயக்கி மின்சாரத்தைக் கொடுக்கிறது.

அணுக்கரு உலையில், அணு உட்கரு சிதைவடைவதால் ஏராளமான வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. உட்கருவை ஒரு கட்டுப்பாடான நிலையில் சிதைவடையச் செய்து சீரான வெப்பத்தைப் பெறுகிறார்கள். அணுமின் நிலையத்தில் சில அடிப்படை அமைப்புகள் இருக்கின்றன. அவை, அணுக்கரு உலை, உயிரியல் தடுப்பு வெப்ப மாற்றிகள் மற்றும் மின்னாக்கி ஆகும்.

கோடைக்கால அழகுப் பராமரிப்பு!

நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப் பிரச்சினையில்லாது சுலபமாகச் சமாளித்து விடலாம்.

நமது சருமத்தில் நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் (Melanin pigments) உள்ளது. அதிக நிறத்தை உடையவர்களுக்கு இது குறைவாகவும் தோலின் அடிப்பகுதியிலும் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் வெயிலில் சென்றவுடனேயே சருமம் சீக்கிரம் சிவந்து விடுகிறது. அதிகமாகவும் அவர்கள் சருமப் பாதிப்பை அடைகிறார்கள். ஆனால் நிறம் குறைந்தவர்களுக்கு இந்த நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய ஒளியினால் அதிக பாதிப்பை அடைவதில்லை. வெயிலினால் சருமப் பாதிப்பை அடைபவர்கள் அவ்வப்போது அழகு நிலையம் சென்று ஃபேஷியல், ப்ளீச் செய்யும்போது முகம் பளிச்சென இருக்கும்.

கோடைக்காலத்தில் சருமம் அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாகும் பொழுது நாற்றம் எடுக்கும். இதைப் போக்க இருவேளை குளித்து உடைமாற்ற வேண்டும். இறுக்கமான ஆடை அணியக் கூடாது. மெல்லிய பருத்தி ஆடையும், இள நிறமான ஆடையும் அணிவது நல்லது.

வெயில் காலத்தில் நமது தலைமுடிக்கும், குறிப்பாக சருமத்திற்கும் பாதுகாப்பு ரொம்பவே அவசியம்.

வியர்வையினால் தலையில் அதிகமாக அரிப்பு எடுக்கும். பேன் தொல்லை அதிகமாகும்; முடி உதிரும். ஒருவித பாக்டீரியா சருமத்தை அரிக்க ஆரம்பிப்பதால் பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள் (Anti bacterial shampoo) வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம்.

சிகைக்காயிலுள்ள காரத்தன்மையினால், அதை உபயோகப்படுத்தினாலும், பொடுகுத் தொல்லை இராது. முட்டையின் வெண் கருவைத் தலையில் தேய்த்து, சிறிது நேரத்தில் அலசலாம். எதை உபயோகப்படுத்தினாலும் தலையை நீர் கொண்டு சரியாக அலசவில்லையெனில் பொடுகு அதிகரித்துவிடும்.

வால் மிளகைப் பாலில் ஊறவைத்து அரைக்கவும். தலையில் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலையை ஒரு ஒரு பாகமாகப் பிரித்து அந்த இடத்தில் அரைத்த கலவையைத் தடவி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். (லேசாக எரிச்சல் கொடுக்கும்) பின்பு தரமான சிகைக்காய்ப் பொடி, அல்லது ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

சிகைக்காயை அரைக்கும் பொழுது அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவைகளைச் சேர்த்து அரைத்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். (வசம்பிற்கு தொற்றைத் தடுக்கும் ஆற்றல் உண்டு)

கண்களுக்கு!

உடல் அதிக உஷ்ணமாவதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.

சருமப் பராமரிப்பு

எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு தலைமுடிக்கு அருகிலேயே எண்ணெய் சுரப்பி உள்ளது. எண்ணெய் சுரப்பிகளிலிருந்து அதிகம் எண்ணெய் வெளிவரும். வியர்வைச் சுரப்பிகளிலிருந்தும் வியர்வை அதிகமாக வரும். இது குறிப்பாக டீன் ஏஜில் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும். பருத்தொல்லை கோடைக்காலத்தில் எண்ணெய் சருமத்தில் அதிகமாகிவிடும். அவர்கள் சாதாரண சோப்பை உபயோகப்படுத்தினால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் (fatty acid) எண்ணெய் சருமத்தில் சேரும் பொழுது பிரச்சினையாகி விடும். அவர்கள் எண்ணெய் விலக்கப்பட்ட சோப் வகைகளைப் (Oil free soap) பயன்படுத்த வேண்டும். இதேபோல் Soap free face wavh உண்டு. அதைப் பயன்படுத்தினால் ஃப்ரெஷ் ஆக உணரலாம். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கென்றே பிரத்யேகமாக எண்ணெய் விலக்கப்பட்ட க்ளன்சர், டோனர், மாய்சரைசர் உண்டு. அவற்றை உபயோகப்படுத்தி எண்ணெய் சருமத்தை உடையவர்கள் நல்லவிதமாகப் பாதுகாக்கலாம்.

சருமப் பாதுகாப்பிற்கான டிப்ஸ்:

வெள்ளரிக்காய், தர்பூசணி சாற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு (1 டீ ஸ்பூன் சாறு) அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

இரண்டு டீ ஸ்பூன் இளநீருடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகள் என எங்கெல்லாம் சூரியஒளி அதிகமாகப்படுகிறதோ, அந்த இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.

டீ வடிகட்டிய டிகாஷனை எடுத்துக்கொள்ளவும். (இரண்டாம் முறை உபயோகப்படுத்தியதாக இருக்கலாம். அல்லது லைட்டான டிகாஷனாக இருக்கலாம்.) முல்தானி மெட்டி பவுடர் ஒரு ஸ்பூனுடன் இரண்டு டீ ஸ்பூன் டீ டிகாஷன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இந்தக் கலவையை வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்றுவந்த பிறகும் உபயோகிக்கலாம்.

குளிக்கும் பொழுது:

வியர்வை நாற்றம் போக, குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.

ஒரு வாளி தண்­ணீரில் 2 சிட்டிகை கற்பூரத்தூளைப் போட்டுக் குளித்தால் வியர்வை நாற்றம் அகலும்.

முகத்திற்கு கோடைக்காலத்திற்கென்று பிரத்யேகமாக பழவகை ஃபேஷியல் செய்வது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, தக்காளி, வெள்ளரிக்காய், இளநீர் இவைகளைக் கொண்டு முகத்திற்குப் பூசலாம். (சைனஸ் தொந்தரவு உள்ளவர்களைத் தவிர அனைவரும் இந்த முறையைப் பின்பற்றலாம்).

கோடைக்காலங்களில் வெளியில் அலைய நேரிடும்பொழுது இளநீர், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழ ஜூஸ் அருந்துவது நல்லது. சன் ஸ்ட்ரோக் (Sun Stroke) வராமல் தடுக்க ஒரு வெங்காயத்தைக் கையிலோ, உடலிலோ வைத்திருந்தால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம்.

சைகைகளால் பேசிக்கொள்ளும் சிம்பன்சிகள்!

சிம்பன்சி குரங்குகள் சைகைகளில் பேசிக்கொள்ளும் என்பதை நாம் முன்பே அறிவோம். ஆனால், நமக்குத் தெரிந்ததை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையில், சுமார் 66 வகையான மேனரிசங்களை அவை பயன்படுத்துகின்றன என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்திலுள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளன. உகண்டாவில் சிம்பன்சிகளுக்கான சரணாலயம் ஒன்று உள்ளது. இங்கு தான் நடத்தப்பட்டது அந்த ஆய்வு.

தன் முதுகின் மீது ஏறிக் கொள்ளும்படி குட்டியிடம் சொல்வதற்கும், குட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு விளையாட கற்றுத் தருவதற்கும் என வெவ்வேறு காரணங்களுக்கு வெவ்வேறு உடல் அசைவுகள், சைகைகளை அவை பயன்படுத்துகின்றன.

ஆனால், காடுகளில் வசிக்கும் சிம்பன்சிகள் மற்ற குரங்குகளை வேட்டையாடுவதும், பெண் சிம்பன்சிகளை சிறைவைப்பதும், தங்களுக்குள்ளேயே கோஷ்டி மோதல்களில் ஈடுபடுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.

நம்ம ஊர் தாதாக்கள் கோஷ்டி மோதல்களை கற்றுக் கொண்டதும் இங்கிருந்து தானோ?

 

மொச்சைக் கொட்டை கருவாட்டுக் குழம்பு

தேவையான பொருட்கள்

மொச்சைப்பயிறு – 1 கையளவு
கருவாடு – சிறிதளவு
கத்தரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 100 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
கறிவேப்பிலை – 2 கொத்து
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
புளி – எலுமிச்சம் பழ அளவு
கடுகு – சிறிதளவு

செய்முறை

* மொச்சைப் பயிறை வேக வைத்துக் கொள்ளவும்.

* கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும்.

* கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

* நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கவும்.

* இப்போது தனியாத்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றவும். கத்தரிக்காய் சேர்த்து வேக வைக்கவும்.

* காய் வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் வேக வைத்த மொச்சைக்கொட்டை, கருவாடு இவற்றை சேர்க்கவும்.

* உப்பை சரி பார்த்து குழம்பு கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.

* இப்போது மணக்க மணக்க மொச்சைக் கொட்டை கருவாட்டுக் குழம்பு ரெடி.

செப்’ தாமு

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சூப்பர் மீல் மாடல்

திட்டமிட்ட சமவிகிதமான உணவு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சர்க்கரை நோயை முற்றிலும் அகற்றி நோயாளியினுடைய உடல் நலத்தை மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டு வரும். சரியில்லாத உணவை சாப்பிடும் பொழுது உடம்பில் நச்சுத் தன்மை மிகுந்த கழிவுகள் நிறைய சேர்ந்து விடுகிறது. அதே சமயத்தில் உடம்புக்குத் தேவையான அமினோ ஆசிட்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உடம்பில் சேராமல் தடுக்கப்படுகின்றன. விட்டமின்– களும் நார்ச்சத்துக்களும்கூட இப்படி அகற்றப்படுகின்றன. இப்படி இரண்டு விதமாகவும் நம்முடைய உடம்பு பாதிக்கப்படுகிறது.

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் திட்டமிட்ட உணவு என்றால் என்ன என்றே உணராமல் இருக்கின்றனர். அப்படியே அதை உணர்ந்தாலும் தம்முடைய உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.  இப்படிப்பட்ட தவறான உணவு பழக்கங்களால் இவர்களுடைய குளுக்கோஸ் லெவல் அளவுக்கதிகமாக ஏறுகிறது. குளுக்கோஸ் லெவல் ஏறுவதால் இன்சுலீன் சுரப்பதுவும் அதிகரிக்கிறது. அவற்றோடு சேர்ந்து இன்சுலின் எதிர்ப்பு, எடை கூடுதல், கட்டுக்கடங்காத பசி மற்றும் களைப்பு இவையெல்லாம் சேர்ந்து வருகிறது. சரியாக திட்டமிடப்பட்ட உணவை நாம் சூப்பர் மீல் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட உணவு உடம்பில் நிகழ்ந்துள்ள தவறுகளை சரி செய்து உடல் நலத்தை மீண்டும் நார்மலுக்குக் கொண்டு வரும்.

சூப்பர் மீல் மாடல்

ஊட்டமுள்ள உணவைப்பற்றி ஒருவருக்கு விவரம் தெரிந்திருந்தாலும், இந்த உணவுப் பண்டங்களை எப்படி சேர்த்து சாப்பிட்டால் நல்லது என்று அவருக்கு தெரியாமலிருக்கலாம். மேலும் கலோரிகளை கணக்கிடுவது ஒரு சிக்கலான வேலையாகும். இதனாலேயே பல பேர் தம்முடைய உணவு பழக்கவழக்கங்களை மாற்றாமல் பழைய பழக்கவழக்கங்களையே நீட்டிக்க விரும்புகின்றனர்.

உடம்பிலுள்ள ஒரு மாதிரி செல்லை எடுத்துக் கொண்டால், அதற்குள் தண்ணீர், கொழுப்பு, புரோட்டீன், தாதுக்கள் மற்றும் என்ஸைம்கள் எல்லாம் இருக்கின்றன. இம்மாதிரி ஒரு முறையான விகிதத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் எல்லாம் கலந்த ஒரு உணவுத் திட்டத்தை நாம் தயாரித்துக் கொள்ளலாம். இப்படி முறையாக தயாரிக்கப்பட்ட உணவுத் திட்டத்தில் கீழ்கண்ட அம்சங்கள் காணப்படும்:

நம்முடைய சாப்பாட்டுத் தட்டில் பாதி தட்டாவது காரட், வெங்காயம், பாராக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகளால் நிறைந்து இருக்க வேண்டும். மேலும் ஒரு கால் பகுதி தட்டு சால்மண்ட், சார்டின், மற்றும் டூனா போன்ற மீன் வகைகள் கொண்ட புரதச் சத்தாக இருக்க வேண்டும். கடைசி கால் பாகம் பழுப்பு நிற அரிசியாக இருந்தால் நலம். இறுதியாக நாம் உண்ணப் போகும் காய்கறிகளின் மேல் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் விட்டுக் கொள்ளலாம். இந்த ஆலிவ் எண்ணெயின் மூலம் நல்ல கொழுப்புச் சத்து நம் உடம்பிற்குக் கிடைக்கின்றது.

கலோரி ரீதியாகப் பார்த்தால் நம்முடைய உணவில் 40 to 50%ஆவது கலோரி கள் நமக்கு கார்போஹைட்ரேட்லிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும்.  நோயாளி கடினமாக உழைக்கக் கூடியவர் என்றால், 50 % கலோரிகளை கூட இப்படி சேர்த்துக் கொள்ளலாம். நோயாளி அதிக நடமாட்டம் இல்லாதவர் என்றால், அவர் கலோரிகளை 40%ஆக குறைத்துக் கொள்ளலாம்.
நன்றாகத் திட்டமிடப்பட்ட உணவில் புரதச்சத்து 20%லிருந்து 30 % வரை இருக்கலாம். நன்றாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் 30 %உம் குறைவான உடற்பயிற்சி உள்ளவராக இருந்தால் 20 %உம் வைத்துக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக இத்தகைய உணவுத் திட்டத்தில் கொழுப்புச் சத்து 25இலிருந்து 30 % வரை இருக்கலாம். இந்தக் கொழுப்புச் சத்தில் 90%ஆவது தாவர எண்ணெய்களும் மற்றும் மீன் எண்ணெய்களுமாக இருத்தல் நலம்.  மீதி 10% தான் நிலத்தில் வாழும் பிராணிகளிடமிருந்து எடுக்கப்பட்ட கொழுப்புச் சத்தாக இருக்கலாம். தாவர எண்ணெய்கள், பிராணிகளிடம் இருந்து எடுக்கப்படும் கொழுப்புச் சத்தைவிட சிறந்தது ஆகும். இப்படித் தாவர எண்ணெய்களையும், மீன் எண்ணெய்களையும் நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுதும், தினமும் 3 வேளைக்குப் பதிலாக 5 வேளை சாப்பிடும் பொழுதும் நமக்குப் பசி குறைகின்றது. அதே சமயத்தில், கொழுப்புச் சத்து ஜீரணமாவதும் அதிகரிக்கின்றது.
பொதுவாக நன்றாக வடிகட்டிய குடிநீரை நாம் தினமும் 6இலிருந்து 9 டம்ளர்கள் வரை குடிக்கலாம். அவரே நிறைய காய்கறிகள் சாப்பிடுபவராக இருந்தால், 5 அல்லது 6 டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.

மேற்கண்டபடி நாம் உணவுத்திட்டத்தைத் தயாரிக்கும் பொழுது, கலோரிகள் கீழ் கண்டவாறு பிரிகின்றன.

கார்போஹைடிரேட்  50 கிராம்  200 கலோரி
புரதம்  37.5 கிராம்  150 கலோரி
கொழுப்பு  16.7 கிராம்  150 கலோரி
தண்ணீர்  16 அவுன்ஸ்  0 கலோரி

பழச்சாறுகளோ அல்லது டீ, காபி என்று ஏதேனும் குடித்தால் இவற்றிலுள்ள கார்போஹைட்ரேடையும் நம்முடைய மொத்த கார்போஹைட்ரேட் கணக்கில் சேர்க்க வேண்டும் . இல்லாவிட்டால் நம் கணக்கு தப்பாகி விடும்.

இப்படி நாம் சாப்பிடுகின்ற ஒவ்வொரு சாப்பாடும் இந்த மேற்கண்ட நான்கு ஊட்டச் சத்துக்களும் முறையாக விகிதத்தில் கலக்கப்பட்டவையாக இருந்தால் தேவையில்லாமல் நம்முடைய உடம்பில் குளுக்கோஸ் அதிகரிக்காது. இப்படிப்பட்ட சூப்பர் மீல்ஸ் சாப்பாட்டை நாம் அடிக்கடி சாப்பிட்டோம் என்றால், அதையே நாம் தொடர்ந்து செய்தோம் என்றால் நாளடைவில் நம்முடம்பில் விளைந்துள்ள சர்க்கரை நோய் விலகி, உடம்பு சகஜ நிலைக்குத் திரும்பும். இப்படிச் செய்யாமல் தொடர்ந்து வழக்கமாக சாப்பிடுவதைப் போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், நம் உடல்நிலை மேலும் மோசமாகி, சீர் செய்ய முடியாத அளவிற்குக் கெட்டுவிடும்.

சூப்பர் மீலுடைய விசேஷ சிறப்புகள்:

சூப்பர் மீலுடைய விசேஷ சிறப்புகள் நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டத்தை வழங்கி மூட்டுத் தேய்மானம் மற்றும் ரத்தக் குழாய் வெடிப்பு போன்ற விளைவுகளில் இருந்து நம் உடம்பை காப்பாற்றுகின்றது. மேலும் தவறான உணவுப் பழக்கங்களால் விளைந்துள்ள இன்சுலின் எதிர்ப்பு, நச்சுப் பொருட்களின் சேர்ப்பு மற்றும் உடல் பருமன் போன்றவைகள் தடுக்கப்படும்.

சிறிய அளவு சாப்பாடுகள் :

நம் சாப்பாட்டின் அளவை குறைத்து எண்ணிக்கையை அதிகரித்தோம் என்றால், ஜீரணிக்க வேண்டிய வேலைப் பளு நம் உடம்பிற்குக் குறைகின்றது. அதே சமயத்தில் இன்சுலின் சுரப்பதும் குறைகின்றது. இன்சுலின் அளவிற்கு அதிகமாக சுரக்கும் பொழுது நம் உடம்பில் கொழுப்பு சேருவது அதிகமாகின்றது. மேலும் இப்படி இன்சுலின் அதிகமாகச் சுரக்கும் பொழுது நம்முடம்பிலுள்ள பி காம்ப்ளதஸ் விட்டமின் கள், விட்டமின் சி, குரோமியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஆகிய எல்லாம் வீணாக்கப்படுகின்றது.

தினசரி குறைந்த பட்ச உணவு:

கலோரி கணக்குகள் போடுவதற்குச் சிரமமாக இருந்தால், நம்முடைய உடம்பினுடைய அன்றாட குறைந்த பட்ச தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்காவது நாம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் நம்முடம்பு செயல்படுவதற்குத் தேவையான எனர்ஜியும் அதற்குக் கிடைக்கும்.

  • தினசரி 6இலிருந்து 9 கப் பழங்களும், காய்கறிகளும் சாப்பிடலாம். ஒவ்வொரு வேலை சாப்பிடும் பொழுதும் இரண்டு கப் காய்கறிகளை யும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஒவ்வொரு வேளை சாப்பிடும் பொழுதும், ஒன்றிலிருந்து ஒன்றரை தேக்கரண்டி அளவிற்குத் தாவர எண்ணெய் ரூபத்தில் கொழுப்புச் சத்தை சேர்க்க வேண்டும்.
  • ஒவ்வொரு நாளைக்கும் தினமும் 6இலிருந்து 9 டம்பளர் தண்ணீர் குடிப்பது நல்லது. ஒவ்வொரு வேலை சாப்பிடும் பொழுதும் 2 டம்பளர் தண்ணீராவது குடிப்பது நல்லது.
  • தினமும் 2 கப் முழுதானியத்திலிருந்து சமைக்கப்பட்ட அரிசி சாதத்தை யாவது அல்லது முழு கோதுமை தானியத்திலிருந்து செய்யப்பட்ட 2 அல்லது 3 ரொட்டித் துண்டுகளையாவது சாப்பிடுவது நல்லது.
  • தினமும் 2 அல்லது 3 கப் மெலிந்த புரதச்சத்தை உட்கொள்வது நல்லது. மீன், கறி மற்றும் கொழுப்புச்சத்து குறைந்த பால் ஆகிய ரூபத்தில் நாம் இந்த மெலிந்த புரதச்சத்தை உட்கொள்ளலாம்.

சாப்பிடும் வேளை அதிகரிப்பு:

நாம் சாப்பிடும் வேளைகளை குறைந்த பட்சம் 4 தடவைகள், அதிகபட்சம் 6 தடவைகளாக அதிகரிக்கும் பொழுது இன்சுலின், கொலஸ்ட்ரால், ஓமோஸிஸ்டின் மற்றும் டிரை கிளிஸரைடுகள் ஆகியவற்றின் உற்பத்தி குறைகிறது. இதனால் ரத்தம் அடர்த்தியாவது தவிர்க்கப்படுகின்றது. சாப்பாட்டின் அளவு குறையும் பொழுது நம்முடைய ஜீரண  சிஸ்டத்தின் வேலைப் பளுவும் குறைகின்றது. 400லிருந்து 500 கலோரி அளவு கொண்ட சாப்பாட்டை எடுத்துக் கொண்டால் அந்த உணவின் கிராம் மற்றும் கலோரி பாகுபாடு கீழ்க்கண்டவாறு அமையும்.
சூப்பர் கார்போஹைட்ரேட்:

  • பிரகாசமான நிறமுடைய ப்ராக்கோலி, காலிஃபிளவர்,
  • இம்மாதிரியே பிரகாசமான நிறமுடைய காரட், வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகள்.
  • இம்மாதிரியே நல்ல நிறமுள்ள ஆப்பிள் மற்றும் திராட்சைப் பழங்கள்.
  • முழுமையான தானியங்களாலான பார்லி, ஓட்ஸ்,மற்றும் முளைக் கட்டிய தானியங்களிலிருந்து செய்யப்பட்ட ரொட்டி.

சூப்பர் புரதங்கள்:

  • குளிர்ந்த நீரில் வாழக்கூடிய சால்மன், டிரவுட், சார்டின்ஸ், டூனா மற்றும் மேக்ரல் போன்ற மீன் வகைகள்.
  • வால்நட், ஆல்மண்ட் போன்ற கொட்டைகள்.
  • இயற்கை முறையில் கோழிப்பண்ணைகளில் இடப்பட்ட முட்டைகள். முட்டையில் உள்ள வெள்ளை பாகம் மற்றும் தயிர் போன்றவைகள்.
  • இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பிராணிகளுடைய கறிவகைகள்.
  • நீர்வாழ் உயிரினங்களான இறால், மற்றும் நண்டு வகைகள்.

சூப்பர் கொழுப்புச் சத்துக்கள்:

  • தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத ஆலிவ் ஆயில், மேகடமியா நட் ஆயில் மற்றும் அவகாடோ, ஆல்மண்ட் போன்றவைகள்.
  •  எண்ணெயில் உள்ள ஒமேகா  3, அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்.

சூப்பர் திரவங்கள்:

  • வடிகட்டிய தண்ணீர்.
  • பச்சை காய்கறி ஜுஸ் மற்றும் பழச்சாறு.
  • பச்சை நிறத் தேநீர் மற்றும் மூலிகைத் தேநீர்.

நார்ச்சத்து:

தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் 32இலிருந்து 35 கிராம் வரை நார்ச்சத்து இருப்பது நல்லது. நட்ஸிலிருந்து பெறப்படும் தவிடு மற்றும்  ஆர்ட்டிசோக் ஆகியவைகளிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்து தண்ணீரில் கரையாமல் இருக்கக் கூடியவையாகும். ஆப்பிள் தோல், பிராக்கோலி, உருளைக்கிழங்கு தோல் மற்றும் ஓட்ஸ்மீல் என்று இவைகளில் இருந்து கிடைக்கக் கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரையக் கூடியதாகும். சராசரியாக நாம் தினமும் 15 கிராம் அளவிற்குத் தான் நார்ச்சத்தை உட்கொள்கிறோம். இந்த நார்ச்சத்து அளவு அதிகரிக்க வேண்டுமென்றால், நாம் ஒவ்வொரு வேளையும் நம்முடைய சாப்பாட்டுடன் கூடுதல் நார்ச்சத்து வழங்கக் கூடிய பொருட்களை சாப்பிட வேண்டும்.

புளித்த உணவுகள்:

இயற்கையாக தயாரிக்கப்படுகின்ற தயிர் போன்ற புளித்த உணவுகள் நம்முடைய உணவுக் குடலில் ஜீரணத்திற்கு உதவி செய்கின்ற பாக்டீரியாக்கள் வளர உதவுகின்றன. மேலும் நம்முடம்பில் பி விட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குரோமியம், ஜீரண என்ஸைம்கள் போன்றவைகளையும்  இந்த பாசிடிவ் பாக்டீரியாக்கள் பலப்படுத்துவதால் நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது. இப்படி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் பொழுது, நோய் விளைவிக்கக் கூடிய கிருமிகள் மற்றும் புற்று நோய் செல்கள் இவையெல்லாம் அழிக்கப்படுகின்றன.

  • புளித்த உணவுகள் நோய் கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தியை நமக்கு கொடுக்கின்றன.
  • இந்த புளித்த உணவுகளில் இருக்கின்ற பாசிடிவ் பாக்டீரியா நம்முடைய சிறுகுடலை கிருமி தாக்குதலிலிருந்து காப்பாற்றுகின்றது.
  • சில புளித்த உணவுகள்   தனித்து இயங்கும் மூலக்கூறுகளை எதிர்க்கக் கூடிய என்சைம்களை-களை உண்டு பண்ணுவதால் இந்தத் தானியங்கி மூலக் கூறுகள் ஆபத்து விளை விக்காமல் செயலிழந்து போகின்றன.
  • பால் புளிக்கும் பொழுது, பாலில் உள்ள லேக்டோஸ் என்ற சர்க்கரை எளிதில் ஜீரணமாகக்கூடிய லேக்டிக் அமிலமாக மாறுகின்றது.
  • சிறு குடலில் உள்ள ஜீரணத்திற்கு உதவக் கூடிய நல்ல பாக்டீரியாக்களுக்கு ஆன்டிபயாடிக், குளோரின் கலந்த தண்ணீர், மதுபானங்கள் மற்றும் அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்கள் என்று இவை எல்லாம் ஊறு செய்யக் கூடியவைகளாகும்.

ஊட்டச்சத்திற்கு உதவும் கூடுதல் உணவுப் பொருட்கள்:

இப்பிரிவின் கீழ் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சில மூலிகைகள் எல்லாம் அடங்கும். ஆனால் நாம் முறையாக ஒரு சூப்பர் மீல் உணவுத் திட்டத்தை பின்பற்றும் பொழுதுதான் இந்தக் கூடுதல் உணவுப் பொருட்கள் நமக்கு உண்மையிலேயே பலன் அளிக்கும். இப்படி உதவக்கூடிய கூடுதல் உணவுப் பொருட்கள் சில பின்வருமாறு:

  • ஆன்டி ஆக்ஸிடண்ட், விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் கிரன்பேரி   பழச்சாறு மற்றும் பச்சை நிற தேநீர் ஆகியவைகள் ஆகும்.
  • கொழுப்பு மற்றும் எண்ணெய், ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கொண்டுள்ள மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள் குளோக்கோஸ் கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன.
  • விட்டமின்கள்  பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் என்ற மூன்றினுடைய ட்ஞுச்ஞணிடூடிண்ட்-த்திற்கு உதவுகின்றன. மேலும் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் நம்முடைய உடல் இயக்கத்திற்கும் மற்றும் செல்களின் ஆரோக்கியத்திற்கும் உதவு கின்றன.
  • தாதுக்கள்  மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் நம்முடம்பில் எலக்ட்ரோலைட் மற்றும் கஏ என்று சொல்லப்படுகின்ற அமிலகார சமநிலை ஆகியவற்றை பராமரிக்க உதவுகின்றன. வனடியம், குரோமியம் போன்ற தாதுக்கள் கார்போஹைடிரேட் மெட்ட பாலிசத்திற்கும், குளுக்கோஸ் கட்டுப்பாட்டிற்கும் உதவுகின்றன.
  • நார்ச்சத்து  சைலியம் தவிடு போன்ற கரையாத நார்ச்சத்துக்கள் மலச் சிக்கலை தவிர்க்க உதவுகின்றன. ஓட்ஸ், தவிடு போன்ற கரையக் கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது.
  • என்சைம்கள்  அமிலேஸ், புரோட்டீயேஸ், ரிப்பேஸ், லேக்டேஸ் போன்ற என்சைம்கள் ஜீரணத்திற்கு உதவுகின்றன.
  • சூப்பர் உணவுகள்  கடல் காய்கறிகள், தேனீக்களால் சேகரிக்கப்பட்ட மகரந்தத் தூள், முளைவிட்ட நெல் ஆகியவை மற்ற ஊட்டச் சத்துக்களை நன்றாக ஜீரணிக்க உதவுகின்றன.
  • உடம்பை சுத்தப்படுத்துதல்  வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒரு தடவையும், அதிக பட்சமாக நான்கு தடவையும் நம் உடம்பில் சேர்ந்துள்ள கழிவுகளை நாம் அகற்றிக் கொள்ளலாம்.

கலோரி பிளானிங்:

நம்முடைய எடையை தக்க வைத்துக் கொள்வதற்கு வழக்கமாக 2250 கலோரி தேவைப்படும். இருக்கின்ற எடையை குறைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் கலோரி தேவைகளை 20% குறைத்து 1800 கலோரிகளாக மாற்றிக் கொள்ளலாம். இந்த 1800 கலோரிகளையும் 40% +30% +30% என்ற விகிதத்தில் கார்போஹைட்ரேட் புரோட்டீன் மற்றும் கொழுப்பு என்ற விகிதத்தில் நாம் பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் பிரிக்கும் பொழுது,

கார்போஹைட்ரேட்         40 %    1800 = 720
புரோட்டீன்         30 %    1800  =540
கொழுப்பு         30 %    1800 = 540

ஒரு கிராம் கார்போஹைட்ரேடில் 4 கலோரிகளும், ஒரு கிராம் புரோட்டீனில் 4 கலோரிகளும், ஒரு கிராம் கொழுப்பில் 9 கலோரிகளும் இருக்கின்றன.

கார்போஹைடிரேட்     720/4  180 கிராம்
புரோட்டீன்    540/4  135 கிராம்
கொழுப்பு    540/9    60 கிராம்

நாம் இப்பொழுது ஒரு வேளை சாப்பாட்டில் எவ்வளவு கார்போஹைடிரேட் புரோட்டீன் மற்றும் கொழுப்புகள் அடங்கும் என்று பார்க்க வேண்டும். தினமும் நாம் 4 வேளை சாப்பிடப் போகிறோம் என்றால் கிராம் கணக்கு கீழ்கண்டவாறு பிரியும்.

கார்போஹைடிரேட்      180/4   45 கிராம்
புரோட்டீன்     135/4   33.75 கிராம்
கொழுப்பு       60/4    15 கிராம்

சூப்பர் மீல் தயாரித்தல்:

சூப்பர் மீலை இரு வகையாகத் தயாரிக்கலாம். பார்வைக்கேற்றாற்போல் தயாரிப்பது ஒரு வகை. திட்டமிட்டுத் தயாரித்தல் மற்றொரு வகை. பார்வையின்படி போனால், நம்முடைய தட்டில் பாதியாவது பிரகாசமான நிறம் கொண்ட காய்கறி களால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஒரு கால் பாகம் சூப்பர் புரோட்டீனாலும், கடைசி கால் பாகம் சூப்பர் கொழுப்புச் சத்தாலும், நிரப்பப்பட்டிருக்க வேண்டும். இப்படி அமைவது ஓர் சூப்பர் மீல் ஆகின்றது. திட்டமிட்டு தயாரித்தால் அது கீழ்கண்டவாறு அமையும்.

  • சூப்பர் கார்போஹைட்ரேட்  1 லீ கப் நீராவியில் வேகவைத்த ஸ்பினக் மற்றும் 1 கப் ப்ரோக்கோலி.
  • சூப்பர் புரோட்டீன்  4 லிருந்து 5 அவுன்ஸ் அளவிற்கான வேகவைத்த சால்மன் மீன்.
  • சூப்பர் கொழுப்பு  1லீ தேக்கரண்டி ஆலிவ் ஆயிலை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்க்க வேண்டும்.
  • சூப்பர் திரவம்  16 அவுன்ஸ் வடிகட்டிய குடிநீர்.

Death to Diabetes என்ற நூலை எழுதிய Dewayne Mcculleyஎன்பவர் தனக்கென்று சொந்தமாக காலை உணவுப் பட்டியலைத் தயாரித்துள்ளார். அவருடைய காலை உணவு கீழ்வருமாறு அமைகின்றது:

உணவு    கார்போரைடிரேட்
கலோரி    புரதத்தின்
கலோரி    கொழுப்பின்
கலோரி    மொத்த
கலோரி    நார்ச்சத்து
கிராமில்

1 கப் ப்ராக்கோலி    120    24    0    144    4
1.5 அவுன்ஸ் வேக வைத்த சால்மன்    0    48    30    78    0
2 தேக்கரண்டி புரோட்டின் பவுடர்    0    62    4    66    4
1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில்    0    0    115    115    0
8 அவுன்ஸ் காரட் ஜூஸ்    84    9    3    96    2
16 அவுன்ஸ் வடிகட்டிய நீர்    0    0    0    0    0
மொத்த கலோரி    204    143    152    499    10
கலோரியின் சதவிகிதம்    41 %    21 %    30 %

வெளியில் சாப்பிடுவதற்கான வரையறைகள்:

நாம் வீட்டில் சாப்பிடும் பொழுது திட்டமிட்ட உணவை சாப்பிடுவது எளிது. ஆனால் வெளியில் சாப்பிடும் பொழுது நமக்கு வழங்கப்படும் உணவு நம் கட்டுப்பாட்டில் இல்லை.  இருந்தாலும் நாம் ஓரளவிற்கு சில விதிமுறைகள் அனுசரிக்கலாம்.

  • நம்முடைய இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு நம்முடைய கட்டுப்பாட்டில் வரும் வரையிலும் நாம் வெளியில் சாப்பிடுவதை வாரம் இரண்டு தடவைகளாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை நோயாளிகளின் விசேஷ தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சிற்றுண்டிச் சாலைகளுக்கு போகாமல் இருப்பது நல்லது. பெரும்பாலான சிற்றுண்டிச் சாலைகளில் நாம் முன்னமே அறிவித்தால், சர்க்கரை நோயாளிகளின் விசேஷ தேவைகளை அவர்கள் அனுசரிப்பார்கள்.
  • உணவுப் பட்டியலை நிதானமாகப் படித்துப் பாருங்கள். குறிப்பிட்ட உணவு எப்படித் தயாரிக்கப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், தயக்கமில்லாமல் ஊழியர்களிடம் விசாரியுங்கள். அவர்களும் உங்களுக்குத் தேவைப்பட்ட விபரங்களை வழங்குவார் கள்.
  • உணவுப் பட்டியலில்  இருக்கின்ற உணவுப்பண்டங்கள் கொழுப்புச் சத்து கூடுதலானவையா அல்லது குறைவானவையா என்பதை தெரிவிக்கக் கூடிய வார்த்தைகள் இருக்கின்றனவா என்று கவனியுங்கள். வறுவல் என்று குறிப்பிட்டிருந்தால் அதில் கொழுப்புச் சத்து அதிகம் என்ற அர்த்தம். வேக வைத்தது என்றால் கொழுப்புச் சத்து குறைவானது என்று அர்த்தம்.
  • வறுக்கப்பட்ட உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். வேக வைத்த உணவுப் பண்டங்களில் கொழுப்புச் சத்து குறைவு என்பதால் அவற்றைச் சாப்பிடலாம். நாம் ஆர்டர் செய்ய விரும்புகின்ற உணவுப் பண்டங்களில் எவ்வளவு வெண்ணெய் மற்றும் எண்ணெய் போன்றவைகள் கலந்துள்ளன என்பதை நாம் விசாரித்தும் தெரிந்து கொள்ளலாம்.
  • நீங்கள் ஆர்டர் செய்தது மிகவும் அதிகமாகி விட்டது என்றால் சாப்பிட்டது போக மறுபாதியை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் சாப்பிடுங்கள். கறி மற்றும் மீன் ஆர்டர் செய்திருந்தீர்கள் என்றால் கறி 3 அவுன்ஸாகவும், மீன் 5 அவுன்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம்.
  • உணவுப் பண்டங்களை ஆர்டர் செய்யும் பொழுது, கொழுப்புச்சத்தை குறைவாகவே கலக்கச் சொல்லுங்கள். உங்கள் முன் வைக்கப்படும் உணவுப் பண்டத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக தென்பட்டால், நீங்களே கூடுதலாக உள்ள கொழுப்பை அகற்றிவிடுங்கள்.
  • வெளியில் சாப்பிடும் பொழுதுகாபியைத் தவிர்க்கலாம்.
  • சீனச் சிற்றுண்டிச் சாலைகளுக்கு சென்றீர்கள் என்றால், ப்ரைடுரைஸ் பதிலாக, வெள்ளை சாதத்தையே ஆர்டர் செய்யுங்கள். கோழி, மீன் மற்றும் கறி வகைகள் ஆர்டர் செய்தீர்கள் என்றால் பாதியை இங்கு சாப்பிட்டுவிட்டு மீதியை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.
  • பீட்சா சாப்பிட இத்தாலியன் சிற்றுண்டி சாலைக்கு சென்றீர்கள் என்றால் நீங்கள் சாப்பிடும் பீட்சாவில் அதிக ஜுஸ் மற்றும் கொழுப்புச் சத்து மிகுந்த கறித்துண்டுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விரைவுச் சிற்றுண்டி சாலைக்குச் செல்லுதல்:

விரைவுச் சிற்றுண்டி சாலைகளிலும் நாம் கீழ்கண்ட விதிமுறைகளைக் கடைபிடிக்கலாம்:

  • விரைவு சிற்றுண்டி சாலைக்கு செல்வதை நாம் வாரம் இரு தடவைகள் என்று சுருக்கிக் கொள்ளலாம். அதற்கு மேலும் அடிக்கடி சென்றோம் என்றால் நம்முடைய உடல் பருமன் அதிகரிக்க நேரிடும்.
  • வறுத்த உருளைகிழங்கிற்குக்குப் பதிலாக வேகவைத்த உருளைக் கிழங்கை சாப்பிடுங்கள்.
  • ரெகுலர் பிட்சாவிற்குப் பதிலாக காய்கறிகள் நிறைந்த பிட்சாவை சாப்பிடுங்கள்.
  • குளிர்பானங்கள், ஈடிஞு குணிஞீச், காபி ஆகியவற்றிற்குப் பதிலாகத் தேநீர் சாப்பிடுங்கள்.
  • கீழ்கண்ட காலை உணவுகள் உடம்பிற்கு நல்லது:

திரவம்   குடிதண்ணீர் அல்லது பழச்சாறு
கார்போஹைட்ரேட்  முழுதானியத்தால் செய்யப்பட்ட ரொட்டி.
பால் வகை  ஆடை நீக்கப்பட்ட பால் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர்.

  • மதியம் மற்றும் இரவு உணவு:

வேக வைத்த கறி வகைகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் மற்றும் வேக வைத்த மீன் வகைகள் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு போன்ற பழச்சாறுகள்.

ஸ்லீப், ஹைபர்னேட், ஷட் டவுண் – எது வேண்டும்?

ஸ்கிரீன் சேவர் வந்த பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்வி கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலரின் மனதில் அடிக்கடி எழுகிறது.  இதற்கான விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.
முதலில் இந்த சொற்கள் கம்ப்யூட்டரின் எந்த செயல்பாட்டினைக் குறிக்கின்றன எனச் சற்றுத் துல்லியமாகப் பார்ப்போம். கம்ப்யூட்டர் ஒன்று sleep அல்லது standby நிலைக்குச் செல்கையில், முதலில் அதன் காட்சித் திரை, வீடியோ கார்ட், சிபியு மற்றும் ஹார்ட் ட்ரைவ் மூடப்படுகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் இயங்காது. கம்ப்யூட்டர் கடைசியாக இருந்த நிலையை, (திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்த சாப்ட்வேர் போன்றவற்றை) ராம் (RAM) மெமரிக்குக் கொண்டு செல்கிறது. இதற்கு “trickle charge” என அழைக்கப்படும் மிகச் சிறிய அளவிலான மின்சாரம் இதனை வைத்திருக்க தேவைப்படுகிறது. ராம் நினைவகம் ஒரு தற்காலிக நினைவகம் என்பதால், கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்யப்பட்டால், அதன் நினைவில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும். எனவே தான், குறைவான பேட்டரி திறன் உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களில், ஸ்லீப் மோடில் நுழையும் முன், மின்சக்தி, அதனைத் திருப்பி ஸ்லீப் மோடில் இருந்து எழுப்பும் வரையில் தாக்குப் பிடிக்குமா என அறிந்து கொள்வது நல்லது. ஸ்லீப் நிலையைப் பொறுத்தவரை, நாம் எப்போது திரும்பி வந்து அதனை வேக் அப் நிலைக்கான கொண்டுவரும் பட்டனைத் தட்டியவுடன், அனைத்து புரோகிராம்களும் உடனே செயல்பாட்டிற்கு வரும். எனவே, இரண்டு மணி நேரம் நாம் கம்ப்யூட்டரை விட்டுவிட்டு செல்வதாக இருந்தால், ஸ்லீப் மோடில் போட்டுவிட்டு செல்லலாம்.
ஹைபர்னேஷன் (Hibernation) நிலையில், கம்ப்யூட்டர் ராம் நினைவகத்தில் உள்ளதை, ஹார்ட் ட்ரைவில் எழுதிப் பின்னர் ஷட் டவுண் செய்து கொள்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் மின் சக்தியினைப் பயன்படுத்தும் கேள்வியே எழவில்லை. இந்நிலையிலிருந்து கம்ப்யூட்டரை மீன்டும் கொண்டு வருகையில், கம்ப்யூட்டரில் திறந்து இயக்கிக் கொண்டிருந்த அனைத்து புரோகிராம்களும் செயல்பாட்டிற்கு வரும். வழக்கமான ஷட் டவுண் செய்து பின்னர் மீண்டும் செயல்படுத்தப்பட எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் காட்டிலும், குறைவான நேரமே இதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் ஹைபர்னேஷனில் இருக்கையில், எந்த புரோகிராமும் இயங்காது.
பவர் ஆப் (Power Off) என்பது, இந்த சொற்களைப் பார்க்கும் போதே என்னவென்று தெரியவரும். ஷட் டவுண் செய்து, கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தி, சிபியு உட்பட அனைத்தையும் ஆறப் போட்டு விடுவது. வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம்; இனி வெகு நேரம் கம்ப்யூட்டருடன் வேலை இல்லை என்ற நிலையில் இந்த நிலையை எடுக்கலாம்.

கூகுள் இந்தியா – சில தகவல்கள்

அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன், இந்தியாவில் கூகுள் தளம் பயன்படுத்துவது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இன்டர்நெட்டைப் பயன்படுத்து பவர்களில் அதிகமான எண்ணிக்கை உள்ள நபர்களைக் கொண்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. பத்து கோடிக்கும் மேலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 4 கோடி பேர் தங்கள் அலுவலகங்களில் இன்டர்நெட்டைப் பயன்படுத்து கின்றனர். 3 கோடி பேர் இன்டர்நெட் மையங்களில் காண்கின்றனர். ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வீடுகளில், பிராட்பேண்ட் இணைப்பு மூலம் பயன்படுத்தி வருகின்றனர்.
மொபைல் வழி இன்டர்நெட்டைப் பொறுத்த வரை, இந்தியாவில் 4 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். ஒரு வாரத்தில், 3 கோடி அப்ளிகேஷன் புரோகிராம்கள், மொபைல் போன் வழி டவுண்லோட் செய்யப்படுகின்றன.
கடந்த 12 மாதங்களில், மொபைல் போன் வழியாகக் கிடைக்கும் தேடல் வினாக்கள், 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப் பின் இது மொத்தம் 50 மடங்கு அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக ராஜன் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பொருட்கள் வாங்குகையில், இன்டர்நெட்டில் அது குறித்து தேடிவிட்டு, நேரடியாகச் சென்று வாங்கவே, பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.
இன்டர்நெட் வழியாக வங்கி கணக்குகளைக் கையாள்வோரின் எண்ணிக்கை, கடந்த 18 மாதங்களில், 200 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்டர்நெட் வழி பொருட்களை விற்பனை செய்பவர்கள், தங்கள் இணைய தளத்தினைத் தெளிவான முறையில் வடிவமைத்து, சிக்கல்கள் எதுவுமின்றி, பயன்படுத்துவோருக்கு பயனளிக்கும் வகையில் நடத்த வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள், பொருட்கள் வழங்கப்படுகையில் பணம் செலுத்துவதனையே விரும்புகின்றனர் என்று கூறுகிறார்.