|
|||
மனித வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. வானிலும், மண்ணிலும் பல்வேறு கோளங்கள் இயங்குகின்றன. மனித உடம்பிலிருக்கும் ஆயிரக்கணக்கான நரம்புகள் போல், வாழ்க்கையில், ஆயிரக்கணக்கான சாலைகள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு போகின்றன. குளங்களில் அலைகள் ஒன்றிலிருந்து பத்தாக, பத்திலிருந்து நூறாகக் கிளைத்துக் கொண்டே செல்கின்றன. எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிக்கல்களையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்க ஒரு நீதிமன்றம் போதாது. மற்ற மதங்களில் `சுப்ரீம் கோர்ட்’ மட்டுமே இருக்கிறது. ஒரே நாயகனுடைய விசாரணைக்கு ஒரு கோடி வழக்குகளும் வைக்கப்பெறுகின்றன. அதனால் வழக்குகள் பைசலாவதில் தாமதமாகின்றன. வழக்கின் தரத்திற்கேற்ப பெஞ்சு கோர்ட்டுகளும், செஷன்ஸ் கோர்ட்டுகளும், உயர்நீதி மன்றங்களும், சுப்ரீம் கோர்ட்டும் அவற்றைப் பகிர்ந்து கொண்டு விசாரிப்பதை பூமியில் நாம் பார்க்கிறோம். இந்த அடிப்படையில் தான், இந்து மதத்தில் `இறைவனின் நீதிமன்றங்’களும் அமைந்து இருக்கின்றன. `பெஞ்ச் கோர்ட்’ நீதிபதிகளாகச் சில தேவதைகள். `மொபைல் கோர்ட்’ நீதிபதிகளாகச் சில தேவதைகள். அப்படியே படிப்படியாக விசாரிக்கும் தெய்வங்கள். இவற்றில் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற அமைப்பு `சுப்ரீம் கோர்ட்’ அமைப்பாகும். கண்ணன், முருகன், விநாயகர் என்ற அமைப்பு உயர் நீதிமன்ற அமைப்பாகும். காளியம்மன், மாரியம்மன் என்ற அமைப்பு செஷன்ஸ் கோர்ட் அமைப்பாகும். ஊருக்கு ஊர் காணப்படும் குட்டித் தேவதைகள் அமைப்பு `மாஜிஸ்திரேட் கோர்ட்’ அமைப்பாகும். இறந்து போன மூதாதையர் `பெஞ்ச் கோர்ட்’ நீதிபதிகளாவர். குட்டிச் சாத்தான் போன்றவை, மொபைல் நீதிபதிகளாகும். எண்ணிப் பார்க்கும்போது, இயற்கையான ஒரு மதத்தின் நிலைக்குத் தேடிக் கொண்ட செயற்கையான கற்பனை போலத் தோன்றும். ஆனால், வழக்குகள் பைசலாகும் முறையை விவரிக்கும் போது இது எவ்வளவு உண்மை என்பது தெரியவரும். சிவனையோ, விஷ்ணுவையோ வணங்கி சீக்கிரம் தீர்ப்புப் பெற்றவர் யாருமில்லை. ஏறவேண்டிய அளவு படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய பின்னால், காலந்தாழ்ந்து அவர்கள் தீர்ப்பு கைக்குக் கிடைக்கிறது. கண்ணன், முருகன், விநாயகர் போன்ற உயர்மன்ற நீதிபதிகள் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களுக்குப் `புது ரூலிங்’ கொடுக்கிறார்கள். காலத்தால் மாறுகின்ற நியாயங்கள், இந்த ரூலிங்கின் விளைவாகத் தோன்றியவையே. இந்தத் தொடர் கட்டுரையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுத் தீர்ப்புகளைக் காட்டுகின்றேன். உதாரணத்திற்கு, தலைகீழாக நடந்து எத்தனை படிக்கட்டுகள் ஏறிக் காரைக்கால் அம்மையார் `சுப்ரீம் கோர்ட்’ தீர்ப்புப் பெற்று முக்தியடைந்தார் என்பதைக் குறிப்பிடலாம். இதுபோன்ற பல செய்திகள். இந்தத் தொடர் கட்டுரையை இப்படி வரிசைப்படுத்திக் கொள்கிறேன். 1. மொபைல் கோர்ட் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் பெரிய வழக்குகள் செஷன்ஸுக்கு `கமிட்’ செய்யப்படுகின்றன. அங்கே தீர்ப்புப் கிடைத்ததும் `அப்பீல்’ செய்யும் உரிமையோடு (Right to Appeal) ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்யப்படுகின்றது. அங்கேயும் தீர்ப்பு ஒரே மாதிரி இருந்தால், `அப்பீல்’ செய்ய அனுமதி கேட்டு, (Leave to Appeal) சுப்ரீம் கோர்ட்டிடம் அப்பீல் செய்யப்படுகின்றது. சட்டத்திலுள்ள நடைமுறை, தர்மத்தில் எப்படி செயல்படுகின்றது? சமயங்களில் சட்டம், தர்மத்திற்கு விரோதமாக இருக்கக்கூடும். ஆனால், தர்மம் சட்டத்திற்கு நியாயமாகவே இருக்கிறது. கலவர வழக்கில் சில பேருக்கு இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறார் மாஜிஸ்திரேட். சில சமயங்களில், கொலை வழக்குக்கே இரண்டு வருடம் தண்டனைதான் கிடைக்கிறது செஷன்ஸில். அங்கே சந்தேகத்தின் பலன், எதிரிக்கு அளிக்கப்படுகிறது. சட்டநீதி மன்றங்களில்தான் சந்தேகம் எழுகிறதே தவிர, தர்ம நீதி மன்றத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆகவே, தீர்ப்பு அளந்து வழங்கப்படுகிறது. திருட்டுக் குற்றத்திற்காகப் பல வகையான தண்டனைகளைப் பலவகையான மாஜிஸ்திரேட்டுகள் வழங்குகிறார்கள். அது அவர்களுடைய மனோபாவத்தையும், அன்றைக்கு அவர்கள் குடும்பத்தில் நடந்த தகராறுகளையும் குறிக்கும். ஆனால், தர்ம நீதி மன்றத்தில் தண்டனை, பாவத்தை விட அதிகமாக இருக்காது. ஏராளமான நிகழ்ச்சிகள், செவி வழிச் செய்திகள், புராணங்கள், இதிகாசங்கள் இதை உறுதி செய்கின்றன. அடுத்து, மொபைல் கோர்ட் நீதிபதிகளைச் சந்திப்போம். 1. மொபைல் கோர்ட் நீதிபதிகள் உலவும் ஆவிகள் பற்றி, அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே `குட்டிச் சாத்தான்’ போன்றவை. ஆசை நிறைவேறாமல் இறந்த உயிர்களும்; தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து. ஒருசில சாத்தான்கள் நல்லது செய்கின்றன. பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன. சத்திய சாயிபாபா என்பவரைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகி விடுமாம். திடீரென்று அவர் விபூதி கொடுப்பாராம்; வெறும் கையிலேயே விபூதி வருமாம். பிறரது கனவில் ஊடுருவும் சக்தி அவருக்கிருக்கிறது என்பது உண்மை. குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன். என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார். முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார்; நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன். இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கும் கட்டத்துக்குள் ஒரு `கரண்ட்’ என்னை இழுக்கிறது; நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். `கிருஷ்ணா! கிருஷ்ணா!’ என்று நான் சப்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டு |
|||
சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன. இதே போல் பன்றிமலை சுவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. அவரை ஒரு நாள் பார்க்கப் போனேன். அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின. அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகிறது. நெருப்பு என்று எழுதி வைக்கிறார்; தொட்டால் சுடுகிறது. சந்தனம் என்று எழுதி வைக்கிறார்; தொட்டால் மணக்கிறது. ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல. நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் `முருகா’ என்பார். எங்கிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்து விடுகின்றன. திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன். கோவை ஜெயில் ரோடில் 1950ஆம் ஆண்டில் நான் தங்கியிருந்தபோது என்னிடம் ஒரு சாமியார் வந்தார். அவர் இரண்டு ரூபாய்கள் தாம் என்னிடம் கேட்டார். கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் ஒரு காகிதத்தில் `நல்லது நடக்கும்’ என்றும் ஒரு காகிதத்தில் `கெட்டது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று `நல்லது நடக்கும்’ என்ற காகிதத்தில் ஏறிற்று. ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை. வீதியிலே வித்தை காட்டுகிறவன், ஒரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாத்தான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள். மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே! இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. `சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் விழுந்தது, எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும் அசைக்க முடியாத உண்மை. இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகிறார்கள் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை. குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன. தீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன. இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன. இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன. மனிதர்களாகவோ, மிருகங்களாகவோ தோன்றுகின்றன. ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவர்கள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன. உண்மையில், இவை `மொபைல் கோர்ட்’ நீதிபதிகளாகவே விளங்குகின்றன. 2. பெஞ்ச் கோர்ட் நீதிபதிகள் பாண்டிய மண்டலத்தின் கிராம தேவதைகளுக்கு திருவிழா நடைபெறும்போது `புரவி எடுத்தல்’ என்றொரு விழா நடைபெறும். மண்ணாலே குதிரை செய்து கோவிலுக்கு அருகில் நிறுத்திவிடும் பழக்கமே அது. அவர்களுடைய சக்திக்குத் தகுந்தபடி, குதிரை பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கும். ஒரு காலத்தில் குதிரை வீரர்களைக் கெளரவிப்பதற்காக வந்த இப்பழக்கம், நாளடைவில் எல்லாச் சிறு தேவதைகளுக்கும் எடுக்கின்ற பழக்கமாகி விட்டது, முத்தன், முனியன், காட்டேரி என்கிற சிறு தேவதை பெயர்களெல்லாம் வீரனாக வாழ்ந்திருந்த யாரோ ஒருவரைக் குறிக்கும் பெயர்களே! பாண்டிய நாட்டிலுள்ள ஐயனார் கோவில்களில் இந்தப் புரவி எடுக்கும் பழக்கம் அதிகம். பாண்டிய நாட்டில் ஒரு கிராமத்திலிருந்து மறுகிராமத்திற்குப் போகிறவன், வழியில் இத்தகைய மண் புரவிகளை ஏராளமாகச் சந்திப்பான். இது ஒரு வகையான வீர வணக்கம். எங்கள் ஊரிலே `மலையரசி அம்மன்’ கோயில் என்று ஒன்று உண்டு `பூமலைச்சி அம்மன்’ கோயில் என்றும் உண்டு. பக்கத்து ஊர்களில், `பொன்னழகி அம்மன்’ என்ற பெயரிலும், வேறு பெயர்களிலும் அம்மன் கோயில்கள் உண்டு. இந்த அம்மன்களெல்லாம், ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் சகோதரிகள் என்றும் கூறுகிறார்கள். அவற்றில் `மலையரசி அம்மன்’ மீது எனக்கு ஈடுபாடுண்டு. அந்தக் கோவிலில் போய்ச் சத்தியம் செய்தால், யாருமே அதை மீற மாட்டார்கள். யாரிடமாவது கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், கோர்ட்டுக்கு போக வழி இல்லாவிட்டால், அந்தக் கடன் பத்திரத்துக்கு ஒரு காப்பி எடுத்து மலையரசியின் கோவிலில் வைத்து விடுவார்கள். கடனை ஏமாற்றியவன் குடும்பம் அழிந்தே போய்விடும். நான் கண் முன்னாலேயே இதனைக் கண்டிருக்கிறேன். அங்கே மலையரசி நீதிபதியாகவே வாழ்கிறாள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டியினுடைய மாங்கல்யத்தை அடகு பிடித்திருந்தார் ஒருவர். பணத்தோடு போய்க் கேட்டபோது, `தாலி வட்டியோடு மூழ்கி விட்டது’ என்று கூறி அதைத் தர மறுத்து விட்டார். `உன் குடும்பம் சந்ததி இல்லாமல் போய்விடும்’ என்று திட்டிவிட்டார் அந்த மூதாட்டி. என்ன ஆச்சரியம்! அந்தக் குடும்பம் ஆண் வாரிசு இல்லாமல் அழிந்து போய்விட்டது. நமது மூதாதையர் நம்பி உரைத்த எவையுமே பொய்யல்ல என்பதை நான் கண் முன்னாலேயே கண்டிருக்கிறேன். ஏழைப்பெண் ஒருத்திக்குத் திருமணம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் அழகாக இருந்ததால் பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைக்கும் போலிருந்தது. பொறாமைக்காரர்கள் சிலர் அந்தப் பெண்ணைப் பற்றி அவதூறு கூறித் திருமணத்தைத் தடுத்து விட்டார்கள். அந்தப்பெண், காலையில் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு, இருபத்தொரு நாள்கள் அம்மன் கோவிலை வலம் வந்தாள். அவதூறு கூறியவர்கள் குடும்பம் சின்னா பின்னமாகி விட்டது. `பெஞ்ச கோர்ட்’ நீதிபதிகளைப் போன்ற கிராம தேவதைகள் தம்மை நம்பினோரைக் காக்கிறார்கள்; அவர்கள் எதிரிகளைக் கருவறுக்கிறார்கள். முத்தாளம்மன், முத்துமாரியம்மன் போன்ற அம்மன்கள் எல்லாம் சக்தி வாய்ந்தவை என்பதைக் குறிக்க ஏராளமான கதைகள் உள்ளன. ஏதாவதொரு வகையில் அவற்றின் சக்தி வெளிப்பட்டிருக்கிறது. சென்னை நகரில் ஆலையம்மன், எல்லையம்மன், படவட்டம்மன் என்று பல அம்மன்கள் இருக்கின்றன. படவட்டம்மன் என்பது `படை வீட்டு அம்மன்’ என்பதின் மரூஉ ஆகும். இன்றைய சென்னை நகரம் பல கிராமங்களின் தொகுப்பாகும். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு, வண்ணாரப் பேட்டை என்று பல கிராமங்கள் அக்காலத்தில் விளங்கின. இவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத கிராமங்கள். இடையில் பெரும் காடுகள் இருந்திருக்கின்றன. இந்தக் கிராமங்களின் எல்லைகளில் சிறு தேவதைக் கோயில்கள் இருந்திருக்கின்றன! 1945ல் சென்னை நகருக்கு வந்து இருந்தபோது கோடம்பாக்கம் பகுதி பெரும் காடாக இருந்தது. அங்கே மிகப் பெரிய தோட்டம், `நவாப் தோட்டம்’ என்பது. சினிமாவுக்கு அவுட்டோர் சூட்டிங் போகிறவர்கள் கோடம்பாக்கத்துக்குத்தான் போவார்கள். ஆற்காடு நவாப் குதிரைகளைக் கட்டுகிற இடமாக அது இருந்ததால் `கோடா பாக்’ என்று அதற்குப் பெயர் வைத்தார். `கோடா’ என்றால் உருது மொழியில் குதிரை என்று அர்த்தம். ஆற்காடு நவாப்பை முன்னிட்டுத்தான் அந்த ரோடும் `ஆற்காடு ரோடு’ என்று பெயர் பெற்றது. 1945ல் காடாக இருந்த கோடம்பாக்கத்தில் மூன்று சிறு தேவதைக் கோயில்கள் இருந்தன. அவை இன்றும் இருக்கின்றன. வடபழனி ஆண்டவர் கோவிலும் அவற்றில் ஒன்று. அந்தக் கோவிலில் ஒரு சாமியார் இருந்தார். முள்ளாலே செய்யப்பட்ட பாதரட்சையைத்தான் அவர் அணிவார். முட் படுக்கையில் தூங்குவார். அவர்தான் வடபழனி கோவிலுக்குப் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டிருந்தார். முதலில் சிறு தேவதைக் கோவிலாக இருந்த அதுதான் பிற்பாடு முருகன் கோவிலாயிற்று. இந்தச் சிறு தேவதைகளின் சக்திகளைப் பற்றிச் சென்னை நகரில் ஏராளமான கதைகள் உண்டு. பாண்டிய நாட்டு அளவுக்குத் தொண்டை மண்டலத்திலும் இந்தச் சிறு தேவதைகள் ஆதிக்கம் புரிந்து வருகின்றன. `அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழியை இந்தச் சிறு தேவதைகள் தான் உறுதிச் செய்கின்றன. எங்கள் ஊருக்குப் பக்கத்தில், பள்ளத்தூர் என்ற ஊரில் `சோலை ஆண்டவர் கோயில்’ என்றொரு கோவில் உண்டு. அந்தக் கோவிலுள்ள தெய்வம் சக்தி வாய்ந்தது என்று ஊரார் நம்புகின்றனர். திருட்டுப் போன தாலி திரும்பி வந்ததாகவும், வண்டிச் சக்கரத்தில் நசுக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்றதாகவும் பல கதைகளை அங்கே கூறுகிறார்கள். மொத்தத்தில், இந்துக்களின் சிறு தேவதை வழிபாடு நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததே தவிர, மூட நம்பிக்கையில் எழுந்தது அல்ல. கீழ்க்குலத்து மக்களால் மட்டுமே மதித்து வணங்கப்பட்ட சிறு தேவதைகள், இப்போது எல்லோராலும் மதிக்கப்படுகின்றன. அவை செய்யும் சாகஸங்களை அறிந்தவர்கள் அவற்றை `பெஞ்ச் கோர்ட் நீதிபதிகள்’ என்றழைப்பதில் என்ன தவறு? அந்தச் சிறு தேவதை ஆதர்ஸம் எனக்கும் உண்டு. எனக்கு வழிகாட்டியவள் எங்கள் ஊர் மலையரசி அம்மன்தான் என்று நான் இன்னமும் நம்புகிறேன். |