மனிதனின் பிறப்புகள் எத்தனை?

`மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு’ என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன.

பிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.

ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.

`எழு பிறப்பு’ என்ற வள்ளுவன் வார்த்தைக்கு, `எழுகின்ற ஒவ்வொரு பிறப்பும்’ என்பது பொருள்.

`இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம்.

`ஏழேழ் பிறவி’ என்றால், `நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல.

`எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்’ என்பது பொருள்.

சில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய்வெடுத்துத் திரும்புகின்றன.

புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழைய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.

இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயிர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல்லை.

மற்றொன்று, `சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிறதென்றும், வேறு சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப்போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை’ என்றும் பகவான் கூறுகின்றான்.

எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது?

புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல்கிறார்கள்.

சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண்டும் திரும்புகிறது. காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண்மை அறிவு.

சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங்கித் திருப்பி அனுப்புகிறான்.

சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமாத்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறுபிறப்பை வெல்லலாம்.

எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கையிலேயே மறுபிறப்பு இல்லை?

நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம் இவற்றில் மரிக்கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறார்கள். இவர்களுக்கு மறுபிறவி இல்லை.

உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பயணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படுக்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.

உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.

இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா விரும்புவார்கள்?

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானேதாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன்னை

கருப்பையூர் வாராமற் கா! – என்றார் பட்டினத்தார்

`பிறவா வரம் வேண்டும் எம்மானே’ என்று புலம்பினார் ஒருவர்.

`மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்தவேண்டாம்’ – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.

`அன்னை எத்தனை அன்னையோ

அப்பன் எத்தனை அப்பனோ

இன்னும் எத்தனை ஜென்மமோ?’ – என்று கலங்கினார் ஒருவர்.

மறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக்கையும், `ஐயையோ! படமுடியாதினித் துயரம்! பட்டதெல்லாம் போதும்’ என்ற அவலமும் சேர்த்து இதிலே எதிரொலிக்கின்றன.

மறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.

அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி. ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின்றான்.

எங்கள் குடும்பத்தில் நான் சந்தித்த முதல் மரணம் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.

எனது நாலாவது சகோதரியான காந்திமதி ஆச்சியின் மரணமே அது.

அந்தச் சகோதரி சத்தம் போட்டுப் பேசாது. அவ்வளவு அடக்கம், பொறுமை, பண்பாடு.

அவரது மரண ஊர்வலத்தின் போது லேசாக மழை பெய்தது. அந்த ஊரே அதைப்பற்றி பெருமையாகப் பேசிற்று.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், 1962-இல் நானும் சம்பத் அவர்களும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது, மதுரை மாவட்டத்தில் ஒரு காப்பித் தோட்ட அதிபரின் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம்.

நான் தலைகுனிந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.

ஒரு அம்மையார் சற்று அதிகமாகக் குழம்பு ஊற்றி விட்டார்.

`போதும் அம்மா!’ என்று சொன்னபடியே நிமிர்ந்து பார்த்தேன்.

என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. அப்படியே என் சகோதரியின் தோற்றம், அதே முகம், அதே மூக்குத்தி, அதே சிரிப்பு!

இது என்ன அதிசயம்! இதைவிட அதிசயம், அவர் பெயரும் காந்திமதி தான்!

பாண்டிய நாட்டில் `காந்திமதி’ என்ற பெயர் அதிகம் என்றாலும், இந்த ஒற்றுமையில் எனக்கு மறுபிறப்புத் தத்துவம் தான் தோன்றிற்று.

பகவான் ஒன்று சொல்கிறான், `மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு’ என்று.

உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால்தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, `அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்கிறோம்.

மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.

அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, `ஆத்ம சாந்தி’.

ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தியடைவதில்லை.

மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன. மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன.

ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்.

இங்கே மீண்டும் என் கதைக்கு வருகிறேன்.

இருபது வருஷங்களுக்கு முன்னால், என் எழுத்துக்களை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆண்டுகளுக்கு ஆண்டு அதிலே மாறுதலைக் கவனித்திருக்கிறீர்கள்.

இதற்குக் காரணம் என் திறமை அன்று; பக்தி மார்க்கத்திலே ஏற்பட்ட பற்றுதலே.

முன்பெல்லாம் துன்பங்களில் நடுக்கம் வரும்; தூக்கம் வராது. இப்போது வருவது போல் தூக்கம் எப்போதுமே வந்ததில்லை.

பெரிய பெரிய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் சிரிப்புத்தான் வருகிறது.

`அது இல்லை, இது இல்லை’ என்ற சிந்தனைகள் எல்லாம் போய்விட்டன.

`இருப்பது கடவுள் கொடுத்தது’ என்று இயற்கையாகவே தோன்றுகிறது.

உடல் நோயைப் பொறுத்தவரை தினமும் மாலையில் ஒரு டாக்டரைச் சந்திக்கிறேன்.

அவர் தான் டாக்டர் கிருஷ்ணன்!

அவரை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது; ஞானக் கண்ணால் தான் பார்க்கலாம்.

சட்டங்களிலும் இ.பி.கோ, இ.பு.கோ. ஆகியவற்றைக் கண்டு நான் பரிதாப்படுகின்றேன்; அவற்றை அலட்சியப்படுத்துகிறேன்.

நான் பயப்படுவது `ப.பு.கோ’ ஒன்றுக்குத்தான்.

அதாவது `பகவான் புரொஸீஜர் கோர்ட்’ ஒன்றுக்குத்தான்.

காரணம் என்னுடைய `புருஷன்’ இப்போது கம்பீரமாக நிற்கிறான்.

வடமொழியில் `புருஷன்’ என்றால் `ஆத்மா’ என்று அர்த்தம்.

கணவன் தான் மனைவியினுடைய `ஆத்மா’ என்பதால் தான் அவனைப் `புருஷன்’ என்று அழைத்தார்கள்.

அடிக்கடி சொல்லும் ஒன்றையே நான் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

`ஒன்று நடந்து தான் தீரும் என்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?’

அத்தனையையும் பகவானிடம் ஒப்படையுங்கள்.

இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள்.

விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடைத்து விடுங்கள்.

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்.

யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடுங்கள்.

உங்களை `முட்டாள்’ என்று திட்டினால், `எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கூறுங்கள்.

உங்கள் மனைவி சண்டை போட்டால், `சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று கருதுங்கள்.

யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.

வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.

`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, `நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.

`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’ உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?