Daily Archives: பிப்ரவரி 5th, 2012

நோய் வரும்முன் தடுக்க நெறிமுறைகள்.

மனிதனுக்கு உண்டாகும் கொடிய நோய் என்பது அவரவரர் தலைவிதியோ அல்லது ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றமோதான் காரணம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சில வாழ்வியல் காரணிகள் தான் இத்தகைய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்கள் என லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் மேக்ஸ் பார்கின் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவை,

புகையிலை போடுவது, புகைப்பழக்கம், மதுபானப் பழக்கம், உடலின் கூடுதலான எடை, போதிய அளவு பழங்கள், காய்கறிகள் சாப்பிடாமல் இருப்பது, போதுமான அளவு சூரிய ஒளி படாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, தாய்ப்பால் புகட்டாமல் இருப்பது, ஹார்மோன் மருந்துகளை அதிகம் உட்கொள்வது, வேகாத மாமிசம் உண்பது, போதிய நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணாமல் இருப்பது, அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது..

இவைதான் மனிதனை தாக்கும் கொடிய நோய்களின் ஆரம்பக் காரணியாகும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதுதான்.

இந்த வாழ்வியல் முறைகளால் நாம் கொடிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் இதோ..

· அதிகாலையில் சூரியயோதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும்.

· எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட வேண்டும்.

· காலை, மாலை தினமும் 20 நிமிடங்களாவது அவசியம் எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

அவற்றில் சில..

நடத்தல், 20 முறை குனிந்து நிமிர்தல், 20 முறை நன்றாக உட்கார்ந்து எழுதல், நின்ற இடத்தில் மூன்று நிமிடங்கள் ஓடுவது, 2 நிமிடங்கள் நின்ற இடத்தில் குதித்தல், 50 முறை கயிற்றாட்டம் (ஸ்கிப்பிங்) போடுதல், கை, கால் விரல்களை நீட்டி மடக்குதல், இது தவிர, மூச்சுப் பயிற்சி 5 நிமிடம் கண்களுக்கு பயிற்சி 3 நிமிடம்..

· தகுந்த யோகாசனங்களை முறைப்படி கற்று செய்ய வேண்டும்.

· நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும்.

· உறங்குவதும், நல்ல காற்றோட்டமுள்ள அறையாக இருக்க வேண்டும்.

· பெரும் தீனியை ஒழிக்க வேண்டும். உணவருந்தும்போது பேசக் கூடாது. மௌனமாக நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். மாமிசத்தையும், அதிக உப்பு, காரத்தையும் குறைக்க வேண்டும்.

· தினசரி ஏதேனும் ஒருவேளை பச்சையாக உட்கொள்ளும் பழங்கள் காய்கள், பழச்சாறுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மற்ற இரு வேளைகளில் வழக்கமான சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். இடைப்பட்ட வேளையில் நொறுக்குத்தீனி தவிர்க்கப்பட வேண்டும்.

· நிற்கும்போதும் நடக்கும்போதும், உட்காரும் போதும் நன்கு நிமிர்ந்து இருக்க வேண்டும்.

· பகல் உணவை விட இரவு உணவு அளவு குறைவாகவும், இரவு 8 மணிக்குள்ளும் முடித்துக்கொள்ள வேண்டும். காலம் கடந்து சாப்பிடக் கூடாது.

· இரவில் சாப்பிட்டதும் சற்று உலாவிவிட்டு தூங்கச் செல்ல வேண்டும்.

· உணவருந்திய உடனே வேலைகள் செய்வதோ, குளிப்பதோ கூடாது.

· ஏழு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும்.

· உப்பு, சர்க்கரை, காரம், புளிப்பு, முதலியவைகளை இயன்ற அளவு குறைத்து சாப்பிட வேண்டும்.

· மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

· தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

· தலைவலி, காய்ச்சல், முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி இவைகளுக்கு கடையில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடக் கூடாது. தேவையற்ற ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்.

· ஆறு மாதத்திற்கு ஒருமுறை மலைப் பிரதேசங்களுக்குச் சென்று தூய காற்றை நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொண்டு வாருங்கள்.

இத்தகைய வாழ்வியல் முறைகளை கடைபிடித்தால், நோய் என்னும் அரக்கனை அண்ட விடாமல் தடுக்கலாம்.

லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க

கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.
காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.
இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.
லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்

மிக எளிதாக சமைக்க முடிந்த ருசியான உணவு பதார்த்தம் `சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்.’ நிறைய சத்துக்கள் நிறைந்த சிக்கனும், முட்டையும் சேர்வதால் சீக்கிரம் செரிமானம் ஆக பெப்பர் துணை புரிகிறது. கெட்டியான பதத்தில் சுவைக்க ஏற்ற இந்த குழம்பை செய்து ருசிப்போமா?

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ
முட்டை – 4
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
காய்ந்த மிளகாய் – 4
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

* சிக்கனைச் சுத்தம் செய்யவும். முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கி விடவும்.

* தனியா, மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் இவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

* அரைத்த மசாலாவை சேர்க்கவும். சிக்கனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

* சிக்கனும் மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும், வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும்.

* குறைந்த தீயில் இந்த சாப்ஸை வைத்து சில நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்.

செப் தாமு