Monthly Archives: ஏப்ரல், 2012

மொதல்ல, பல்ல வெளக்குங்கப்பா!

காதலிப்பது பெரிய விசயமில்லை, அந்த காதலை வெற்றிகரமாக்குவதில்தான் இருக்கிறது சூட்சுமம். நிறைய பேருக்கு அதன் டெக்னிக் தெரிவதில்லை. என்ன செய்தால் காதலில் வெற்றி பெறலாம் என்பது தெரியாமல் இருப்பதால்தான் நிறைய காதல்கள் தோற்றுப்போகின்றன. இது குறித்து நடைபெற்ற ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. சுவாசப் புத்துணர்ச்சி பெரும்பாலான காதல் தோற்றுப் போனதற்கு வாய் துர்நாற்றம் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே சுத்தமாக பல்விலக்கிவிட்டு சுவாசப் புத்துணர்ச்சியோடு இருந்தாலே காதல் வெற்றி பெரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

காதலியின் செல்லப்பிராணி

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹஸ்டன் பல்கலையின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காதல் வெற்றிக்கு காதலி வளர்க்கும் நாய் முக்கிய பங்கு வகிக்கிறதாம். 120 ஜோடிகளிடம் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டது.

நாயை நேசியுங்கள்

நாய் வளர்ப்பதில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உணர்வு ரீதியாக பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு ஆண் செல்லப் பிராணி ஒன்றை வளர்க்கும் போது தனது காதலியும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் தான் வளர்க்கும் நாயை தனது காதலனும் அளவுக்கு அதிகமாக நேசிக்க வேண்டும் என எதிர்பார்கிறாள்.

எனவே காதலில் வெற்றி பெற உங்களின் காதலி ஆசை ஆசையாக வளர்த்து வருகின்ற நாயை நீங்கள் நன்றாக நேசியுங்கள் அதன் மீது அன்பு செலுத்துங்கள் உங்களின் காதல் தானாகவே வளரும். அப்படி உங்களால் நேசிக்க முடியாவிட்டால் கூட நாயை நேசிப்பது போல் ஆவது நடியுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒருதலைக் காதல்- ஒரு புதிய பார்வை

ருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம்.

ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது.

பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவருக்கு தொந்தர வாகவும் இருக்கும். சமூகம் ஒருதலைக்காதலரை எரிச்சலோடு பார்க்கும். அந்த ஒருதலைக் காதலர் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.

இருபக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்த மாதிரியான காதலர்களை பக்கு வமாக கையாள வேண்டும்.

ஒருதலைக்காதலை பொறுத்தவரை, `நடந்தால் நடக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்’ என்று மேம்போக்காக காதலிப்பவர்களும் உண்டு. தன்னை திரும்பிப் பார்த்து தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்னொருவர் மீது காதலை திணிப்பவர்களும் உண்டு. தான் விரும்புகிறவர் தன்னை காதலிக்க எந்த முகாந்திரமும் இல்லாத போதும் எப்படியாவது தன் காதல் ஜெயித்து விடாதா என்ற தவிப்புடன் காதலிப்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் ஒருதலைக்காதல் அன்பு நிறைந்ததல்ல! வம்பு நிறைந்தது!

ஒற்றை சக்கர வண்டி ஊர் போய் சேராது. அதனால் இந்த ஒருதலைக் காதலை கைவிடுவது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக இருப்பது காதலுக்கு தரும் மரியாதையாக இருக்கும்.

புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவல், ஒருதலை காதலின் தியாகத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத நாயகி, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அப்போது கதாநாயகன் `என் உண்மை காதலை உணர்ந்து என்றாவது ஒரு நாள் நீ கண்ணீர்விடுவாய். அப்போது தான் என் தூய்மையான காதல் உனக்குப் புரியும்” என்று கூறுவான். கடைசியில் நாயகியின் கணவனை தூக்கிலிருந்து காப்பாற்றிவிட்டு அவனுக்கு பதில் அவன் தூக்கு மேடையேறிவிடுவான். இறுதியில் அந்த ஒருதலைக்காதலனின் கல்லறையில் நாயகி கண்ணீர் விடுவாள். `உன் ஒருதலை காதலுக்கு நான் தரும் அஞ்சலி இந்த கண்ணீர் துளிகள்’ என்று கூறுவதாக கதை முடியும்.

இப்படி ஒருதலைக்காதலை தியாகத்தில் முடிக் கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? இதை ஒருவிதத்தில் பக்குவமாக எடுத்துக் கொண்டாலும், இன்னொரு கோணத்தில் பார்த் தால் `இந்த ஒருதலைக்காதலிக்காக அவர் தூக்கு கயிற்றில் ஏறி இருக்கவேண்டுமா?’ என்ற கேள்வியும் எழும்.

காதல் என்றாலே அது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது.

ஆனால் ஒருதலைக்காதல் மேற்கூறியவைகளுக்கு நேர் எதிராக மாறுகின்றன. தெய்வீகத்திற்கு பதில் வெறியையும், மென்மைக்கு பதில் முரட்டுதனத்தை அது உருவாக் கும்.

தான் காதலிக்கும் நபர் தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம், ஏமாற்றம், வேதனை, ஒரு பொறுமையற்ற நிலையை மனதில் ஏற்படுத்தி அவர்களை ஒரு “சைக்கோ”வாக மாற்றிவிடும் கொடுமையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தான் காதலித்த பெண்ணுக்கு நடந்து விட்ட திருமணத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தனியாக இருக்கும் நேரத்தில் வம்பு செய்யும் சோகமும் நிகழத்தான் செய்கிறது. இது சமூகத்தை பெருமளவில் பாதிக்கிறது.

காதல் என்பது உலகையே வாழ வைக்கும் ஒரு உன்னதம். அது இப்படி பழி பாவத்தில் போய் முடிய இந்த ஒருதலை காதல் காரணமாகக் கூடாது. காதலர் தினம் கொண்டாடும் யுகத்தில் உண்மையான காதல் என்பது என்ன என்பதையும் விளக்கிச் சொல்லி இளைய தலைமுறையை வழி நடத்த வேண்டியுள்ளது.

இந்த உலகம் மிகப் பெரியது. ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இந்த பெரிய உலகத்தை மறந்து விடுகிறார்கள். தான் செய்யத் துணியும் காரியத்தின் எதிர்விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியாவது போராடி காதலில் வென்றுவிட வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். வேதனையின் விளிம்பிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டவும் செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் புரியாதவர்கள்.

இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருதலைக்காதலின் சோகத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டும். சமூகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வழிவிட வேண்டும்.

வளையும் தன்மையுள்ள அதிநவீன 3டி மெமரி சிப்!

மின்னணு எந்திரங்கள் என்றாலே டிவி, கம்ப்யூட்டர் போல பெரிய பெரிய பெட்டிகளாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது கையடக்க தொலைபேசியான செல்போன். இந்த செல்போன்கள் தந்த ஆச்சரியத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே மேலும் மாயாஜாலங்களை தொடர்ந்து செய்து வருகின்றன செல்போன் நிறுவனங்கள்.

செல்போனில் தொலைபேச மட்டும்தான் முடியும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் செல்போன் வடிவமைப்பாளர்களோ, `இல்லை இல்லை, செல்போனில் பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும், கேம்ஸ் ஆடவும் கூட முடியும்’ என்று அசத்தினார்கள். இப்படி பல்வேறு கேளிக்கைகளுக்கு செல்போன் பயன்பட ஒரு முக்கியமான காரணம் மெமரி சிப் அல்லது கார்டுகள். பல மடங்கு டேட்டா அல்லது மின்னணு தகவல்களை ஒரு சிறிய சிப்பில் சேமித்து வைக்கும் திறனுள்ள அசத்தலான கருவிதான் இந்த மெமரி கார்டு.

செவ்வக வடிவமுள்ள, சிறு சிறு அட்டைகள் போல இருக்கும் தற்போதைய மெமரி கார்டுகள் ஒன்று முதல் 64 கிகா பைட்டு (Giga Byte) அளவு வரையிலான தகவல்களை சேகரித்து வைக்க பயன்படுகின்றன. மினி எஸ்.டி. மற்றும் மைக்ரோ எஸ்.டி. என இரு அளவுகளில் கிடைக்கும் இவை கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருக்கும் ஒரு அதி நவீன 3டி மெமரி சிப்பை உருவாக்கி அசத்தி இருக்கிறார் அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர்.

மைக்ரோ எஸ்டியை விட குறைவான அளவில், ஆனால் தற்போதுள்ள அளவை விட மேலும் அதிகமான கிகா பைட்டுகளுடன், சுமார் 1000 பாரன்ஹீட் வெப்பத்திலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்த 3டி மெமரி சிப்பின் விசேஷமே என்கிறார் ஆய்வாளர் டூர். தற்போதுள்ள மெமரி சிப்களைக் காட்டிலும் அதிக பலன்களைக் கொண்ட இந்த 3டி மெமரி சிப் மின்னணுவியல் தொழில்துறைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.

மெமரி சிப் தெரியும். அதென்ன 3டி மெமரி சிப்?

தற்போதுள்ள மெமரி சிப்களில் இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற மின்னணுவியல் முறைப்படிதான் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் குறைவான பரப்பளவில் அதிக மெமரி அல்லது தகவல்களை சேமிக்க வேண்டுமானால், இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற இரு பரிமாண (2 D ) அளவுக்கு மேலாக மெமரி சிப்பின் உள்ளமைப்புகளை வடிவமைக்க வேண்டும். அதாவது 3டி அல்லது முப்பரிமாண நிலைக்குச் செல்ல வேண்டும். 3டி மெமரி சிப்பில் மூன்று முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற முறைப்படி மின்னணு தகவல்கள் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 3டி மெமரி சிப்கள் மிக அதிகமான on off ratio அளவுகளைக் கொண்டவை.

அதாவது, ஒரு மெமரி சிப் தகவல்களை சேமித்து வைத்து இருக்கும்போதும், காலியாக இருக்கும்போதும் எவ்வளவு மின்சாரம் அதனுள் பாய முடியும் என்பதை குறிக்கும் அளவுகோல்தான் இந்த on off ratio என்பது. அதிக on off ratio அளவுகளைக் கொண்ட சிப்களையே மெமரி சிப் தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, சிலிக்கான் ஆக்சைடு எனும் வேதியியல் பொருளுக்கு மேல் அதிசய பொருள் (miracle material) என்றழைக்கப்படும் மிக மிக மெல்லிய கிராபீன் அல்லது வேறு வகையான கார்பன் பொருளாலான படிவங்களைக் கொண்டதுதான் மெமரி சிப்.

மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன்தான் என்று பல காலமாய் நம்பிக்கொண்டிருந்தனர் மின்னணுவியல் விஞ்ஞானிகள். ஆனால் இந்த கூற்று முற்றிலும் தவறென்பது சமீபத்தில்தான் தெரியவந்தது.

அதாவது, மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன் அல்ல, சிலிக்கான் ஆக்சைடுதான் என்னும் அறிவியல் உண்மைதான் அது.

அது சரி, ஒரு மெமரி சிப் வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருப்பதால் என்ன பயன்?

ஒரு மெமரி சிப்பானது கண்ணாடி போல, வளையும் தன்மையுடன் சிறிய அளவில் இருப்பதால் பல விதமான பயன்பாட்டுக்கு உதவுகிறதாம். உதாரணமாக, தினசரி வாகன ஓட்டுதல், ராணுவ மற்றும் விண்வெளி வாகன பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சீ த்ரூ விண்ட் ஷீல்டுகளின்மேல் ஒட்டிக்கொள்ள வசதியாய் இருப்பதைச் சொல்லலாம். இதன்மூலம், இந்த 3டி மெமரி சிப்கள் தகவல்களை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல் வாகனங்களின் கண்ணாடியாகவும் பயன்படுகின்றன. ஆக, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இதனால் இதர கருவிகளுக்கு தேவையான இட வசதியும் அதிகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமாக, கடந்த 2011 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் Russian Progress 44 cargo என்னும் விண்வெளி ஓடத்தில் இந்த அதிநவீன 3டி மெமரி சிப் பரிசோதனைக்காக பொருத்தப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக, இந்த விண்வெளி ஓடம் சைபீரியாவுக்கு மேலே சென்றுகொண்டிருந்த பொழுது வெடித்துச் சிதறிவிட்டது. இதைக் கண்டு சற்றும் மனம் தளராத ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர், அதிக கதிரியக்க சுற்றுச்சூழலைக் கொண்ட விண்வெளியில் இந்த 3டி மெமரி சிப்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை பரிசோதிக்க, வருகிற 2012 ஜூலை மாதம் மீண்டும் இவற்றை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

இண்டியம் டின் ஆக்சைடு மற்றும் கண்ணாடியால் ஆன தற்போதுள்ள டச் ஸ்கிரீன்கள் (தொடுதிரை) எளிதில் உடையும் தன்மை கொண்டவை. ஆனால், இந்த 3டி மெமரி சிப்களைக் கொண்ட பிளாஸ்டிக் தொடுதிரைகளைக் கொண்டு பழைய டச் ஸ்கிரீன்களை மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம், வளையும் தன்மையுள்ள உடையாத தொடுதிரைகளையும் மெமரி சிப்பையும் ஒன்றாக்கி விடலாம். இதனால் நமக்கு இட வசதி அதிகரிக்கிறது. இந்த இடத்தை ஸ்மார்ட்போனுக்கு தேவையான வேறு கருவிகள், அப்ளிக்கேஷன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பும் கிடைக்கிறது!

முக்கியமாக, ஸ்மார்ட்போனுக்கு தேவையான மெமரியை பெரிய மெமரி கார்டுகளில் சேமிப்பதற்கு பதிலாக டச் ஸ்கிரீன்களில் பொருத்தக்கூடிய அதி நவீன 3டி மெமரி சிப்களில் சேமிப்பதால், தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை மேலும் மெல்லியதாக மாற்றிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் பார்க்கும் படங்கள் முதல், வீட்டில் பயன்படுத்தும் டி.வி. வரை எல்லாம் 3டி மயமாகிவிட்ட இந்த காலத்தில், மெமரி கார்டுகள் மட்டும் 2 டியாகவே இருந்தால் நன்றாகவா இருக்கும்?!

அதனால், வருக 3டி மெமரி சிப்,

வாழ்க மின்னணுவியல்!

யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்…

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை. ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.
பெரும்பாலும், இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை, அவற்றை மீண்டும் பார்மட் செய்வதன் மூலம், தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழியை மேற்கொண்டால், உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும்.
இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும். இதற்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி. போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.
யு.எஸ்.பி. ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் “Hardware and Sound,” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும். இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக, மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர, டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, “Scan For Hardware Changes.” என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை, ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல் படுத்திப் பார்க்கவும்.
இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை பார்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். பார்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும். “Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால், அதனை எடுத்துவிடவும். இந்த வகை பார்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக பார்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக பார்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை பார்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டி லிருந்து எடுத்து விடவும். விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள டேட்டா அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது. இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான், டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும். இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டருக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். டேட்டா பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்’!

டார்பிடோ ரேஸ்

மத்திய தரைக் கடலிலும், வேறு சில கடல் பகுதிகளிலும் வாழும் `ஸ்கேட்ஸ்’ என்ற மீன் வகை உள்ளது. இவற்றை `டார்பிடோ ரேஸ்’ என்றும் அழைப்பார்கள். இந்த மீன்களின் பழக்கவழக்கங்களை பண்டைய ரோமானியர்கள் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்கள். இம்மீன்கள் நீந்தும்போது அமைதியாகவும், மெதுவாகவும் நீந்தும்.

இவற்றின் அருகே வேறு சிறு மீன்களோ, நண்டுகளோ, பிற கடல்வாழ் உயிரிகளோ வந்துவிட்டால் `சுரீர்’ என்று மின்சார அதிர்ச்சி கொடுக்கும். அதில் அவை துடித்து மடியும். பின்னர் அவற்றை இந்த மீன்கள் உணவாக எடுத்துக்கொள்ளும்.

இந்த மீன்கள் தோற்றுவிக்கும் சக்தி, மின்சாரம் என்பது அக்கால ரோமானியர்களுக்குத் தெரியவில்லை. இவை ஏதோ விஷத்தன்மையுள்ள பொருட்களை வெளியிட்டுத்தான் தமது குறையைச் சொல்கின்றன என்று நம்பினர். தங்கள் மருத்துவச் சிகிச்சைகளுக்காக இம்மீன்களை பெரிய தொட்டிகளில் வைத்து வளர்த்தார்கள்.

`ஸ்கேட்’ மீன்களைப் போலவே மின்சக்தியை வெளிப்படுத்தும் மற்றொரு மீன் வகை, `ஈல்’ என்பதாகும். ஆனால் இவை நன்னீரில் வாழ்பவை.

இந்த மீன்கள் இரவில் மட்டுமே வெளியே வந்து தம் இரையைத் தேடும். தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியின் ஆழமற்ற பகுதிகளில் இம்மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வெளிப்படுத்தும் மின்சக்தி, பெரிய மீன்களைக் கூட செயலற்றுப் போகச் செய்யும் அளவுக்குப் பலமானது. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் பூர்வீகக் குடிமக்கள் அந்நதியில் இறங்கி நடக்கவே அஞ்சுகிறார்கள்.

இந்த மீன்களின் உடலிலிருந்து தோன்றும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? சாதாரணமாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவு 220 வோல்டுகள் ஆகும். ஆனால் ஈல் தோற்றுவிக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 600 வோல்ட்!

இவ்வளவு மின்சக்தியை அந்த மீன் பெற்றுள்ளது, அது வாழும் நன்னீர் சூழலுக்கு ஏற்றதே ஆகும். நன்னீர், மின்சாரத்தைக் கடத்தும் பண்பு கொண்டதில்லை.

ஈல்

கடல்நீரில் வாழும் ஸ்கேட் மீன் தோற்றுவிப்பது 60 வோல்ட் மின்சாரம் என்றாலும், கடல்நீர் மின்சாரத்தைக் கடத்தும் பண்பு உடையது ஆகையால் இக்குறைந்த அளவு மின்சாரம் அம்மீனுக்குப் போதுமானது.

மீன்கள் எவ்வாறு அவற்றின் உடலில் இருந்து மின்சாரத்தைத் தோற்றுவிக்கின்றன? அதற்குப் பயன்படுவது அவற்றின் உடலில் உள்ள நரம்பு முனைகளும், தசைகளும்தான். நரம்பு முனைகள்தான் மின்வாய்த் தகடுகளாக அமைகின்றன. இந்தத் தகடுகள் தொகுதி தொகுதியாய் அமைந்துள்ளன. ஒரு தொகுதியில் உள்ள தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்துள்ளன. ஆனால் தொகுதிகள் எல்லாம் தங்களுக்குள் பக்க அடுக்கில் அமைந்துள்ளன. சாதாரணமாக, மின்சாரத்தைத் தோற்றுவிக்கும் உறுப்பு, எலும்புடன் இணைந்த தசையுடன்தான் அமைந்திருக்கும்.

நரம்பால் உண்டாகும் தூண்டுதலின்போது இந்த எலும்புத் தசை சுருங்கும். அப்போது மின் தூண்டல் ஏற்படுகிறது. அந்த மின் தூண்டல், தசையிலிருந்து நரம்பு முனையை அடையும்போது ஒரு சிறப்பு ரசாயனப் பொருள் அங்கு சுரக்கப்படும். அதன் விளைவாகவே தசைகள் சுருங்கும். ஆனால் மின் உற்பத்தி உறுப்பால் தசைகள் சுருங்கிக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக அவை மின் தூண்டலைத் தோற்றுவிக்கும் உறுப்புகளாக இயங்குகின்றன.

சாதாரணமாக இப்படித் தோன்றும் ஒவ்வொரு சிறு மின் தூண்டலும் சுமார் 150 மில்லி வோல்ட் திறன் கொண்டதாகும்.

ஈல் மீனின் மின் உற்பத்தி உறுப்பில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 6ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உள்ள இத்தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்து செயல்படுவதால் அதன் மொத்தப் பலனாக 600 வோல்ட் மின்சாரம் தோற்றுவிக்கப்படுகிறது.

அதேநேரம் டார்பிடோ ரேஸ் மீனில் சுமார் ஆயிரம் தகடுகள்தான் ஒரு தொகுதியில் உள்ளன. இத்தொகுதிகள் 200 தான் உள்ளன. அவையும் பக்க அடுக்கில் இணைந்திருப்பதால் இம்மீன் உண்டாக்கும் மின் திறன், ஈல்மீனைப் போன்று அதிக அளவுடையதாய் இருப்பதில்லை.

 

ஸ்டாட்டின் மாத்திரை: ஆயுள் காப்பதா? ஆபத்தானதா?

முழு முதலான பக்க விளைவு, மறதி. அடுத்ததாக, மனக் குழப்பம். பெயர்கள், வார்த்தைகள் மறந்து போதல், விரல் நுனிகள் மரத்து போதல், செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை, கவனம் சிதறல், தசைகள் வலுவிழத்தல், தசைகளில் வலி ஏற்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

இதய நோயாளிகளுக்கு, அலோபதி மருத்துவத்தில் கொடுக்கப்படும் அருமருந்தாகக் கருதப்படுவது, ஸ்டாட்டின் மாத்திரை. ரத்தத்தில் கலக்கும், அதிக அளவு கொழுப்பு உற்பத்தி ஆவதையே தடுக்கும் திறன் பெற்றது, இந்த மாத்திரை. கொழுப்பை உற்பத்தி செய்ய உதவும் ரசாயனம், கல்லீரலில் சுரக்கிறது. இந்த ரசாயனத்தைச் செயலிழக்கச் செய்வது தான், ஸ்டாட்டின் மாத்திரையின் பணி.

கொழுப்புச் சத்தின் பங்கு
உடலின் செல் வளர்ச்சி மற்றும் உடல் நல்ல விதமாய் செயல்பட, கொழுப்புச் சத்து தேவை. ஆனால், அதுவே அதிக அளவில் உடலில் சேர்ந்தால், இதய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு ரத்தம் செல்வது தடைபடும். எனவே, ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைத்து, இதய வலி, இதயச் செயலிழப்பு, பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது இந்த மாத்திரை.
ஆனால், இந்த மாத்திரை, அதிக அளவு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என, மாத்திரையை நெடுநாளாகப் பயன்படுத்தி வந்த, கிறிஸ்டோபர் ஹட்சன் என்பவர் கூறுகிறார். இவருடைய அனுபவம் முழுவதும், கட்டுரை வடிவில், லண்டனிலிருந்து வெளியாகும், “தி டெய்லி டெலிகிராப்’ என்ற நாளிதழில் வெளியாகியது.
இதைப் படித்த பலரும், மிக்க அதிர்ச்சி அடைந்தனர். தாங்களும், ஸ்டாட்டின் மாத்திரை பயன்படுத்துவதாகவும், தங்களுக்கும் அந்த பாதிப்புகள் அனைத்தும் தென்படுவதாகவும், இவருக்கும், நாளிதழுக்கும், நாளிதழின் வெப்சைட்டுக்கும் கடிதம் எழுதிக் குவித்து விட்டனர்.

இங்கிலாந்தில்…
இங்கிலாந்தில், 45 வயதைக் கடந்த மூவரில் ஒருவர், கண்டிப்பாய் இந்த மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை, 70 லட்சத்தைத் தாண்டும். அப்படி எனில், உலக அளவில் இந்த மாத்திரையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, நிச்சயமாய், பல கோடிகளைத் தாண்டும். இங்கிலாந்தில், 7 லட்சம் பேருக்கு, இந்த மாத்திரையால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது.

என்ன பக்க விளைவு?
முழு முதலான பக்க விளைவு, மறதி. அடுத்ததாக, மனக் குழப்பம். பெயர்கள், வார்த்தைகள் மறந்து போதல், விரல் நுனிகள் மரத்து போதல் ஆகியவை ஏற்படுகின்றன. கவனம் சிதறல், செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை, தசைகள் வலுவிழத்தல், தசைகளில் வலி ஏற்படுதல் ஆகியவையும் ஏற்படுவதாக, கிறிஸ்டோபர் ஹட்சன் கூறுகிறார்.

அபார ஞாபக மறதி
அவர் கூறியதாக, “தி டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வெளியான விவரம்:
லண்டனில் உள்ள மருத்துவரான என் உறவினருக்கு, இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு இந்த சிகிச்சை செய்ததற்கான காரணமே, ஸ்டாட்டின் மாத்திரை சாப்பிடுவது தான் என, அவர் கூறுகிறார்.
நினைவுத் திறனைப் பொறுத்தவரை, நம்முடைய மொபைல் போன் எண், நமக்கே மறந்து விடும். 62 வயது நிரம்பியவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 20 ஆண்டுகளாக அவர், ஸ்டாட்டின் மாத்திரை சாப்பிடுவதாகவும், தனக்கு மறதி நோய், தசை வலி, நினைவுத் திறன் இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் திருமண நாள் கூட, தனக்கு நினைவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த பக்க விளைவுகள் குறித்து, மருத்துவ விஞ்ஞானிகள் கவனம் கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நம் நாட்டில், இந்த மாத்திரையின் புழக்கம் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது, மாத்திரையின் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்களுக்கு புகார்கள் வந்துள்ளனவா, இதை மருத்துவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்தெல்லாம், மருத்துவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
நன்றி-தினமலர்

தொழிலாளியின் சாதனை!


அவர் ஒரு பிரெஞ்சுக்காரர். பெயர் பெர்னார்டு பாலிசி. அவர் விஞ்ஞானி அல்ல. நிலம் அளக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு சாதாரணத் தொழிலாளி. அவரது குடும்பம் வறுமையில் வாடிக் கிடந்தது.

பாலிசி ஓய்வு நேரத்தில் கண்ணாடியில் சித்திரம் தீட்டும் தொழில் செய்து கொஞ்சம் பணம் ஈட்டி வந்தார்.

ஒருநாள் ஒரு வீட்டில் கண்ணாடியில் சித்திரம் தீட்டுவதற்காக பெர்னார்டு பாலிசி சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த ஓர் அழகான பீங்கான் பாத்திரம் அவர் மனதைக் கவர்ந்தது.

அந்தப் பீங்கானை ஆர்வத்துடனும், ஆவலுடனும் கையில் எடுத்துத் தடவிப் பார்த்தார்.

அந்தப் பீங்கான் பொருளை எவ்வாறு தயார் செய்திருப்பார்கள் என்று அறிய அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

பீங்கான் பாத்திரங்கள் தயார் செய்வது குறித்து பாலிசிக்கு ஒன்றுமே தெரியாது. பீங்கான் தயாராவதை அவர் ஒரு தடவை கூட கண்களால் பார்த்தது கிடையாது.

அந்தக் காலத்தில் பீங்கான்கள் அதிக விலையுடையதாக இருந்தன. பணக்கார வீடுகளில்தான் பீங்கான் பொருட்களைக் காண முடியும். ஏழை மக்களால் பீங்கான்களைப் பற்றி யோசிக்கவே முடியாது.

பெர்னார்டு பாலிசிக்கு பீங்கான்கள் தயார் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழை மக்களும் வாங்கும் அளவுக்கு மலிவான ஆனால் தரமான பீங்கான் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.

முதலில் அழகான மண்பாண்டங்களைத் தயார் செய்து அவற்றுக்கு மெருகு ஏற்றிப் பீங்கான் பாத்திரங்கள் போலத் தோன்றும்படி செய்தார்.

அவை விலை மலிவாக இருந்தாலும், அசல் பீங்கான் பாத்திரங்களாக இல்லாததால் பொதுமக்கள் அந்தப் பாத்திரங்களை அதிக அளவில் விரும்பி வாங்க முன்வரவில்லை.

மனம் தளராத பாலிசி, அசல் பீங்கான் பாத்திரங்களைத் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஆனால் தான் தயாரித்த பாத்திரங்களைச் சூளையில் இட்டு வேக வைப்பதற்கு விறகுகள் வாங்கக் கூட அவரிடம் பணம் இல்லை.

எனவே அவர் தன்னிடம் இருந்த பழைய மேஜை, நாற்காலிகளை உடைத்துச் சூளையில் போட்டார். அவையும் போதாததால் வீட்டுக் கூரையில் ஒரு பகுதியைப் பிரித்துச் சூளையில் போட்டார்.

ஏறத்தாழ பதினாறு ஆண்டு காலம் பசியுடனும், பட்டினியுடனும் அவதிப்பட்டு, பீங்கான் பாத்திரங்களை மலிவாகத் தயார் செய்வதற்கான நடைமுறைகளைப் பாலிசி கண்டுபிடித்துவிட்டார்.

அவர் தயார் செய்த பீங்கான்கள் ஐரோப்பாவில் தயாராகும் பீங்கான்களை விடத் தரமானவையாகவும், அழகானவையாகவும் காட்சியளித்தன. அதேசமயம் அவை விலை மலிவாகவும் இருந்தன.

பீங்கான் பாத்திரங்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்வதை முதலில் தொடங்கிவைத்தது பெர்னார்டு பாலிசிதான்.

பாலிசியின் திறமை, அவர் தயாரித்த பீங்கான் பாத்திரங்களின் சிறப்பு ஆகியவை பிரெஞ்சு அரச குடும்பத்தினரின் கவனத்துக்கு வந்தன. அரச குடும்பத்தினர் பாலிசி உருவாக்கிய பீங்கான் பாத்திரங்களைத் தருவித்துப் பார்த்து வியந்தனர்.

பின்னர் பெர்னார்டு பாலிசியை அரண்மனைக்கு அழைத்துக் கவுரவித்தனர். அவர் பீங்கான் தயாரிப்புத் தொழிலை பெருமளவிலும், நவீன முறையிலும் மேற்கொள்வதற்கு பிரெஞ்சு அரசாங்கம் தாராளமாகப் பண உதவி செய்தது.

நவீன பீங்கான் தயாரிப்புக்கு பெர்னார்டு பாலிசிதான் முன்னோடி என்று கூறலாம்.

மாங்காய் மட்டன்

ட்டன் குழம்பு, மட்டன் வறுவல், மட்டன் குருமா என எல்லாமே மட்டன் ஸ்பெஷல்களாக இருக்க, மட்டனுடன் மாங்காய் சேர்த்து தயாரிக்கும் மாங்காய் மட்டனோ இன்னும் ஸ்பெஷல். செய்து சுவைத்துத்தான் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
கிளிமூக்கு மாங்காய் – 1 (சிறிய துண்டாக நறுக்கியது)
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சாம்பார் வெங்காயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
தேங்காய் – 1/2 மூடி துருவியது
சீரகம் – 1/2 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 4 பல்
லவங்கம் – 2
பட்டை – 2
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி மாங்காயை சேர்த்து வதக்கி வேக விடவும்.

மாங்காய் வெந்ததும் வேகவைத்த மட்டன் மற்றும் மசாலாக்களை சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும். மாங்காய், மட்டன் மசாலாவுடன் சேர்த்து வெந்து திக்கானதும் இறக்கவும்.

இப்போது மாங்காய் மட்டன் ரெடி.

வேர்ட்: எழுத்துக்களின் அளவு

வேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்து வகை யின் அளவு அமைப்பது பற்றி பார்ப்போம். [Ctrl][Shift]P அழுத்தினால் கர்சர், பாண்ட் பெயர் இருக்கும் கட்டம் அருகே உள்ள அதன் அளவு கட்டத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பின் அம்புக் குறியைப் பயன்படுத்தி, அதனைக் குறைவாகவோ அல்லது அதிக மாகவோ வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்கள் விரும்பும் எழுத்து வகையின் சைஸ் அளவு தெரியும் என்றால், அந்த எண்ணை அப்படியே டைப் செய்திடலாம். 1 முதல் 1638 வரை இதன் அளவை அமைக்கலாம். எழுத்தின் அளவை அரை மாத்திரை கூட கூட்டலாம். எடுத்துக்காட்டாக 11.5, 12.5 என்று கூட அமைக்கலாம்.
எழுத்தின் அளவினை அமைக்க, அதன் கட்டத்தில் கர்சரை எடுத்துச் செல்லாமலும் அமைக்கலாம். இதற்கு [Ctrl][Shift]> என்ற கீகளை அழுத்தினால், எழுத்தின் அளவு கட்டத்தில் அளவு அதிகமாவதைக் காணலாம். நீங்கள் விரும்பும் அளவு வந்தவுடன் அப்படியே விட்டுவிடலாம். இதனையே குறைக்க வேண்டும் என்றால் [Ctrl][Shift]< என்ற கீகளை அழுத்தலாம்.
எழுத்தின் அளவை ஒரு பாய்ண்ட் அதிகரிக்க Ctrl+] என்ற கீகளை அழுத்த வேண்டும். இதனையே குறைக்க எனில் Ctrl+[ என்ற கீகளைப் பயன்படுத்தவும்.

வர்மங்களில் மறைந்திருக்கும் மர்மங்கள்

ர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு “அடவு வர்மம்” என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த வர்ம சிகிச்சை, குருகுல வழி முறையில் கொடுக்கப்பட்டது. அதற்காக அகத்தியர் “வர்மக் குடில்” என்பதை உருவாக்கிவைத்திருந்தார்.

அகத்தியரின் தன்னலம் கருதாத சேவையின் காரணமாக அவரின் வர்மக் குடில் பயிற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அகத்தியரின் மருத்துவ சேவையை கண்டு உணர்ந்த பாண்டிய மன்னர் வீரத்தளபதிகளுக்கும், இளவரசர்களுக்கும் வர்மக்கலையின் ரகசியங்களை கற்றுக் கொடுக்கும்படி கேட்டு கொண்டார். இதன் மூலமாக தமிழகத்தின் தென்பகுதியில் அகத்தியரின் தமிழ் வர்மக்கலை கொடி கட்டி பறந்தது.

நமது உடலில் 7 விதமான சக்கரங்கள் இயங்குவது போல் நம்முடைய நாடி, நரம்புகளில் 126 சக்கரங்கள் அதாவது வர்ம நிலைகள் உள்ளன.

அவை:

* தொடுவர்மம் – 96

* படுவர்மம் – 12

* தட்டுவர்மம் – 8

* அடங்கல்வர்மம் – 6

* நக்குவர்மம் – 4

இந்த வர்ம நிலைகளை மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்குகின்றன. மனிதர்களின் உடல் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டு அந்த இடத்தில் உள்சதை முறிவு ஏற்பட்டால் வலி உருவாகும். இந்த வலியை நீக்குவதற்கு முதல் கட்டமாக அடிபட்ட வர்ம நிலையை கலைக்கவேண்டும். பின்பு இளக்கு முறை செய்து விறைப்பாக இருக்கும் தசை பகுதியை தளர்த்தி விடவேண்டும். அதன் பிறகு ஒரு துண்டு சுக்கு, வெற்றிலை, 5 மிளகு ஆகியவைகளை வாயில் போட்டு மென்று, அடிபட்டவரின் மூக்கு துவாரங்களிலும், காது துவாரங்களிலும் ஊதவேண்டும். இப்படி செய்வதன் மூலமாக மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்கப்பட்டு, மின் அஞ்சல் செய்தி போல் சமிக்ஞை பெறப்பட்டு, அடிபட்ட இடத்தில் தேங்கி நிற்கும் ரத்தம் வாயு மூலமாக தள்ளப்படும். அதனால் பாதிக்கப்பட்ட இடம் சீராகி, பாதிக்கப்பட்டவர் வலியின் பிடியில் இருந்து விடுபடுவார்.

“வர்மம்” என்ற நான்கு எழுத்துக்குள் பல்வேறு மர்மங்கள் பொதிந்துள்ளன. வர்மம் என்பது, நமது உடலில் உள்ள 126 உயிர் நிலைகளை குறிக்கிறது. மூளைப்பகுதியில் உள்ள நியூரான்களின் கட்டளைப்படி இயங்கும் இந்த உயிர்நிலைகள் தான் மனிதர்களை நோய்களில் இருந்து பாதுகாத்து மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

மொத்தமுள்ள ஐந்து வகை வர்மங்களில், படுவர்மம் என்பது நமது உடலில் மிகவும் ஆழமாக குடியிருக்கிறது. தொடு வர்மம் மனித உடலில் மிகவும் மேலோட்டமாக இருக்கிறது. மேற்கண்ட இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் தட்டுவர்மம் குடி கொண்டுள்ளது.

வர்மக்கலையில் மிகவும் மர்மமானது, அடங்கல் வர்மமாகும். சாலையில் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரே போதை ஆசாமி ஒருவர் வருகிறார். அவர், அந்த அப்பாவி மனிதரை மூர்க்கத்தனமாக தாக்குகிறார் என வைத்துக்கொள்வோம். வர்மப் பகுதியில் அவருக்கு அடிபட்டிருந்தால், அந்த அப்பாவி உடனே மயங்கிவிழுந்துவிடுவார்.

இந்த நிலையில் அடங்கல் வர்மங்களின் குணநலன்கள் தெரிந்த வர்மக்கலை நிபுணர் ஒருவர் அங்கு வந்தால், அவரால் அந்த அப்பாவியின் உடலில் உள்ள உயிர் அடங்கல் வர்மங்களில் ஏதாவது ஒருவர்மம் தூண்டப்படுமானால் அவர் மயக்கம் நீங்கி எழுந்துவிடுவார். இந்த செய்கையைத்தான் வர்ம ஆசான்மார்கள் உயிர் அடங்கல் வர்மம் என்று குறிப்பிடுகின்றனர். உயிர் அடங்கியிருக்கும் வர்மம் அடங்கல் வர்மம் எனப்படுகிறது.

மனித உடலில் விரல்கள் பட்டால் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வர்ம நிலைகளும் அனேக இடங்களில் உள்ளன. அந்த மாதிரி இடங்களில் உள்ள பாதிப்பை நக்கு வர்மம் மூலமாக இளக்கி குணப்படுத்த வேண்டும். இது மிக மென்மையான மருத்துவ அணுகுமுறையாகும்.

மணிபந்த வர்மம் என்ற தொடுவர்மப்புள்ளி நமது கைகளில் மணிக்கட்டு பகுதியிலிருந்து 2 விரல் அளவு தள்ளி கையின் உள்பக்கம் உள்ளது. ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் இந்த வர்மப்புள்ளி குடி கொண்டுள்ளது. இந்த வர்ம புள்ளிகளில் மிதமான முறையில் அடிபட்டால்கூட உளைச்சல் எடுத்து வலி பரவும். இதே வர்ம புள்ளியில் முழு மாத்திரை அளவு அடிபடுமானால், அடிபட்ட கை அப்படியே கீழே தொங்கி விடும். மேலும் விரல்களில் இருந்து முழங்கை வரை பயங்கரமாக உளைச்சல் எடுக்கும். மயக்கமாகி கீழே விழுந்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அப்போது வியர்வை கொட்டும். உடம்பெங்கும் ஒருவிதமான சூடு பரவி காய்ச்சல் அடிப்பது போல் இருக்கும்.

அந்த வர்ம புள்ளிகளில் அடிபடுவதால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைப்படும். அப்போது இதய பகுதியை 10 விரல்களால் பிசைவது போல் தோன்றும். அதனால்தான் பாதிக்கப்பட்டவருக்கு மயக்கமும், வியர்வை வழிதலும் அறிகுறியாகிறது.

இப்படி வர்ம நிலையில் அடிபட்டு மயங்கி கிடப்பவரை எழுப்புவதற்கு அவரது சிரசு பகுதியில் வர்மக்கலை நிபுணர் நின்றுகொள்வார். அவரது, இடது கையால் பாதிக்கப்பட்டவரின் உச்சி முடியை பிடித்து தூக்கி உட்கார வைத்து, மிக பலமாக 3 முறை அவரது உச்சி முடியை பிடித்து உலுக்குவார். பின்பு இன்னொருவரை பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு, சிகிச்சை அளிப்பவர் அவரது முன்பக்கமாக வருவார். வந்து அவரது இடது உள்ளங்கையை பாதிக்கப்பட்டவரின் உச்சந்தலையில் தட்டையாக விரித்து வைத்து, முஷ்டி பிடித்த மறுகையால் 3 முறை மிதமான முறையில் தட்டுவார். இப்படி தட்டிவிட்ட பின்பு, சிரசின் கீழ்ப்பகுதியில் சிறிய குழி போல் உள்ள இடத்தில் வலது கையின் பெருவிரலின் முனைப்பகுதியில் 5 தடவை வட்டமான முறையில் தடவி சரி செய்ய வேண்டும்.

மேற்கண்ட முறையில் வர்ம அழுத்தம் செய்த உடன் மயக்கத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபட்டு விழிகளை திறப்பார். வர்மத்தால் பாதிக்கப்பட்டவர் சுய நினைவுக்கு வந்தவுடன் அவரின் விரல்கள் அனைத்தையும் நெட்டி (சொடக்கு) வாங்கி விட்டு, அடிப்பட்ட பகுதியில் காயத்திருமேனி தைலத்தாலோ, நல்லெண்ணெய்யாலோ பூசவேண்டும். பின்பு மேலிருந்து கீழாக வலக்கையின் கட்டை விரலால் 18 தடவை அழுத்தமான முறையில் நீவவேண்டும்.

நீவி முடித்த உடன் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தீ மூட்டி, அது நன்கு சூடான பின்பு ஒரு காட்டன் துணியை சதுரமாக மடித்து எடுத்துக்கொண்டு தோசைக்கல்லில் ஒற்றியெடுத்து அடிப்பட்ட இடத்தில் “அனல் சிகிச்சை” என்ற வறத்துணி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை 6 நாட்கள் கடைப்பிடித்து வந்தால் வர்மம் இளகி குணம் கிடைக்கும். இதற்கு கூடுதலாக சில மருத்துவ சிகிச்சை முறைகளும் உள்ளன.

தெய்வீக கலையான வர்மக்கலையை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும் அதே நேரத்தில் அதை பயன்படுத்தி, வாழ்க்கையை இன்பமாக அனுபவிக் கவும் முடியும். தாம்பத்ய சிக்கல்களை வர்மக்கலை மூலம் குணப் படுத்தி, மகிழ்ச்சியாக இளமை உணர்வோடு வாழலாம்.

இதன் மூலம் ஆரோக்கியமும் பெருகும். அதுபோல் பெண்களும், ஆண்களும் வர்மக்கலையின் அடிப்படையை கற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, வர்மப் புள்ளிகளில் தாக்குதல் தொடுத்து தங்கள் உயிரையும், உடமையையும் காப்பாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.

கட்டுரை: டிராகன் டி.ஜெய்ராஜ், வர்மக்கலை நிபுணர், கோவை.