Daily Archives: திசெம்பர் 13th, 2009

டைப் 2 டயபடீஸ்: இதோ ஒரு புது பூதம் குட்டீஸ்களையும் தாக்குகிறது

* “வாரத்திற்கு ஒரு முறை தானே, ஓட்டலில் பிட்சா, பர்கர் சாப்பிட்டால் பரவாயில்லை; ஒன்றும் செய்யாது; நீ சும்மா இரு, குழந்தைங்க நல்லா சாப்பிடறதே அதிசயம்…’ என்று வாதிப்பவரா?
* நீங்கள் மணிக்கணக்கில் சீரியல் பார்த்தால், அவங்களும் “டிவி’ யில் சினிமா, காமெடி என்று ஏதாவது பார்க்கத்தான் செய்வர்.
* கண்டபடி சாப்பிடும் பல குழந்தைகளுக்கு உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே மறந்து போய் விட்டது.
* சாப்பிட்டபின் தண்ணீர் குடி…ன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு; கேட்டாத்தானே…என்று நொந்து கொள்பவரா?
இப்படிப்பட்ட சூழல், பல குடும்பங்களில் வாடிக்கையாகி வருகிறது. இந்த குடும்பங்களில் இருந்து வளரும் குழந்தைகள் தான் “ஒபிசிட்டி’ என்ற குண்டாகும் நிலைக்கு ஆளாகின்றனர்; சில குடும்பங்களில், அடுத்த சில ஆண்டுகளில் இளம் வயதினருக்கே பி.பி.,சர்க்கரை நோய் என்ற பாதிப்பு நுழைந்து விடுகிறது.
விழிப்பு இல்லை இன்னும்
ஷுகர், டயபடீஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் தீவிரம் பற்றி பலருக்கும் இன்னும் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தான் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, பாதிப்பின் அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு தெரிவதில்லை.
டயபடீஸ் என்பது இப்போது உலகம் முழுக்க “டைம் பாம்’ மாதிரி பரவி வருகிறது. நாற்பது வயதை தாண்டியவர்களை தாக்கும் டைப் 2 டயபடீஸ்; அதுபோல, குழந்தைகளை தாக்கக் கூடியது டைப் 1 டயபடீஸ். ஆனால், சமீப காலமாக 25 ஐ தாண்டியவர்களுக்கே டைப் 2 டயபடீஸ் நோய் வர ஆரம்பித்து விட்டது. எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ள டயபடீஸ் நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வயதினர் என்று கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும் டைப் 2
குழந்தைகளுக்கு பொதுவாக டைப் 1 டயபடீஸ் தான் வரும். ஆனால், சில மாதங்களாக, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகளில், குழந்தைகளை டைப் 2 டயபடீஸ் தாக்கி வருவது மருத்துவ நிபுணர்களை அதிர வைத்துள்ளது. ஜப்பானிய பள்ளிக்குழந்தைகளுக்கு டைப் 2 டயபடீஸ் வந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டைப் 1 ஐ விட, டைப் 2 ஏழு மடங்கு அதிக வேகத்தில் குழந்தைகளை பாதிக் கிறது என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
என்ன தான் காரணம்?
கடந்த ஐந்தாண்டில் நம் வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி நிலை எல்லாம் மாறி விட்டது. இயந்திரமயம் வந்துவிட்டது. மனித உழைப்பு குறைந்துவிட்டது. உடலுக்கு தேவையில்லாத உணவு வகைகள் புகுந்துவிட்டன. வயது வித்தியாசம் பாராமல் பிட்சா, பர்கர் போன்ற “ஜங்க் புட்’ உணவு வகைகளை சாப்பிடுவது அதிகரித்து வந்தது. இதன் விளைவு தான் இப்போது குட்டீஸ்களும் இந்த “குப்பை’ உணவுகளில் நாட்டம் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு, மணிக் கணக்கில் “டிவி’ மற்றும் கம்ப் யூட்டர் கேம் விளையாடுகின்றனர். ஓடி விளையாடுவது, உடற் பயிற்சி செய்வது போன்றவை அறவே இல்லாமல் போய்விட்டது. சத்தான உணவும் போச்சு; சீரான உடற்பயிற்சியும் போச்சு; இதன் விளைவு தான் டைப் 2 சர்க்கரை நோயும் குழந்தைகளை பாதிக்க ஆரம்பித்து விட்டது.
புரிந்து கொள்ளுங்கள்
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள எரிசக்தி, சீரான அளவில் ரத்தத்தில் கலந்து சத்துக்களை பல உறுப்புகளுக்கும் அனுப்ப வேண்டும்.
இந்த எரிசக்தியைத் தான் குளூக்கோஸ் கொண்டுள்ளது. இந்த குளூக்கோஸ் தான் சர்க்கரை என்று சொல்லப்படுகிறது. ரத்தத்தில் குளூக்கோசை எரிசக்தியாக மாற்றுவது இன்சுலின் என்ற சுரப்பி தான். கணையத்தில் உள்ள இந்த சுரப்பி சரியான அளவில் சுரந்து, குளூக்கோசை எரிசக்தியாக மாற்றி ரத்தத்தில் கலக்கும்; அதிகமாக கலக்காமலும் பார்த்துக்கொள்ளும். ஆனால், சிலருக்கு கணையத்தில் இந்த சுரப்பியில் இருந்து போதுமான இன்சுலின் சுரக்காது; அப்படியே சுரந்தாலும் அது வேலை செய்வதில் சிக்கல் இருக்கும். அப்படி இருந்தால் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்து விடும். இது தான் டைப் 2 டயபடீஸ் என்பது.
கணையத்தில் உள்ள இன் சுலின் சுரப்பி, இன்சுலினை சுரக்கவே செய்யாது. இதனால், ஊசி மூலம்,மருந்து மூலம் தான் இன்சுலினை பெற முடியும். இந்த பாதிப்பு தான் டைப் 1 டயபடீஸ். குழந்தைகளுக்கு மட்டும் தான் இந்த பாதிப்பு வரும்.
எதிர்காலத்தில்
இதுவரை டைப் 1 தான் குழந்தைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது; இப்போது டைப் 2 டயபடீசும் வர ஆரம்பித்து விட்டது. அப்படியானால், அடுத்த சில ஆண்டுகளில் டயபடீஸ் 2 நோயாளிகளில் குழந்தைகளும் கணிசமாக இருப்பர் என்பது தான் நிபுணர்கள் கவலை. டயபடீஸ் என்பதே எதிர்பாராமல் வெடிக்கும் “டைம் பாம்’ தான். அதைக் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். பாதிப்பு வந்த பின் தான் பலருக்கும் தெரிகிறது.
இப்போது புதிதாக வெடிக்கக் காத்திருக்கும் புது “டைம் பாம்’ அடுத்த சில ஆண்டுகளில் பயத்தை ஏற்படுத்தத்தான் போகிறது.

உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு


மொபைல் போன் பிரீபெய்டு சிம் கார்டுகளில் “ஜோக் பேக்’, “சாங் பேக்’, “கிரிக்கெட்’ உட்பட பல பெயர்களில், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் அபகரிக்கும் நிலை உள்ளது.பல நிறுவன பிரீபெய்டு சிம் கார்டுகள் பயன் படுத்துவோர்களுக்கு, அந்நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனங்கள், அமைப்புகள் பெயர்களில், தினமும் பல எஸ்.எம்.எல்.,கள் சேவை என்ற பெயரில் வருகிறது. இதில், ஏர்டெல் நிறுவனம் நேரடியாக குறிப்பிட்ட சினிமா பாட்டுகள், கிரிக்கெட், ஜோக் பேக், சாங் பேக், காலர் டியூன் உட்பட பல எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புகின்றனர். அவை ஆங்கிலத்தில் வருவதால், இவற்றை புரிந்தோ, புரியாமலோ பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு கீயை அல்லது மொபைலின் சிவப்பு நிற துண்டிப்புக்கான கீயை அழுத்தி எஸ்.எம்.எஸ்.,ஐ துண்டிக்கின்றனர்.

பல நேரம் இந்நிறுவன எண்களில் இருந்து கம்ப்யூட்டர் வாய்ஸ்களில், “நீங்கள் ஹலோ டியூன் வாடிக்கையாளர் ஆனதற்கு நன்றி…’ என்பது போன்ற தொடர் பேச்சும், அதைத் தொடர்ந்து இந்த பட்டனை அழுத்துங்கள், வேறு பட்டனை அழுத்துங்கள், என வருகிறது.
இதை தவறாக கையாளும்போது, உடனடியாக அவர்கள் காலர் டியூன், சில குறிப்பிட்ட பாட்டுக்களை டவுன் லோடு செய்ததாக கணக்கிடப்படுகிறது. இதில், கிரிக்கெட், ஜோக், படங்கள், பாட்டுகள் போன்றவைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் கட்டணம், ஒரே முறையில் கழித்துக் கொள்ளும்படி 30 ரூபாய் கட்டணம் என பலவாறு வாடிக்கையாளர் மொபைலில் கையிருப்பில் உள்ள தொகை கழிக்கப்படுகிறது.பணம் திடீரென குறைந்ததும், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, இந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், “நீங்கள் ஜோக் பேக் எடுத்துள்ளீர்கள். கிரிக்கெட் பேக் எடுத்துள்ளீர்கள். அதற்காக இத்தொகையை பிடித்தம் செய்துள்ளோம். நீங்கள் வேண்டாமென்றால் துண்டித்துக் கொள்கிறோம்’ எனக்கூறி துண்டிக்கின்றனர். துண்டிக்கப்பட்டாலும், அதற்காக அவர்கள் மொத்தமாக 30 ரூபாய் அல்லது பல நாட்களாக ஒரு ரூபாய் வீதம் அவர்கள் எடுத்துக் கொண்ட தொகை வாடிக்கையாளருக்கு பறிபோய்விடுகிறது. இந்த துண்டிப்பு நடவடிக்கைக்கும் 24, 48 மணி நேரம் அவகாசம் வைத்து துண்டிக்கின்றனர். அதற்குள் ஒரு தொகை பறிபோகிறது.

இதுபோன்ற அனைத்து சேவை எஸ்.எம்.எஸ்.,கள், அழைப்புக்களை முழுமையாக தங்கள் எண்ணுக்கு துண்டித்துவிடும்படி வாடிக்கையாளர்கள் கூறினால், சேவை துண்டிக்கப்படும் என்ற தகவல் வருகிறது. ஆனால், அச்சேவை துண்டிப்புச் செய்ய 45 நாள் ஆகும் என கூறுவதுதான் வாடிக்கையாளர்களை கொதிப்படைய செய்கிறது. இந்த 45 நாட்களுக்குள் வாடிக்கையாளர் பெரும் தொகையை இழக்க நேரிடுகிறது.வாடிக்கையாளர் அறியாமல் சேவை எஸ்.எம்.எஸ்.,ஐ கிளிக் செய்துவிட்டால், அடுத்த வினாடி அவரது இருப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யும் அதே நிறுவனம், வாடிக்கையாளர் தனக்கு எந்த சேவை அழைப்புகளும் வேண்டாம் என்பதை ரத்து செய்ய 45 நாள் எடுத்துக் கொள்வது வெறுப்படையச் செய்கிறது.

இதுபற்றி, ஏர்டெல் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சேவைகளை துண்டிக்க 45 நாட்கள் எடுத்துக் கொள்வது எங்கள் நிறுவன விதிமுறை. வேறு வழியில்லை. வாடிக்கையாளர் குறிப்பிட்ட கீ களை அழுத்தி, ஏற்றுக் கொள்ளும் போது தான் கட்டணத்துடன் கூடிய பேக்குகள் அவர்கள் எண்ணுக்கு சென்றடைகிறது’ என்கின்றனர்.ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் அவசியம் என்பதைப்போல, அவர்களது பணத்தை அவர்கள் விரும்பாமல் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதும் அவசியமாகிறது

குடிக்க வேணாம் – விழுங்கலாம்: மாத்திரை வடிவில் வோட்கா

மாஸ்கோ : பிரபல சர்வதேச மதுபானம் “வோட்கா’ மாத்திரை வடிவில் விற்பனைக்கு வரப்போகிறது.”வோட்கா’ மதுபானம், இப்போது பாட்டிலில் திரவ வடிவில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை மாத்திரை வடிவில் விற்பனை செய்ய முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் இவேஜினி மோஸ்கலேவ். இவர் இது தொடர்பாக புது தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளார்.”இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வோட்கா மட்டுமல்ல, எந்த வித மதுபானத்தையும் திரவ நிலையில் இருந்து படிக நிலைக்கு கொண்டு வரலாம்’ என்று இவர் கூறியுள்ளார்.

உடலை வெட்டாமல் பிரேத பரிசோதனை

பெர்னே : சுவிட்சர்லாந்து நாட்டில், “ஆப்டிகல் 3டி ஸ்கேனர்’ என்ற புதிய வகை கருவி மூலம் உடலை வெட்டாமல் பிரேத பரிசோதனை செய்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில் 2006ம் ஆண்டு, பெர்னே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் தாலி மற்றும் அவரது குழுவினர், பிரேத பரிசோதனை செய்ய “ஆப்டிகல் 3டி ஸ்கேனர்’ கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறைக்கு “விர்டாப்சி’ என பெயரிட்டுள்ளனர். இந்த கருவி மூலம், பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடலை வெட்டாமல் அப்படியே சோதனை செய்து, இறப்பிற்கான காரணத்தை கண்டறியலாம்.

இதுகுறித்து, பேராசிரியர் மைக்கேல் தாலி கூறியதாவது:பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடலை வெட்டாமல், இந்த ஸ்கேனர் கருவி மூலம் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான காயங்கள் மற்றும் இறப்பிற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிகிறோம்.இந்த ஸ்கேனர் மூலம் கண்டறியப்படும் தகவல்கள் நிரந்தரமான ஆவணமாக இருக்கும். இதை இன்டர்நெட் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த முறையில் பிரேத பரிசோதனை செய்ய, 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு டேபிள் மேல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடலை வைத்து, ஸ்கேனரின் ரோபாட்டிக் கைகள் மூலம் பரிசோதிக்கப்படும்.இரண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள், கம்ப்யூட்டரை பயன்படுத்தி காரணத்தை கண்டறிவர். இதில், சி.டி., ஸ்கேனர் எலும்பில் ஏற்பட்டிருக்கும் காயங்களை கண்டறியும். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மென்மையான திசுக்களில் ஏற்பட்டிருக்கும் காயங்களை கண்டறியும்.இவ்வாறு மைக்கேல் கூறினார்.

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்

விண்டோஸ் 7 பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பலரும் அதனை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக புதிய கம்ப்யூட்டர் அனைத்திலும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான் பதியப்பட்டு தரப்படுகிறது. இதோ நாம் வழங்கும் அதற்கான முதல் ஷார்ட் கட் கீ பட்டியல்:
முதலில் விண்டோஸ் கீயுடன் உள்ள ஷார்ட் கட் கீகளைப் பார்க்கலாம்.
விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி அழுத்த விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண்டோஸ் கீ + கீ ழ் அம்புக் குறி –– விண்டோ மினிமைஸ் ஆகும்.
விண்டோஸ் கீ + இடது அம்புக் குறி –– விண்டோ இடது பக்கம் ஒதுக்கப்படும்.
விண்டோஸ் கீ +வலது அம்புக் குறி கீகளை அழுத்தினால் விண்டோ வலது பக்கம் ஒதுக்கப்படும்.
விண்டோஸ் கீ + ஹோம் கீ அழுத்த மற்ற விண்டோக்கள் அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் மீண்டும் திறக்கப்படும்.
விண்டோஸ் கீ + ட்டி (T) அழுத்த டாஸ்க்பாரில் உள்ள முதல் பதிவு போகஸ் செய்யப்படும். தொடர்ந்து அழுத்தினால் அடுத்தடுத்த என்ட்ரிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்டோஸ் கீ + ஸ்பேஸ் பார் அழுத்திப் பிடித்தபடி இருந்தால் விண்டோவின் தொடக்க நிலை காட்டப்படும்.
விண்டோஸ் கீ + ஏதேனும் ஒரு எண் (1–9) டாஸ்க் பாரில் அந்த எண் வரிசையில் உள்ள புரோகிராம் திறக்கப்படும்.
விண்டோஸ் கீ + ப்ளஸ் கீ அழுத்த விண்டோ ஸூம் செய்யப்படும்
விண்டோஸ் கீ + மைனஸ் கீ அழுத்த விண்டோஸ் ஸூம் குறைக்கப்பட்டு வழக்கமான நிலைக்கு மாறும்.

சகிப்புத்தன்மை வேண்டும் -சுவாமி விவேகானந்தர்

மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு.

நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.

மரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும். பயந்து ஓடலாகாது.

மிருகத்தை மனிதனாக்குவதும், மனிதத்தைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்டவேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவை தாம்! ஆனால், ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச்செய்வது பொருளற்றது. ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.