Daily Archives: பிப்ரவரி 20th, 2010

கர்ப்பத்திற்கான அறிகுறிகள்

1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி  பார்ப்போம்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.

இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.

இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

* மாத விலக்கு தள்ளிப்போகுதல்

* குமட்டல்

* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்

* வாசனையைக் கண்டால் நெடி

* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்

* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு

* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

– குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.

மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…

1. மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை

இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

7. வயிறு பெரிதாகுதல்

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.

இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

அந்த பரிசோதனை முறைகள் :

1. சிறுநீர்ப் பரிசோதனை

இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை

இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

4. கரு நெளிவுப் பரிசோதனை

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.

இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.

வேற்றுக் கிரக வாசிகள் பதில் தருவார்களா?

உயிரினங்கள் வசிக்கும் அதிசய கோள், பூமி. லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும், துணைக்கோள்களும் அண்டவெளியில் இருந்தாலும் மனித சக்திக்கு எட்டியவரையில் எந்தக் கோளிலும் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது முதல் முறையாக வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கும் சாத்தியம் இருப்பதற்கான சந்தேகப் பொறி அதிகரித்துள்ளது. எஸ்.ஈ.டி.ஐ. என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முறை. பிற கோள்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, மற்றும் இங்கிருந்து கதிர்களை அனுப்பி ஆராயும் முறையாகும்.

சமீபத்தில் இந்த முறையில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு, ஒரு புதுமையான தடயம் கிடைத்திருக்கிறது. அது வேற்றுக்கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் போல தோன்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கலிபோர்னியாவின் மவுன்டைன் விவில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. மைய ஆய்வாளர் டாகால்ஸ் வாகோச் கூறியதாவது:-

விண்மீன்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை கவனித்தோம். அது ஒரு ஒழுங்கற்ற நட்சத்திரக் கூட்டத்தால் கிடைத்த மாறுபட்ட தகவலாகவோ அல்லது தவறான அலை மாற்றத்தால் ஏற்பட்ட பதிவாகவோ இருக்கலாம். வேற்றுக்கிரக உயிரினங்களுக்கான சமிக்ஞையாகவும் இருக்க வாய்ப்புண்டு.

அது வேற்றுக்கிரக வாசிகளுக்கான அறிகுறியென்றால், அவர்களிடம் எவ்வாறு பேசுவது என்று ஆழமாக யோசித்து வருகிறோம். ஆகவே நாங்கள் வெற்றிட முறையில் தகவல்களை அனுப்பத் தொடங்கி இருக்கிறோம். அதை அங்குள்ள ஒவ்வொருவரும் கேட்கலாம். ஆனால் பதில் ஏதும் கிடைப்பதில்லை. பதில் வரும்வரை நாமாக ஒன்றை கற்பித்துக் கொள்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேற்றுக்கிரக வாசிகளுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசலாம் என்று யோசித்து வையுங்கள்! .

இரட்டை பலன் தரும் `தண்ணீர் பிளாஸ்டிக்’

தண்ணீரை இப்படியும் பயன்படுத்த முடியுமா? என்று வியக்க வைத்துள்ளனர் ஜப்பான் விஞ்
ஞானிகள். நெகிழா தன்மை கொண்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தண்ணீரையே பிளாஸ்டிக்காக பயன்படுத்த வழி கண்டு உள்ளார்கள் இவர்கள்.

மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாததால் பிளாஸ்டிக் கழிவுகள், சமுக வாழ்வுக்கு ஒரு பெரும் சவாலாகவும், தொல்லையாகவும் இருந்து வருகிறது. இதனால் கணிசமான அளவில் புவி சூடாகி இருப்பது மறுக்க முடியாத உண்மை.

டோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ள இந்த எலாஸ்டிக் வாட்டர் (Elastic Water) நெகிழும் தண்ணீர் பிளாஸ்டிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. 95 சதவீதம் தண்ணீரும், 2 கிராம் களிமண் மற்றும் ஒரு சில ரசாயனங்களும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. ஔ ஊடுருவும் தன்மை, நெகிழும் தன்மை, மீள் தன்மை கொண்டதாக இருப்பதால் மறுசுழற்சி செய்ய முடியும். சுற்றுச் சூழலுக்கும் தீங்கற்றது.

மருத்துவத்துறையிலும் இந்த `எலாஸ்டிக் வாட்டர்’ பயன்படும் என்பதுதான் இதன் மற்றொரு சிறப்பம்சம். குறிப்பாக காயம் பட்ட இடங்கள், அறுவைச் சிகிச்சைப் பகுதியில் வெட்டப்படும் மேற்தோல், தசைப் பகுதியை உலராமல் பாதுகாப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.

மருத்துவத்திலும், சுற்றுப்புறச் சூழலிலும் பெரிதும் துணைபுரியும் `எலாஸ்டிக் வாட்டர்’ சமீபத்திய சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

உலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு

சம்பவங்களை உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம் உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில்
காட்சிகளை பார்த்தால் பிரமிக்க வைக்கும். சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான்.

குழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும் 3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே! ஆம், அந்த அதிசயம் நடத்திக் காட்டப்பட்டுவிட்டது.

இங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில் இந்த விளையாட்டு நடந்தது. போட்டியை 3-டி காட்சிகளாக ஒளிபரப்ப ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமாக இருந்தது. வீரர்கள் பந்தை உதைப்பதும், லாவகமாக கடத்திச் செல்வதும் 3-டி காட்சிகளில் தத் பமாக அமைந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்தது.

அனேக ரசிகர்கள் விளையாட்டை நேரடியாக ரசிப்பதைவிட திரையில் 3-டி காட்சியாக ரசிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்ததாக தெரிவித்தனர். டேவிட் என்ற 71 வயது ரசிகர் கூறும்போது, `நான் 60 ஆண்டு களாக போட்டிகளை ரசித்து வருகிறேன். ஆனால் இந்தப் போட்டியே சிறப்பாக இருந்தது. 3-டி காட்சிகள் ஒவ்வொரு `ஷாட்’களையும் அருகில் இருந்து பார்ப்பதுபோல் வியக்கும் வகையில் காட்டி எங்களை மயக்கி ஈர்த்துவிட்டது’ என்றார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விளையாட்டு அதிகாரிகள் பல்வேறு விளையாட்டுகளையும் 3-டி வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

வேர்டு: நெட்டு பத்திகளை சமப்படுத்த

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், செய்தித் தாள்களில் நாம் பார்ப்பது போல நெட்டு பத்திகளை (Columns) அமைப்பது மிக எளிது. டாகுமெண்ட் அமைத்த பின், ஸ்டாண்டர்ட் டூல் பாரில் சென்று Columns என்ற ஐகானில் கிளிக் செய்திட்டால், உடனே பத்திகள் எத்தனை இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க சிறிய படம் காட்டப்படும். அதில் மவுஸின் அம்புக் குறி எடுத்துச் சென்றால், எத்தனை பத்திகள் என்பது காட்டப்படும். நம் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் அத்தனை பத்திகளில், அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட் அமைக்கப்படும். (இந்த நெட்டு பத்தி அமைக்கும் டூல்,வேர்ட் 2007 தொகுப்பில் Page Setup குரூப்பில் Page Layout டேப்பில் கிடைக்கும்.)
ஆனால் இதில் என்ன சிரமம் என்றால், உள்ள டெக்ஸ்ட்டை பல பத்திகளிடையே சரியாக, சமமாக அமைப்பதுதான். இந்த பத்திகள் எப்படி அமைக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இங்கு வேர்ட் என்ன செய்கிறது என்றால், முதல் நெட்டு (First Column) பத்தியில் டெக்ஸ்ட்டை அமைக்கும். பின் மீதமுள்ள டெக்ஸ்ட்டை இரண்டாவது, மூன்றாவது பத்திகளில் அமைக்கும். அதாவது முதல் பத்தி மிக நீளமாக அமைந்து, அது முழுவதும் டெக்ஸ்ட் அமைக்கப்படும். அடுத்த பத்தியில் மீதமுள்ள டெக்ஸ்ட் முழுவதும் அமைக்கப்படும். இதனால் இணையாக, சமமாக இந்த பத்திகள் அமையாது. அவ்வாறு சமமாக அமைக்க இரண்டு வழிகள் உள்ளன.
1. முதலாவதாக ஒரு Column break ஒன்றை உருவாக்குவது. இதற்கு Insert சென்று அதில் Break என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். சிறிய விண்டோவில் Column break உருவாக்க உள்ள பிரிவில் கிளிக் செய்திடவும்.
2. இரண்டாவதாக Continuous Section break ஒன்றை ஏற்படுத்துவது. இதற்கும் முன்பு சுட்டிக் காட்டியது போல Insert சென்று அதில் Break என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். சிறிய விண்டோவில் Section break உருவாக்க உள்ள பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த பிரிவுகளில் Continuous என்பதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்களாக டெக்ஸ்ட்டைச் சுருக்கி, விரித்து இரு பத்திகளில் சமப்படுத்தலாம். இருப்பினும் காலம் பிரேக் அங்கே காட்டப்படும். இதனை நீக்க நீங்கள் விரும்பலாம். மீண்டும் ஸ்டாண்டர்ட் டூல் பாரில் Show/Hide என்பதில் கிளிக் செய்திடலாம். செக்ஷன் பிரேக் ஈக்குவல் சைன் வரிசையாக அமைத்தது போல காட்சி அளிக்கும். இதனை ஹைலைட் செய்து டெலீட் பட்டனை அழுத்தினால், கோடு மறைந்து போகும். மேற்காணும் இரு வழிகள் வழியாக, நீங்கள் விரும்பும் வகையில் டெக்ஸ்ட்டை சமப்படுத்தி வைத்து சரி செய்திடலாம்.

துயரத்தில் இருப்பவர்களுக்கு…

இழப்பைச் சந்தித்து துயரத்தில் வாடியிருப்பவர்களுக்கு எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்… துயரத்தில் இருபவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேளுங்கள். எவர் ஒருவராலும் ஓர் இழப்புக்கு மாற்றாக இருக்க முடியாது, அதை மாற்றவும் முடியாது என்பதை உணருங்கள். காலம்தான் எல்லாவற்றைம் குணபடுத்த வேண்டும். உங்களின் சொந்தக் கதைகளை எடுத்து விடாதீர்கள். மிகவும் பொறுமையாகவும், புரிதலோடும், இதமாகவும் இருங்கள். `நீங்கள் எந்தளவு வருத்தபடுகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன்’ என்று கூறாதீர்கள். சம்பந்தபட்டவர் விரும்பாவிட்டால், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள். வழக்கமானவர்கள் வந்து சென்றபிறகு செல்லுங்கள். மறைந்தவரின் நினைவுநாட்களை ஞாபகபடுத்தி, அப்போது ஆதரவாக இருங்கள். `இழப்பு’ குறித்து ஞாபகபடுத்து கிறோமோ என்று கவலைபட வேண்டாம். சம்பந்த பட்டவர் ஏற்கனவே அந்த நினைவில் தான் இருப்பார். இழப்புக்குள்ளானவர் ஈடுபடக்கூடிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்து, உதவுங்கள்.

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டுமா

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை.

இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.

இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான்.

மேற்கூறிய உணவு வகைகளைத் தெடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.