Daily Archives: மார்ச் 7th, 2012

மின்னஞ்சல் மூலம் பைல் பார்மட் மாற்ற

எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் கள், தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான பைல்கள் கிடைத்தால், திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள். ஏனென்றால், மாறா நிலையில், இந்த புதிய தொகுப்புகள், ஆபீஸ் 2003 தொகுப்பினால், திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன. எடுத்துக் காட்டாக, வேர்ட் 2003 தொகுப்பில் ‘doc’ என்ற பார்மட்டில் டாகுமெண்ட் கள் சேவ் செய்யப்படுகின்றன. ஆனால் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இவை ‘docx’ என்ற பார்மட்டில் சேவ் செய்யப்படுகின்றன. இதே போல் பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸெல் பைல்களும் புதிய பார்மட்டில் கிடைக் கின்றன. இவற்றை எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் திறந்து படிக்க, மீண்டும் இவற்றை புதிய பதிப்பு புரோகிராம்களில் திறந்து, பின்னர் Save அண் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வேர்ட் 2003 பிரிவினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்த வரை இன்னும் ஆபீஸ் 2003 தொகுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றவர் களுக்கு உதவ இணையத்தில் பல தளங்கள், இலவசமாக இந்த பார்மட் மாற்றத்திற்கு உதவுகின்றன. இவற்றில் மிகச் சிறப்பான முறையில், வேகமாக மாற்றித் தரும் தளமான www.zamzar.com குறித்து முன்பே கம்ப்யூட்டர் மலரில் குறிப்பிட்டிருந்தோம். இந்த தளத்தில் நுழைந்து, மாற்ற வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், பைல் பார்மட் மாற்றப்பட்டவுடன், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு, பார்மட் மாற்றப் பட்ட பைலை டவுண்லோட் செய்திட லிங்க் கிடைக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்து, பார்மட் மாறிய பைலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இப்போது இந்த தளம் இன்னும் ஒரு வசதியைத் தருகிறது. மின் அஞ்சல் வழியாக, நாம் பார்மட் மாற்ற வேண்டிய பைல்களை அனுப்பினால், அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாற்றப்பட்டு, மீண்டும் மின் அஞ்சல் முகவரிக்கு, லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த தளம் சென்று, பைல்களை அப்லோட் செய்திடத் தேவை இல்லை.
எந்த வகை பார்மட்டினை மாற்ற வேண்டுமோ அதனை ஒட்டி இதற்கான மின்ன்னஞ்சல் முகவரி தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாற்றபட வேண்டியது டாகுமெண்ட் பைல் எனில், doc@zamzar.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பி.டி.எப். பைலை டாகுமெண்ட் பைலாக மாற்ற வேண்டும் என்றாலும், இதே முகவரிக்கு அனுப்பலாம். ஒரே மின்னஞ்சலில், பல பைல்களை அனுப்பலாம். ஒரு பைலை பல்வேறு பார்மட்டுகளில் மாற்ற வேண்டும் என்றால், மின்னஞ்சல் முகவரி கட்டத்தில், இதற்கான முகவரிகளை வரிசையாக அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு பி.எம்.பி. பைலை ஜேபெக் பார்மட்டில் ஒரு பைலாகவும், ஜிப் பார்மட்டில் ஒரு பைலாகவும் மாற்ற வேண்டி இருந்தால், அந்த பி.எம்.பி. பைலை jpg@zamzar.com, gif@zamzar.com என இரு முகவரிகளை இட்டு அனுப்ப வேண்டும். இதில் ஒரு வரையறை உண்டு. பைல் ஒன்றின் அளவு 1 எம்பிக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலாக பெரிய பைலாக இருந்தால், கட்டணம் செலுத்தி மட்டுமே பார்மட் மாற்றிப் பெற முடியும்.

iPhone, iPad, Android or Blackberry ஆகிய சாதனங்களில் மின்னஞ்சல் அனுப்பும் வசதி இருந்தால், அவை வழியாகவும் பைலை அனுப்பி, மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ பைல், மேலே கூறப்பட்ட சாதனங்களில் பார்க்க இயலாத பார்மட்டில் இருந்தால், மின்னஞ்சல் மூலம் அனுப்பி, சாதனங்களில் பார்க்கும் வகையில் மாற்றிப் பெறலாம்.
இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் www.zamzar.com என்ற தளத்தில் உள்ள FAQ பக்கத்தில் தேடிப் பெறலாம்.

வேர்ட் டிப்ஸ்-எழுத்துக்களை அகலப்படுத்த

எழுத்துக்களை அகலப்படுத்த
வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து சற்று அகலமாக்கும் வழி. முதலில், நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் குஞிச்டூஞு என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவிகிதத்தைக் குறைக்கலாம்; கூடுதலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.

திரையின் தொடக்கத்திற்கு கர்சர்
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

காகம் முட்டையிட்டது முதல் பெரிதாகி பறந்தது வரை… அபூர்வ படக்காட்சி

மூன்று மாடிகளைக் கொண்ட வீடு. இரண்டாவது மாடியில் இருந்து இரண்டடி தாழ்வாக இருந்த முருங்கை மரக் கிளையில் இரண்டு காகங்கள் வந்து உட்கார்ந்தன. நாலைந்து கிளைகள் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து கூடுகட்டத் தொடங்கின. அப்போது பல குச்சிகள் கீழே விழுந்துவிடும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த குச்சி களை தேடி சேகரித்து கூடுகட்டின. விடாமுயற்சியின் விளைவாக 10 நாட்கள் உழைப்பில் கூடு முழுமையடைந்தது. சணல், வயர், பஞ்சு துண்டுகள் என்று குச்சிகள் மீது மெத்தை அமைக்கப்பட்டு கூடு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது.

* இடையே ஒருவாரம் ஓடி மறைய காகம் பச்சை நிறத்தில் ஒரு முட்டையிட்டதை என் மனைவி பார்த்துவிட்டு ஓடி வந்து சொன்னாள். நாங்களும் அதை ரசித்தோம். அப்படியே ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 4 முட்டைகளை இட்டது பெண் காகம்.

* முட்டைகள் இட்டபிறகு பெண் காகம் கூட்டிலேயே அடைகாத்தபடி இருந்தது. ஆண்காகம் உணவு கொண்டு வரும். இரண்டும் பகிர்ந்து உண்ணும். இடையே ஒருநாள் பலத்த காற்றுடன் பேய் மழை பெய்தது. கிளைகள் இப்படியும், அப்படியுமாக ஊஞ்சலாட்டம் ஆட, எங்கே முட்டைகள் கீழே விழுந்துவிடுமோ என்று எங்கள் மனமும் ஊசலாடியது. அடை மழையில் கிளைகள் ஆடினாலும் அசைந்தாலும் அடைகாத்த காகம் மட்டும் எழுந்து பறக்காமல், பதறாமல் படுத்தே கிடந்தது.

* பதினைந்து நாள் அடைகாத்திருக்கும். பச்சை வண்ண முட்டைகள் பொரிந்து கருநிற காக்கை குஞ்சுகளாக மாறின. நான்கு குஞ்சுகளும் சிவந்த அலகுடன் நலமாக இருந்தன. குஞ்சுகளிடம் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது. காக்கை முட்டையை பாதுகாத்ததுபோலவே குஞ்சுகளையும் சிறகிற்குள் வேலிபோட்டு பாதுகாத்தது.

* குஞ்சுகள் பிறந்தபிறகு தாய்காகமும், தந்தை காகமும் உணவு தேடப் பறந்தன. சில நாட்களில் குஞ்சுகளுக்கு கொஞ்சம் இறகுகள் வளர்ந்திருந்தன. தாய்காகம் இரையை கொண்டு வந்ததும் அவைகள் தங்கள் சிவந்த அலகினைத் திறந்து கத்தி உணவூட்டச் சொல் லும். தாய்க்காகமும், குஞ்சுகளின் திறந்த அலகிற்குள் தன் அலகை நுழைத்து உணவூட்டும். எந்தக் குஞ்சு அதிகம் கத்துகிறதோ அதைக் கண்டுபிடித்து தாய் காகம் உணவூட்டியது.

* சில நாட்களில் குஞ்சுகள் கண்ணைத் திறந்து தாயையும், உலகத்தையும் காணத் தொடங்கின. அவை பின்பு உணவுக்காக கத்திக் கொண்டிருக்கவில்லை. தாய் உணவுடன் வரும் நேரத்தில் மட்டும் கத்தி உணவு கேட்கும். நாளாக நாளாக காக்கை குஞ்சுகள் நன்றாக வளர்ந்துவிட்டன. இப்போது அந்த சிறிய கூட்டில் அவைகளுக்கு இடம் போதவில்லை. ஒன்றை யொன்று இடித்துக் கொண்டும், ஒன்றின்மேல் ஒன்று சாய்ந்து கொண்டும் நெருக்கியபடி இருந்தன.

* காக்கை குஞ்சுகளின் அலகு சிவப்பிலிருந்து கருப்பாக மாறின. பின்பு குஞ்சு காகங்கள் நிற்க முயல்வதும், தடுமாறி விழுவதுமாக இருந்தன. பிறகு கால்கள் பலம் பெற்று நிற்கப் பழகிவிட்டன. குஞ்சுகள் வளர்ந்துவிட்டதால் தாய் காகத்துக்கும் தந்தை காகத்துக்கும் கூட்டில் இடமில்லை. அவை பக்கத்துக் கிளைகளில் நின்றபடியே குஞ்சுகளை காவல் காத்தன.

* காக்கை குஞ்சுகள் இன்னும் சற்று பெரிதானதும் கிளைகளில் வந்து நிற்பதும், பக்கத்துக் கிளைகளுக்கு நடப்பதுமாக பயிற்சி பெற்றன. நாங்கள் காக்கைகளுக்கு காராபூந்தி உண வளித்து வந்தோம். அதனால் அவைகள் எங்களை நன்றாக அடையாளம் கண்டு கொண்டன. சில நாட்களுக்குப் பிறகு பசிக்கும் வேளைகளில் கத்திக் கத்தி காராபூந்தி கேட்கும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டன.

* நடைபழகிய குஞ்சுகளுக்கு சிறகுகள் நன்றாக வளர்ந்துவிட்டன. தாய்க்காகம் தன் அடுத்த கடமையாக குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தது. ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு பறந்து செல்வதற்கும், அங்கிருந்து எங்கள் வீட்டு பால்கனிக்கு பறப் பதற்கும் பயிற்சி அளித்தது. குஞ்சுகளும் தாய்காகத்தை பின்பற்றி பறந்து பழகின. ஒருவார கால பயிற்சியில் 4 குஞ்சுகளும் நன்றாக பறக்கப் பழகிவிட்டன. பிறகு தாய்க் காகம் இரைதேடச் செல்லும் வேளையிலும் குஞ்சு காகங்கள் பால்கனிக்கும், கிளைகளுக்கும் பறந்து பறந்து ஆனந்தப்பட்டன.

* பறக்கும் பயிற்சிக்கு அடுத்ததாக கரையும் பயிற்சியளித்தது தாய்க்காகம். அதிகாலை 5 மணியளவில் இந்தக் காட்சியை நாங்கள் கண்டோம். தாய்க்காகம் முதலில் கரைய, குஞ்சுகள் பின்னாலேயே கத்தின. ஓரிரு நாட்களில் கரையும் பயிற்சியிலும் தேறின குஞ்சு காகங்கள்.

* பறக்கவும், கரையவும் பழகிவிட்ட குஞ்சு காகங்கள், இப்போது பெரிதாகிவிட்டன. அவைகள் எங்கே சென்றாலும் காராபூந்தி உண்ணவும், இரவில் உறங்கவும் எங்கள் வீட்டு மரங்களுக்கே வந்துவிடுகின்றன.

(தன் வீட்டு முருங்கை மரத்தில் இந்த அபூர்வ காட்சிகளை ரசித்து படம் பிடித்தவர், நடிகர் ஐயப்பன் கோபி. இவர் வில்லன்கள் கோஷ்டியில் ஒருவராக அறிமுகமாகி, நகைச் சுவை நடிகராக பரிணமித்தவர். ஏராளமான சினிமாக்கள், டி.வி.தொடர்கள், விளம்பர படங்களில் நடித்துள்ளார்)

நன்றி-தினத்தந்தி

ஞானியின் பக்குவம்

இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும்பாகி விடுகிறான்.
கனபரிமாணத்தில் அளவிட முடியாததாக இருக்கும் ஆலமரத்தைக் கண்ணுக்குத் தெரியாத காற்றும் சாய்த்து விடுகிறது.

துறவிக்கு வேந்தன் துரும்பு.

சொத்து சுகங்களில் எவனுக்குப் பற்றில்லையோ, அவனுக்கு இவை எல்லாமே துச்சம்.

`நான், நான்’ என்னும் ஆணவத்தைப் பற்றி, `அர்த்தமுள்ள இந்து மதம்’ முதல் பாகத்தில் எழுதியிருக்கிறேன்.

அந்த ஆணவம் போகிக்கு வரும்; யோகிக்கு வராது.

எல்லாவற்றையும் கடந்த நிலை ஞானியின் நிலை.

`என்னுடையது’ என்று சொல்ல இறைவனைத் தவிர அவனுக்கு எதுவும் இல்லை.

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.

அந்த மிராசுதார் ஒரு பெரிய நஞ்சை நிலப்பரப்பைக் காட்டி, `இவையெல்லாம் என்னுடையவை’, என்றார்.

தன்னுடைய சொத்துக்களை ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டி, `இது எனக்குச் சொந்தம்’, என்றார்.

கடவுள் அமைதியாக அவருடைய உடம்பைச் சுட்டிக் காட்டி, `இது எனக்குச் சொந்தம்’, என்றார்.

எவ்வளவு பெரிய ஆணவக்காரனும் இறுதியில், இறைவன் என்னும் நெருப்புக்கே சொந்தமாகி விடுகிறான்.

ஆனால், பற்றற்ற துறவியின் சடலம் எரியும்போது கூட அந்த நெருப்பு அவர்கள் ஊணுடலை எரிப்பதோடு நின்று விடுவதில்லை; ஞான ஒளியையும் பரப்புகிறது.

புறப்பட்ட இடம் எவனுக்குத் தெரிகிறதோ, அவனுக்கே தான் போய்ச் சேர வேண்டிய இடமும் தெரியும்.

ஜனநாயகத்தில் ஐந்து வருட காலம் என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வருகிறவனே, அந்தப் பதவி நிரந்தரமானது, என்பது போல் ஆடத் தொடங்கி விடுகிறான்.

அவன் மந்திரியான உடனே அரசாங்கக் கார்கள் ஓடி வருகின்றன.

அதிகாரிகள் `சலாம்’ போடுகிறார்கள்; போலீஸ்காரர்கள் `சல்யூட்’ அடிக்கிறார்கள்.

அதே போலீஸ்காரன் ஒரு சமயத்தில் அதே மந்திரியை கைது செய்கிறான்.

தான் நியமித்த நீதிபதியாலே அவன் விசாரிக்கப்படுகிறான்.

தான் நிர்வகித்த சிறைச்சாலைக்குள்ளேயே அவன் குடியேறுகிறான்.

மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ, அப்படியே அவனும் நடத்தப்படுகிறான்.

ஆனால், பற்றற்ற துறவிக்கோ, இந்தச் சிக்கல்கள் எவையும் இல்லை.

தன் உடலுக்காக ஒரு `சோப்பு’க் கூட அவன் வாங்குவதில்லை.

கங்கையில் தண்ணீர் ஓடினால் அவன் குளிக்கிறான்; அது வற்றிவிட்டால் அவன் கிணற்றுத் தண்ணீரை நாடுகிறான்.

ஆனால், பதவி மோகக்காரனோ, ஒரு புதிய கங்கையை உற்பத்தி செய்ய விரும்புகிறான்.

`விட்டுவிடப் போகுதுயிர், விட்டவுடனே உடலை சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்,’ என்றார் பட்டினத்தார்.

`மேல் விழுந்து உற்றார் அழுமுன்னே ஊரார் சுடும் முன்னே குற்றாலத்தானையே கூறு’ என்றார்.

மரணம் நிச்சயம் என்று தெரிந்தும், மனிதன் ஆசையாலும் ஆணவத்தாலும் அலைமோதுகிறான்.

ஆனால், ஞானிக்கு ஒருவகை ஆணவம் வருகிறது. அந்த ஆணவம் வென்றும் விடுகிறது.

`நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்றாரே அப்பர் சுவாமிகள். அவர் கடைசி வரையிலே தன்னை ஒரு இறைவனின் குடிமகனாகக் கருதினாரே தவிர, ஒரு அரசனின் குடிமகனாகக் கருதியதில்லை.

ஒரு பஞ்சப் பரதேசி, துறவி, சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.

குளிர்காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலிலே துண்டை விரித்து அவர் படுத்திருந்தார்.

உலகத்தையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவன் அருகிலே வந்தான்.

ஞானி அவனைக் கவனிக்கவில்லை.

கால்மேல் கால் போட்டபடி சூரிய கிரணங்களில் குளித்துக் கொண்டிருந்தார்.

`நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்!’ என்றான் அவன்.

`அப்படியா?…’ என்று சாதாரணமாகச் சொன்னார் ஞானி.

`ஏ, ஞானியே! உனக்கு என்ன வேண்டும், கேள்; நான் தருகிறேன்!’ என்றான் அலெக்சாண்டர்.

`எனக்கு ஒரு உதவி வேண்டும்,’ என்றார் ஞானி.

`என்ன வேண்டும்? பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா, மாளிகை வேண்டுமா?’ என்று கேட்டான்.

`ஒன்றும் வேண்டாம். நீ கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். உன் நிழல் வெயிலை மறைக்கிறது’ என்கிறார் ஞானி.

அலெக்சாண்டர் என்றால் உலகமே நடுங்கும்; ஞானி நடுங்கவில்லை.

அலக்சாண்டரின் ஆணவத்தை, ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.

காரணம், ஞானிக்குத் தேவை என்று எதுவுமில்லை.

யாரிடமிருந்தும் எதையும் எதிர்பாராத ஆணவம், தன்னம்பிக்கை.

ஆசை வயப்பட்ட ஆணவம், திமிர்.

ஒரு ஞானியிடம் ஒரு பணக்காரன் போனான்.

`இதோ பார்! நான் வந்திருக்கிறேன்’ என்றான்.

ஞானி அமைதியாக அவனைப் போகும்படி கை அசைத்தார்.

`பின் எப்பொழுது வருவது?’ என்று அவன் கேட்டான்.

`நான் செத்த பிறகு வா’ என்றார் அவர்.

`நீ செத்த பிறகு நான் வந்து என்ன செய்வது?’ என்றான் அவன்.

`நான் என்றால், நான் அல்லடா! `நான் வந்திருக்கிறேன்’ என்றாயே, அதிலுள்ள `நான்’ என்ற ஆணவம் செத்த பிறகு வா!’ என்றார் அவர்.

மனிதர்களுக்கு வெற்றி வரும்போது, இந்த ஆவணம் கூடவே வரும்.

அடி விழும்போது அதுவும் நாய்க்குட்டிபோல் அடங்கி விடும்.

ஆனால், ஞானியின் ஆணவம், இறைவனைச் சந்திக்கின்ற வரை நீடிக்கும்.

காரணம் அந்த ஆணவம் தன்னை அறிந்து கொண்டதற்கான தத்துவ விளக்கம்.

`மனிதர்களைப் பார்த்து இறைவன் இரண்டு முறை சிரிக்கிறான்’ என்றார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

`இது என் சொத்து! இது என் சொத்து!’ என்று பங்காளிகள் சண்டையிடும் போது ஒருமுறை சிரிக்கிறானாம்!

`நோயாளியைப் பார்த்து மருத்துவர் கவலைப்படாதே; `நான்’ குணப்படுத்தி விடுகிறேன்’ என்று சொல்லும் போது ஒருமுறை சிரிக்கிறானாம்!

உலகத்தில் தலைசிறந்த- முடிவான டாக்டர் ஆண்டவனே! மற்றவர்களெல்லாம் தற்காலிகமானவர்களே!

வாழ்க்கை அரங்கில் எவனுடைய ஆணவமும் செல்லுபடியாகாது.

ஆனால், ஞானியின் ஆணவம் உலகத்தையே ஆட்டுவிக்கும்.

சொல்லப் போனால் அதற்குப் பெயர் ஆணவமல்ல; தெய்வீக உணர்ச்சியின் திரட்சி.

ஞானி இறைவனுடைய காலாக நிற்க விரும்புகிறான். மனிதனோ இறைவனுடைய தலையே தானென்று எண்ணுகிறான்.

`ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

தேனார் சோலைத் திருவேங்க டச்சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!’

-என்று இறைஞ்சினார், குலசேகர ஆழ்வார்.

மன்னாதி மன்னன், மகுடம் தாங்கிய தலைவன், வேங்கடத்தானின் பாதத்தில் அவன் தலை மோதிற்று.

இறை நம்பிக்கை என்பது சாதாரண மனிதனையே அரச பதவிக்கு உயர்த்தி விடுகிறது.

அரசனுக்கு பூமியிலே வைகுந்த பதவியைத் தருகிறது.

அரசு பதவி என்றால், எல்லோரையும் ஆட்டிப் படைக்கின்ற சக்தி.

இன்னும் நம் நாட்டில் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்; நிலப் பிரபுக்கள் இருக்கிறார்கள்; தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள்; ஆனால், காஞ்சிபுரத்து சந்நியாசியின் காலைத்தான் உலகம் தொட்டு வணங்குகிறதே தவிர, கோடீஸ்வரனின் காலை, அவனிடம் பணம் பெற்றுக் கொண்டவன் கூடத் தொடுவதில்லை.

பெறுதலைவிட, துறத்தலுக்குரிய மரியாதை அதுதான்.

வரவு-செலவு எழுதுகின்ற செட்டியாரைவிட, துறவு கொண்டு விட்ட ஞானிக்குத்தான் மரியாதை அதிகம்.

ஆசையும் தேவையும் இல்லாதவன் எவனுமே தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

எனக்கு ஒரு பணக்காரரைத் தெரியும்.

கோடி ரூபாய்க்கு அவருக்குச் சொத்து உண்டு.

இப்பொழுது அவரிடம் போய், `கொத்தவால் சாவடியில் கத்தரிக்காய் வாங்கி ஜாம்பஜாரில், கொண்டு வந்து விற்றால் பத்து ரூபாய் கிடைக்கும்’ என்று சொல்லுங்கள்; வருவார்.

நம்மிடந்தான் கோடி இருக்கிறதே, பத்து எதற்கு என்று கருத மாட்டார்.

அக்காளை மணந்தவனுக்கு தங்கையும் தேவைப்படுகிறது.

சென்னையில் புதுநகர் வந்தால் ஆங்காங்கே புதுபங்களா சிலருக்குத் தேவைப்படுகிறது!

இவனையெல்லாம் வருமானவரி அலுவலகக் குமாஸ்தா கூட மிரட்டுவான்.

ஆசை வளர்வதும், ஆணவம் பெருகுவதும் மனிதனது அழிவுக்கே அறிகுறி.

இன்றைய அறிவு எனக்கு ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்குமானால், நான் ஒரு துறவியாகவே இருந்திருப்பேன்.

லெளகீகத்தில் இறங்கிவிட்ட மனிதனது நிலைமைதான் என்ன?

நாய்க்குட்டி வளர்க்கிறான்; அதற்குப் பால் வேண்டுமே என்று பசு மாடு வாங்குகிறான்.

பசுவைப் பாதுகாக்க வேண்டுமே என்று வேலைக்கு ஆளை வைக்கிறான்; வேலைக்காரனைக் கண்காணிக்க வேண்டுமே என்று வீட்டுக்காரியைக் கொண்டு வருகிறான்.

வீட்டுக்காரி வந்த பின் சும்மா இருக்க முடியவில்லை; பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறான். பிள்ளைகளுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசை வயப்பட்டு அலைகிறான்.

நினைத்தது கிடைக்கவில்லை என்றால் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறான்; நினைத்ததெல்லாம் கிடைத்து விட்டால் `நான் யார் தெரியுமா?’ என்கிறான்.

ஒன்று அவலம்.

இன்னொன்று ஆணவம்.

இந்த இரண்டுமற்ற நிலையில் ஒரு மனிதனுக்குத் தேவையானது லெளகீக வாழ்விலும் ஒரு ஞானியின் பக்குவம்.

அப்படிப்பட்டவனை, `இல்லறத் துறவி’ என்பார்கள்.

`வெள்ளை வேட்டி சந்நியாசி’ என்பார்கள்.

அவன், வருவதைக் கடவுள் பெயராலே செலவு எழுதுகிறான்.

லெளகீகத்தில் இருந்து கொண்டே ஞான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவனும், எந்தக் காலத்திலும் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.

நமது தலைமுறையில் காந்திஜி ஒரு உதாரணம்.

அவர் நீட்டிய கையில் கொட்டிக் கொடுத்தது நாடு.

கொட்டிக் கொடுத்ததை அப்படியே குவித்துக் கொடுத்தார் நாட்டுக்கு.

தேவதாஸ் காந்திக்குக் கொடுத்தாரா, தேறாத பிள்ளைக்கு ஒதுக்கினாரா?

குடும்பத்தில் இருங்கள்.

ஞானியாகத் திகழுங்கள்.

பசி எவ்வளவோ அவ்வளவுக்கு உணவு தேடுங்கள்.

பறவைக்குக் கூடு போதும்; சிங்கத்தின் குகை தேவை இல்லை.

சிங்கத்தின் குகை அதற்குத் தேவைப்பட்டால், சிங்கத்திற்கு அது தேவைப்படும்.