Daily Archives: மார்ச் 30th, 2012

இளமையை தக்கவைத்து உடலை பொலிவாக்கும் உறவு

தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பிரகாசமான முகம்

உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலுறவினால் மனஉளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம்.

உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் அளவு சீராக கிடைக்கிறதாம். இதனால் உடல் பொலிவாகுமாம். உதட்டில் அடிக்கடி முத்தமிடுவதால் எனாமலுக்கு சக்தி கிடைக்கிறதாம். இதனால் பற்கள் பளபளப்பாகுமாம்.

அழகாய் பூக்குதே

உறவின் போதும் வெளியேறும் வியர்வையினால் மேனி பளபளப்பாக இருக்குமாம். பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம்.

கட்டான உடல்

அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள சதைகள் கரைந்து கட்டான உடலமைப்பு ஏற்படுகிறதாம். நீச்சல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கிடைக்கின்ற உடல் கட்டமைப்பினை விட தாம்பத்ய உறவின் போது கிடைக்கும் உடல் அழகு 20 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம்.

ரத்த அணுக்கள் எண்ணிக்கை

தினமும் உறவு கொள்ளும் தம்பதியருக்கு ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உடலுறவினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம்.

வயதான தம்பதியர் உறவு கொள்வதன் மூலம் மூட்டு வலி, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்குமாம்.

மூச்சடைப்பு ஏற்படாது

அடிக்கடி உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லையாம். உறவின் போது அதிகமாக மூச்சு வாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் மூச்சடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லையாம். ஆண்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லையாம்.

சிறந்த எக்ஸர்சைஸ்

தாம்பத்ய உறவினால் உடல் சமநிலை பெறுகிறதாம் இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கிறதாம். இதனால்தான் செக்ஸ் ஒரு சுகமான உடற்பயிற்சி என்று கூறுகின்றனர்.

இதயநோய் தீரும்

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உறவு கொள்ளும் தம்பதியருக்கு இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுகிறதாம். உறவின் போது இதயமானது 80 முதல் 150 தடவைவரை துடிக்கிறதாம். இதனால் இதயத்தை சுற்றி உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறதாம்.

முக்கியமான விசயம் குறித்த முடிவு எடுக்கும் முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடமும், மன உறுதியும் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.

இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.

மின்கட்டண உயர்வின்படி, வீடுகளின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 100 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.10 எனவும், 101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 எனவும், 251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 4 பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3 எனவும், 201 – 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ. 4 எனவும், 501 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் 5.75 எனவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 37 சதவீதம் வரை இருக்கும் எனவும், இந்த உயர்வு ஓராண்டு வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்களுக்கு வரை கட்டணம் இல்லை. 500 யூனிட்களுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ. 4 எனவும் நிர்ணியக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு, 120 யூனிட்கள் வரை, யூனிட்டிற்கு ரூ.2.50 எனவும், 120 யூனிட்களுக்கு மேல், யூனிட்டிற்கு ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டிற்கு 4.30 எனவும், 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோருக்கு யூனிட்டிற்கு ரூ. 10. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50 எனவும், 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணம் யூனிட்டிற்கு ரூ.5.50 எனவும்,செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டிற்கு ரூ. 4.50 எனவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு ரூ. 5 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டண உயர்வு ஒரு ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும், இந்த உயர்வால் மின்சார வாரியம் நஷ்டமின்றி இயங்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

`பைப்பிங் ஹாட்’

அடுப்பிலிருந்து நேரடியாக உணவு மேஜைக்கு வசதியாக, சுடச்சுட வரும் உணவை `பைப்பிங் ஹாட்’ (piping hot) ஆக உள்ளது என்கிறோம். இந்த அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துவதற்குச் சில நூற்றாண்டுகள் ஆயின. ஒரு காலத்தில், அண்டை அயலில் அல்லது கிராமத்தில் உள்ள பேக்கரிடம் இருந்து அன்றாடம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட ரொட்டியை வாங்கும் பழக்கம் இருந்தது. ரொட்டிக்காரர் வாயிலில் நின்று ஒரு குழாய் அல்லது கொம்பை ஊதி, ரொட்டி தயாராகிவிட்டது என்று அறிவிப்பார். தீர்ந்து போவதற்கு முன் அதை வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரைந்து செல்வார்கள். அதிலிருந்து `பைப்பிங் ஹாட்’ என்பது வந்தது.

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

கொள்ளையர்களிடம் 317 நாட்கள்
சிக்கித் தவித்தவரின் அதிர்ச்சி அனுபவங்கள்

ப்பலில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள், சோமாலிய கடற்கொள்ளையர்கள். இவர்கள் திடீரென்று நடுக்கடலில் தோன்றி, அதிரடியாய் துப்பாக்கி, ஏவுகணைகளை பயன்படுத்தி கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார்கள். கப்பலில் இருப்பவர்களை சிறைபிடித்து, கோடிக்கணக்கில் பேரம் பேசுவார்கள். பேரம்படியும் வரை, பிணையாளிகளை கொடுமைப்படுத்துவார்கள். அப்படி சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் 317 நாட்கள் சிக்கித் தவித்தவர், பிஜேஷ். அவர் தனது திகில் அனுபவங்களை விவரிக்கிறார்…

“இத்தாலிய நாட்டு எம்.வி.சவீனா காலின் என்ற எண்ணை கப்பல் சூடானில் இருந்து மலேசியாவிற்கு கிளம்பியது. அதில் 17 இந்தியர்களும், 5 இத்தாலியர்களும் இருந்தோம். பீர் அருந்தினார்கள். பாட்டுபாடினார்கள். ஆட்டம்போட்டார்கள். எங்கள் பயணம் ஜாலியாக தொடங்கியது. நான் கப்பலில் `என்ஜின் கேடட்’டாக பணிபுரிந்தேன்.

எங்கள் கப்பல் சோமாலியாவின் சுற்றுப்பகுதிக்கு செல்லாது என்பதால் எங்களுக்கு பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இருக்கவில்லை. பொதுவாக நாங்கள் எப்போதும் கடற்கொள்ளையர்கள் பற்றி பேசிக்கொண்டிருப்போம். பல நிறுவனங்கள் கடற்கொள்ளையர்களை எதிர்கொண்டு தாக்கும் அளவிற்கான கமான்டோ படை வீரர்களை தங்கள் கப்பல்களில் வைத்திருக்கிறார்கள். எங்கள் கப்பலில் அப்படி யாரும் இல்லை.

ஆனால் பாதுகாப்பிற்காக கப்பலின் ஓரங்களில் பீப்பாய்களில் தண்ணீர் நிரப்பிவைத்திருப்போம். கமான்டோ படை வீரர்களைப்போன்ற `டம்மி`களை உருவாக்கி, பக்கவாட்டில் நிறுத்தி வைத்திருப்போம். தூரத்தில் படகுகள் வந்தாலும் கண்டுபிடிப்பதற்கு வசதியாக, அதி நவீன கேமிராக்களையும் வைத்திருக்கிறோம். கடலை பொறுத்தவரையில் பாதுகாப்பான பகுதி என்றோ, பாதுகாப்பான பயணம் என்றோ எதுவும் இல்லை. மடகாஸ்கர், ஓமன் பகுதிகளிலும்கூட கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள். எங்கு வருகிறார்கள். எப்படி தாக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு பயந்தால் எங்களைப் போன்றவர்கள் கப்பலில் வேலை பார்க்கவும் முடியாது.

அன்று நாங்கள் இந்திய கடல்பகுதியில் இருந்து 150 மைல் தூரத்தில் இருந்தோம். அப்படியே இலங்கை கடற்பகுதி வழியாக மலேசியா செல்வது எங்கள் திட்டம்.

காலை நேரம். கடல் அமைதியாக இருந்தது. எனக்கு திடீரென்று கப்பல் வேகத்தை அதிகரிக்கப்போகிறோம் என்று ஒரு மெசேஜ் வந்தது. நாங்கள் காரணம் புரியாமல் தவித்தபோது, `நம்மை நோக்கி ஒரு படகு வருகிறது’ என்று தகவல் சொன்னார்கள். முதலிலே அந்த படகை ரேடரில் பார்த்தோம். அதை மீன்பிடி படகு என்று நினைத்தோம். பைனாகுலரில் பார்த்தபோது அந்த படகு, எங்கள் கப்பலில் இருந்து 15 மைல் தூரத்தில் இருந்தது. திடீரென்று அந்த படகில் இருந்து இன்னொரு வெள்ளை படகு, கடலில் குதித்தது. அதன் மூலம் வருபவர்கள் கடற்கொள்ளையர்கள்தான் என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது.

கப்பலில் எல்லோரும் உஷாராக இருக்கும்படி அறிவித்தார்கள். கப்பலின் வேகத்தையும் அதிகரித்தார்கள். அதிகபட்சமாக கப்பலால் 14 நாட்டிக்கல் மைல் வேகத்தில் தான் செல்ல முடியும். ஆனால் படகு 35-40 நாட்டிக்கல் வேகத்தில் வந்துகொண்டிருந்தது. உடனே நாங்கள் இந்திய கடற்படைக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள், `உங்கள் கப்பல் இருக்கும் பகுதிக்கு நாங்கள் வர இன்னும் 6 மணிநேரமாவது ஆகும்’ என்று பதில் அனுப்பினார்கள்.

படகு அருகில் வந்ததும் அதிலிருந்து துப்பாக்கியால் சுட்டார்கள். கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டே, கப்பலை நிறுத்துமாறு கூறினார்கள். நாங்கள் அவர்களிடம் சிக்கப்போகிறோம் என்பது எங்களுக்கு புரிந்தது.

கப்பலின் `அக்கோமேடேஷன் சைடில்’தான் பொதுவாக கடற்கொள்ளையர்கள் சுடுவார்கள். அந்தப் பகுதி தகர்ந்தால், கப்பல் உடைந்து உள்ளே தண்ணீர் புகுந்துவிடும். அவர்கள் சிறிய ரக ஏவுகணைகளையும் கப்பலை நோக்கி வீசினார்கள். கப்பலில் ஆங்காங்கே ஓட்டை விழுந்தது. அப்போது நான் என்ஜின் அறையில் இருந்தேன். என் அருகில் குண்டுகள் விழுந்தன. கப்பலில் இருந்த இரண்டு ராடர்கள் நொறுங்கிவிழுந்தன. என்ஜினின் இயக்கத்தை நிறுத்தி, கப்பலை முடக்குவது அவர்கள் நோக்கமாக இருந்தது.

என்ஜினின் இயக்கம் நின்றுபோய் விடக்கூடாது என்பதில் நாங்கள் அனைவருமே குறியாக இருந்தோம். அதுவரை இல்லாத வேகத்தில் கப்பலை இயக்கினோம். ஆனால் கொள்ளையர்கள் படகு எங்கள் அருகில் வந்துவிட்டது. நாங்கள் `எஸ்’ வடிவில் கப்பலை இயக்கி, தண்ணீரில் பிரளயத்தை உருவாக்கினோம். அதனால் அவர்கள் படகு தத்தளித்தது. ஆனாலும் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் எங்களால் போராட முடியவில்லை. அதற்குள் அவர்கள் படகில் இருந்து இரும்பு கயிறை எடுத்து எங்கள் கப்பலை நோக்கி வீசினார்கள். மூன்று கொக்கிகளில் இரண்டு சரியாக கப்பலில் விழ, அதை பிடித்துக்கொண்டு 25 அடி உயர கப்பலில் ஐந்து கொள்ளையர்கள் வேகமாக ஏறினார்கள்.

உயரமாக, முரட்டு உடல்வாகுடன் காட்சியளித்தார்கள். `கம்..கம்’ என்று எங்களை எல்லாம் அருகில் அழைத்தார்கள். பயத்தோடு நாங்கள் சென்றதும், கைகளை உயர்த்திக்கொண்டு கீழே உட்காரும்படி சொன்னார்கள். நாங்கள் அனைவரும் அவ்வாறே அமர்ந்தோம். `நோ பிராப்ளம்.. ஒன்லி மணி’ என்று தங்கள் பண ஆசையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் கையில் ஏ.கே.47 மற்றும் மெஷின் துப்பாக்கிகள் இருந்தன. வேறு யாராவது இருக்கிறார்களா என்று எல்லா அறைகளிலும் தேடினார்கள். நாங்கள் யாரும் பேசவில்லை. ஏன்என்றால், `எதிர் தாக்குதல் நடத்தினால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் சரணடைந்துவிடுங்கள்’ என்றுதான் எங்களுக்கு கப்பல் நிறுவனமே கூறியிருக்கிறது.

நாங்கள் கப்பலில் பல நாடுகளை சுற்றுவோம். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சட்டம். எங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்திருந்தால்கூட, சில நாடுகளின் சட்டப்படி எங்களை கைது செய்துவிடலாம்.

கப்பலை நிறுத்தாமல் ஓட்டியதால் அந்த கொள்ளையர்கள் கடுங்கோபத்தில் இருந்தனர். அதனால் எங்கள் கேப்டனை பிடித்து ஒரு கொள்ளையன் அடித்தான். அதற்குள் பெரிய படகு கப்பலின் அருகில் வந்தது. அதிலிருந்து 30-க்கு மேற்பட்டவர்கள், சரசரவென கப்பலில் ஏறினார்கள். எல்லோர் உடலிலும் துப்பாக்கி சூடுபட்ட காயங்களும், குத்துபட்ட காயங்களும் இருந்தன.

முதலில் எங்கள் தலைமை சமையல்காரரை அழைத்து, உணவுப் பொருள் அறையை திறக்கச் சொன்னார்கள். அங்கிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் அவர்களது படகில் ஏற்றினார்கள். எல்லா அறைகளையும் சோதனை செய்து லேப்டாப், செல்போன், துணிகள் போன்ற அனைத்தையும் வாரி எடுத்தனர். அவர்கள் சோமாலிய மொழி பேசினார்கள். ஒரு சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார்கள். இரண்டு பேரை என்ஜின் அறைக்கு கொண்டு சென்று அவர்கள் தலையை ஏ.கே.47 துப்பாக்கியால் குறிபார்த்தபடி கப்பலை ஸ்டார்ட் செய்யச் சொன்னார்கள். சோமாலிய கடற்கரையை நோக்கி கப்பலை செலுத்த சொன்னார்கள். அவ்வாறே கப்பலை செலுத்தினோம்.

கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறியதுமே, நாங்கள் இத்தாலி கடற்படைக்கு தகவல் அனுப்பியிருந்தோம். அதனால் இரண்டு ஹெலிகாப்டரில் வீரர்கள் வந்தனர். எங்கள் கப்பலுக்கு மேல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறந்ததும், கொள்ளையர்கள் கொடூர முகம் காட்டத் தொடங்கினார்கள். அவர்களது படகில் இருந்து ஏராளமாக நவீன ரக ஆயுதங்களை, ஹெலிகாப்டரை தாக்குவதற்காக கப்பலில் ஏற்றினார்கள். எங்களை சுற்றிலும் பெட்ரோல் கேன்களை அடுக்கினார்கள். அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானால், எங்களையும் எரித்து கப்பலையே சாம்பலாக்கிவிடுவது அவர்கள் திட்டம். அந்த திட்டத்தை எங்கள் கப்பல் கேப்டன் ஹெலிகாப்டரில் இருந்தவர்களிடம் சொன்னதும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திரும்பிவிட்டார்கள்.

மறுநாள் காலையில் எங்கள் வீட்டிற்கு போன் செய்து, நாங்கள் பிடிக்கப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை கூறும்படியும், பணம் கொடுத்து உடனே மீட்கும்படியும் சொன்னார்கள். நானும் என் மனைவியை அழைத்து, அந்த தகவலை சொன்னேன்.

நாங்கள் டாய்லெட் போனால்கூட இரண்டு பேர் அருகில் இருப்பார்கள். கொள்ளையர்களில் பாதிபேர் எங்களை கண்காணிக்கும்போது, பாதி பேர் தூங்கிக்கொண்டிருப்பார்கள். ஷிப்டு போட்டு வேலைபார்த்தார்கள். எங்கள் கப்பலில் மூன்று மாதத்திற்கு தேவையான உணவு இருந்தது. கண்டபடி அவைகளை தின்றார்கள். எங்களுக்கு எப்போதாவது ஒரு சில பழங்களை தந்தார்கள்.

சில நாட்களில் கப்பல் சோமாலியா சென்றது. அங்கு நங்கூரம் பாய்ச்சினார்கள். எங்களுக்கு கரை தெரிந்தது. ஏற்கனவே இரண்டு கப்பல்களை அங்கு பிடித்துவைத்து, பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் நிறுவனம் முதலில் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து எங்களை மீட்க சம்மதம் தெரிவித்தது. அதற்கிடையில் இன்னொரு கப்பல் நிறுவனம் தங்கள் கப்பலை மீட்க, எங்களை விட பெருந்தொகை கொடுத்துவிட்டதால் எங்கள் நிறுவனத்திடமும் அந்த அளவிற்கு உயர்த்தி கேட்டார்கள். மாதக்கணக்கில் பேச்சு நீண்டது. நாளுக்கு நாள் பணத்தின் அளவினை கூட்டிக்கொண்டே போனார்கள். அடிக்கடி எங்களை சித்ரவதை செய்யவும் செய்தார்கள்.

தினமும் ஒரு ஆட்டை எங்கள் கப்பலுக்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள். எங்களுக்கு தினமும் கஞ்சி காய்ச்ச மட்டும் அனுமதி கொடுத்தனர். எங்கள் நிறுவனம் கொள்ளைக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதை கைவிட்டதும், கொள்ளையர்கள் எங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட தர மறுத்தனர். தூங்கவிடுவதில்லை. அடித்தனர். எங்கள் தலைமை என்ஜினீயர் தப்பிக்க கடலில் குதித்தார். அதன்பின்பு அவர் என்ன ஆனார் என்றே எங்களுக்கு தெரியாது..” என்கிறார்.

317 நாட்கள் கழித்து கிட்டத்தட்ட 58 கோடி ரூபாய் கொடுத்து, இவர்கள் மீட்கப்பட இருந்த நேரத்தில் அடுத்த அதிரடியை தொடங்கியிருக்கிறார்கள். `இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களை பிடித்துவைத்திருக்கிறது. அவர்களை விட்டால்தான் இந்தியர்களை விடுவோம். பணத்தை கொடுத்துவிட்டு இத்தாலியர்களை மட்டும் அழைத்துச் செல்லுங்கள்’ என்றிருக்கிறார்கள்.

இத்தாலி கம்பெனியோ இந்தியர்களை விட்டால்தான் பணம் தருவோம் என்று கூற, கடைசியில் ஒரு ஹெலிகாப்டரில் வந்து, பணப் பையை இறக்கி, கப்பலில் போட்ட பிறகு அத்தனை பேரையும் கப்பலில் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கொள்ளையர்களோடு கழித்தது, பிஜேஷ்க்கு மறக்க முடியாத கொடிய அனுபவமாக இருந்தது. இவர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்.

நன்றி-தினத்தந்தி

பெற்றோரை நேசிப்பவரா நீங்கள்?


பாசம் கொட்டி வளர்த்த பெற்றோரை அவர்களின் முதிர்வயதில் கண்டு கொள்ளாமல் போகும் பிள்ளைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். `சேச்சே… நானெல்லாம் அப்படி இல்லை. என் பெற்றோர் தான் என் உயிர்’ என்று உங்களில் பலர் சொல்லக்கூடும்.

அப்படியானால் நீங்கள் பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.

பணி ஓய்வு, நோய் அவர்களில் ஒருவர் மரணம் போன்ற பிரச்சினையான கால கட்டங்களில் நான் என் பெற்றோருக்குத் துணையாக நிற்பேன்.

என் பெற்றோர் இளவயது வரையிலும் வேண்டியமட்டும் என்னை கவனித்தார்கள். இப்போது இது என் முறை. நான்தான் அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களின் தேவையறிந்து நான் செயல்படுவேன்.

அவர்கள் இதுவரை செய்த எல்லாவற்றிற்காகவும் நான் நன்றியுடன் இருப்பேன்.

அவர்களோடு நான் அதிக நேரம் செலவிடுவேன். அவர்களுக்கு நான் தரும் உணவில் என் அன்பும் கலந்திருக்கும்.

என் மழலைப்பருவம், குழந்தைப்பருவம், இளம் பருவங்களில் பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் என்னைப் படிப்படியாக அழைத்துச் சென்றதை நினைவில் வைத்து, அவர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று வருவேன்.

மேற்சொன்ன அத்தனையையும் இதய சுத்தியோடு நீங்கள் சொல்லியிருந்தால் பெற்றோரின் தங்கமான பிள்ளை நீங்கள் தான்.

சிலர் தங்கள் பெற்றோரை பூவாகத் தாங்குகிறோம் என்பார்கள். அவர்கள் சொன்னதை நம்பி வீட்டில்போய் பார்த்தால் பெற்றோர் வீட்டின் உள் இருட்டறையில் அழுக்குக் கட்டிலில் கிழிந்த நாராய் கிடப்பார்கள்.

இதுவா கவனிக்கிற லட்சணம்? நேசிக்கிற லட்சணம்?

பெற்றோரை முதிர்வயதில் தள்ளி விடாதே என்கிறது, பைபிள்.

நிஜமாகவே பெற்றோரை நேசிப்பவர்கள்பின்வரும் 6 கேள்விகளுக்கு ஆம்- இல்லை பதிலளிக்கலாம்.

1. வயதான பெற்றோர் ஆலோசனைகளும் அறிவுரைகளும் எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது? (ஆம் / இல்லை)

2. வயதாகி விட்டதால் பெற்றோர் எரிச்சலூட்டு பவராகவும் மனச்சோர்வு அடைபவராகவும் உள்ளனர். இப்படிப்பட்ட நடத்தையை நான் புரிந்துகொண்டு அவர்களை அனுசரித்துப் பாகிறேன்.. (ஆம் / இல்லை)

3. நான் வளரும்போது எனக்கான தேவைகளை என் பெற்றார் தீர்மானிக்கிறார்கள். நான் வளர்ந்த பிறகு எனது விருப்பங்களை நானே முடிவு செய்கிறேன். சில சமயங்களில் மட்டும் அவர்களிடம் ஆலோசிக்கிறேன். (ஆம் / இல்லை)

4. எனக்கு வேலைகள் அதிகமாக இருந்தாலும், என் பெற்றோருக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுடைய எல்லா தேவைகளையும் கவனித்துக் கொள்கிறேன். (ஆம் / இல்லை)

5. எனக்கு மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் பெற்றோரிடம் ஆலோசனை பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். (ஆம் / இல்லை)

6. என் பெற்றோரை நான் நேசிக்கிறேன் என்பதை அவர்களிடம் வெளிப்படுத்துகிறேனா? (ஆம் / இல்லை)

7. என் வாழ்க்கைத் துணையை தேட என் பெற்றோர் உதவுவதாகக் கூறினால், நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறி விடுவேன். (ஆம் / இல்லை)

8. என்னைப் போலவே என் லைப் பார்ட்னரும் என் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்வேன். (ஆம் / இல்லை)

9. பெற்றோருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எரிச்சலாவேன். (ஆம் / இல்லை)

10. குழந்தைகளை வளர்ப்பது விஷயமாய் என் பெற்றோரின் ஆலோசனையையும் கேட்கிறேன். (ஆம் / இல்லை)

இப்போது நீங்கள்விடை சொல்லும் நேரம். விடை எழுதும்போதே நான் என் பெற்றோருக்கு எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். குறைகள் உங்கள் பக்கம் இருந்தால் இப்போதே அதை மாற்றிக்கொண்டு பெற்றோருக்கு அன்பான பிள்ளைகளாக இருக்க தீர்மானியுங்கள்.

பெண்களை பெருமைப்படுத்துவோம்-கவியரசு கண்ணதாசன்

 

`என்ன குழந்தை பிறந்திருக்கிறது?’ என்று கேட்கிறார்கள்.

`பெண் குழந்தை’ என்று பதில் வருகிறது.

பாட்டி அலுத்துக் கொள்கிறாள்.

அத்தனைக்கும் அவளும் ஒரு பெண்தானே!

என் தாயாருக்கு முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தது.

மருமகளுக்குக் குழந்தை பிறந்தால், மாமியார் வந்து மருந்து இடித்துக் கொடுப்பது எங்கள் குல வழக்கம்.

`பெண் குழந்தையா பெற்றிருக்கிறாள்?’ என்று எங்கள் பாட்டி அலுப்போடு வந்தார்களாம்.

இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.

பாட்டியிடம் போய்ச் சொன்னார்களாம்.

`இவளுக்கு வேறு வேலை இல்லையா…?’ என்று பாட்டி அலுத்துக் கொண்டார்களாம். ஆனாலும் வந்து மருந்து கொடுத்தார்களாம்.

மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.

என் பாட்டியோ, `அவளையே மருந்து இடித்துக் குடிக்கச் சொல்!’ என்று சொல்லி விட்டார்களாம்.

பிறகு, அவர்களைக் கெஞ்சிக் கெஞ்சி அழைத்து வந்தார்களாம்.

நாலாவது குழந்தை வயிற்றில் இருந்த போது என் தாயார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்களாம்.

ஆண்டவன் லீலையைப் பாருங்கள்; அதுவும் பெண்ணாகவே பிறந்தது.

கடைசிவரை என் பாட்டி அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லையாம்.

`மலையரசி அம்மன் புண்ணியத்தில் ஐந்தாவதாக என் மூத்த சகோதரர் பிறந்தார்’ என்று என் தாயார் சொல்வார்கள்.

எந்தப் பெண்ணுமே தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.

பெண் குழந்தை பிறந்தால் பெற்ற தாயே சலித்துக் கொள்கிறாள்.

`பெண்ணென்று பூமிதனில்
பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்!’

-என்றான் பாரதி.

பெண் பிறப்பு என்ன அப்படிப் பாவப்பட்ட பிறப்பா?

தாய் என்கிறோம்; சக்தி என்கிறோம்; ஆனால், குழந்தை மட்டும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் பெண் பிறந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கார் விபத்தில் சிக்கி நான் பாண்டிச்சேரி `ஜிப்மர்’ மருத்துவமனையில் இருந்த போது, என்னைப் பார்த்துப் பார்த்து அழுதவை, பெண் குழந்தைகளே!

ஆண் பிள்ளையோ மனைவி வந்து விட்டால், அப்பனை வீட்டை விட்டுக் கூடத் துரத்தி விடுவான்.

பெண் குழந்தையின் பாசமும், பரிவும் ஆண் குழந்தைக்கு வராது.

ஒரு வயதுப் பெண் குழந்தைக்குக்கூட தாய், தகப்பன் மீதிருக்கிற பாசம் தெய்வீகமாக இருக்கும்.

அதிலும், இந்தியப் பெண்மை என்பதே மங்கலமானது.

அதன் இரத்தம், இரக்கம், கருணை, பாசங்களாலே உருவானது.

மேல் நாட்டுப் பெண்மைக்கும் இந்தியப் பெண்மைக்கும் உள்ள பேதம் இதுதான்.

மேல் நாட்டுப் பெண்மை ஒரு இடத்திலும் ஒட்டு, உறவு, பாசம் என்பதை வளர்த்துக் கொள்வதில்லை.

அது தண்ணீரில் விட்ட எண்ணெயைப் போல் தனித்தே நிற்கிறது.

இந்தியாவில்தான் இது சங்கிலி போட்டுப் பின்னப்படுகிறது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

என் சின்ன வயதில் எங்கள் சமூகத்தில் பெண்கள் குறைவு. அதனால், ஒரு பெண்ணை ஒரு வாலிபன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

நான் வளர வளரக் கவனித்து வந்தேன்.

என் முதல் சகோதரி திருமணத்தின் போது பெண்ணின் விலை, மிக அதிகம்.

இரண்டாவது சகோதரிக்குத் திருமணம் நடந்த போது, அது குறைந்தது.

மூன்றாவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மேலும் குறைந்தது.

நான்காவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மிக மிகக் குறைந்து விட்டது.

ஐந்தாவது திருமணம் வந்த போது மாப்பிள்ளைக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டி வந்தது.

ஆறாவது திருமணத்தில் அது இன்னும் அதிகமாயிற்று.

இப்போது பெண்ணைப் பெறுகிறவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள்.

நான் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்தேன்.

என் அண்ணனும், தேவரும் கைகொடுத்தார்கள்.

இப்பொழுது அதே திருமணங்களைச் செய்வதென்றால் என்னால் முடியாது.

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல், பெண் பிறந்து விட்டால் தாய் தகப்பனின் தலை சுழல்கிறது. அந்தப் பொருளாதார நோக்கத்தில் பெண் பிறப்பு வெறுக்கப்படுகிறது.

ஆண் குழந்தை அடி மடையனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

தாய்மையின் கம்பீரத்தை, `சக்தி’ வடிவமாகக் காணும் இந்திய நாடு, பெண்ணை வெறுக்க நேர்வது எவ்வளவு துரதிருஷ்டம்?

வரதட்சணை முறையைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். ஆனால், அந்தக் கொடுமை இன்னும் நீடித்துக் கொண்டேதானிருக்கிறது.

பெண்மையின் எதிர்காலம் முழுவதுமே பணத்தில் அடங்கிக் கிடக்கிறது. அதன் மேன்மை உணரப்படவில்லை.

உத்தமமான ஏழைப் பெண்மையில் தெய்வீகம் காட்சியளிக்கவில்லை.

ஒரு ஏழைப் பெண், தான் குங்குமம் வைப்பதற்கே கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது.

கழுத்திலே ஒரு பொட்டுத் தாலியைக் கட்டிக் கொள்வதற்குத் தாய் தகப்பனைக் கசக்கிப் பிழிய வேண்டியிருக்கிறது.

கூன், குருடு, செவிடு, நொண்டிக்காவது வாழ்க்கைப்பட்டு, `சுமங்கலி’ என்ற பெயரோடு சாவதற்கு இந்துப் பெண் ஆசைப்படுகிறாள்.

ஆனால், அதற்கும் விலை தேவைப்படுகிறது.

நடுத்தரக் குடும்பத்தில் பிரச்சினைகளிலெல்லாம் பெரிய பிரச்சினை, மகளே!

எங்கள் சமூகத்தில் மகளைத் திருமணம் முடித்துக் கொண்டு விடுவதோடு தகப்பன் கவலை தீர்ந்து விடுவதில்லை.

தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், மகள் பிரசவித்தாலும் அவன் பணம் தேட வேண்டியிருக்கிறது.

இல்லையென்றால், `உன் அப்பன் என்னடி கொடுத்தான்?’ என்று மாமியார் கன்னத்தில் இடிக்கிறாள்.

கட்டிக்கொண்ட கணவனோ கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறான்!

அவனுக்குச் சுயதர்மமும் தெரியாது; சுயகர்மமும் புரியாது.

`எனக்கு மனைவிதான் தேவை; மாமனார் வீட்டு சீர்வரிசை அல்ல!’ என்று சொல்லக்கூடிய ஆண் மகனாக அவன் பெரும்பாலும் இருப்பதில்லை.

`அடியம்மா! கதையைக் கேட்டாயா? அண்ணன் மனைவிக்கு சம்பந்தி வீட்டார், போட்ட சங்கிலி காற்றிலே பறக்கும்,’ என்று நாத்தனார் கேலி செய்கிறாள்.

ஒரே வீட்டில் ஒரு மருமகள் ஏழையாகவும், இன்னொரு மருமகள் பணக்காரியாகவும் வந்து விட்டால், அந்த ஏழை மருமகள் படும்பாட்டை இறைவன் கூடச் சகிக்கமாட்டான்.

இந்துக்களின் துயரங்களிலெல்லாம் பெரிய துயரம் இந்தத் துயரமே.

சனாதன வைதிக இந்துக்கள் கூட இதில் கருணை உள்ளவர்களாக இல்லை.

சீதையை ராமன் மணந்ததும்,

ருக்மிணியைக் கண்ணன் மணந்ததும்,

-சீர்வரிசைகளுக்காக அல்ல.

வள்ளி, தெய்வானையிடம் உமா தேவியார் என்ன சீர்வரிசைகளா கேட்டார்கள்?

அகலிகை என்ன கொண்டு வந்தாள், முனிவரின் ஆசிரமத்திற்கு?

`நாளை உதயமாகக் கூடாது’ என்று சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினி, கற்பென்னும் அணிமணிகளை மட்டுமே அணிந்திருந்தாள்.

தேவர்களைக் குழந்தைகளாக்கிய அனுசூயையின் கழுத்தில் திருமாங்கல்யம் மட்டுமே பிரகாசித்தது.

இந்து வேதம் படிக்கிறான்; புராணம் படிக்கிறான்; இதிகாசம் படிக்கிறான்.

மகனுக்குப் பெண் தேடும் போது, மனிதாபிமானத்தையே இழந்து விடுகிறான்.

ஊரில் நடக்கும் திருமணங்களை எல்லாம் பார்த்தபடி உள்ளுக்குள் குமுறும் இந்துப் பெண்கள் எவ்வளவு பேர்?

பையன் பட்டப் படிப்புப் படித்து விட்டான் என்பதற்காக, `ஸ்கூட்டர் கொடு; பங்களா கொடு’ என்று வம்பு செய்யும் மாமன்மார் எத்தனை பேர்?

இந்து சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் புற்று நோயை இளைஞர்கள் களைந்தாக வேண்டும்.

அழகான ஒரு அனுசூயையைத் தேர்ந்தெடுப்பதே அவனுடைய பணியே தவிர, ஸ்கூட்டருக்காகவும், வரதட்சிணைக்காகவும் எந்த அலங்கோலத்திலும் சிக்கிக் கொள்வதல்ல.

`ஒரு பெண் புக்ககம் வருகிறாள் என்றால், ஒரு தெய்வம் அடியெடுத்து வைக்கிறது’ என்று பொருள்.

`தெய்வமே வைர நகைகளோடு வந்தாக வேண்டும்’ என்று ஒரு நல்ல இந்து கேட்க மாட்டான்.

கற்புடைய ஒரு பெண்ணைவிட, அவள் அணிந்து வரும் நகைகள் விலையுயர்ந்தவையல்ல.

அழகான புள்ளிமானிடம் கவிஞன், கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர மாமிசத்தையல்ல!

பையனைப் படிக்க வைக்கும்போதே, தான் செய்யும் செலவுகளையெல்லாம் சம்பந்தியிடம் வட்டி போட்டு வசூலிப்பது என்று தகப்பன் முடிவு கட்டிக் கொள்கிறான்.

அதை ஒரு தார்மிகப் பெருமையாகவும் கருதுகிறான்.

இந்து தர்மத்தின் முழு ஆதார சுருதியையும் அவன் அங்கேயே அடித்துக் கொன்று விடுகிறான்.

அவன் திருநீறு பூசுகிறான்; திருமண் இடுகிறான்; ஒரு மணி நேரம் பூஜையில் அமர்கிறான்; உலக க்ஷேமத்துக்காக பிரார்த்திக்கிறான்; வீட்டில் இருக்கிற சாமி சிலைக்குக் கூட வைர நகை செய்து போட்டு அழகு பார்க்கிறான்; ஆனால், மருமகளைத் தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அவன் யூத வியாபாரியாகி விடுகிறான்.

கண்ணைப் பறிக்கின்ற அழகு- கடவுளே மதிக்கின்ற கற்பு- ஆனால், அவளோ ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிறப்பு.

அந்த இரண்டு அற்புதமான குணங்களுக்காக ஒரு பணக்காரன் அவளை கட்டிக்கொள்ள முன் வரவில்லையே?

ஒரு அனாதைக்கோ, தற்குறிக்கோ அல்லவா அந்தத் தெய்வப் பெட்டகம் போய்ச் சேருகிறது?

பொருளாதாரம் பெண்ணின் வாழ்வோடு விளையாடுவதை, இளைஞர்கள் தடுக்க வேண்டும்.

`உத்தியோகம் பார்க்கின்ற பெண் எனக்கு வேண்டும்’ என்று ஒரு இந்து இளைஞன் கேட்பது எனக்குப் புரிகிறது.

அந்தப் பொருளாதாரத்தில் அடிப்படை நியாயம் இருக்கிறது.

`நான் படித்திருக்கிறேன்! நாற்பதாயிரம் வேண்டும்’ என்பது தான் எனக்குப் புரியவில்லை.

துர்ப்பாக்கிய வசமாக ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்குமே குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.

அதிலும் வறுமை மிக்க இல்லங்களில் இறைவன் பெண்ணாகவே படைத்துத் தள்ளுகிறான்.

அவன் இந்துக்களை ஆத்ம சோதனை செய்கிறான்.

`பிரமாத தத்துவம் பேசும் நீங்கள் என் சிருஷ்டியை எப்படி மதிக்கிறீர்கள்? பார்க்கிறேன்!’ என்று சவால் விடுகிறான்.

நாம் ஒருபோதும் அவனது சவாலை ஏற்றுக் கொண்டதில்லை.

ஒரு கையில் தராசையும், ஒரு கையில் பையையும் வைத்துக் கொண்டுதான் பெண்ணைத் தேடுகிறோம்.

நமக்கு வருகிற வியாதிக்கெல்லாம் காரணம், இதுவே.

பெண்ணை மாமியார் வீட்டுக்கு வழியனுப்பும் போது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்களே, ஏன்?

`திருமணத்திற்கு முன் இவ்வளவு பாடுபடுத்தினார்களே, திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ…?’ என்று அஞ்சுகிறார்கள்.

என்னையே எனது ஒரு பெண்ணின் திருமணத்தில் அழ வைத்திருக்கிறார்கள்.

`இவர் கவிஞராயிற்றே, கவியரசாயிற்றே’ என்ற மரியாதையெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.

பெண்ணைப் பெற்றவன், கண்ணீர் விட்டே ஆக வேண்டும்; அவ்வளவுதான்.

`பாரதத்தில் ஒருமுறைதானா குருக்ஷேத்திரம் நடந்தது?’

நாம் ஒவ்வொருவரும் குருக்ஷேத்திரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் காலமானார்; அவருக்கு நான்கு பெண்கள்.

அவர் உயிருடன் இருக்கும்போதே ஒருத்திக்கு முப்பத்தி நான்கு வயது; ஒருத்திக்கு முப்பது வயது; ஒருத்திக்கு இருபத்தி ஆறு வயது; ஒருத்திக்கு இருபது வயது.

ஒருத்திக்கும் திருமணம் ஆகவில்லை.

இங்கே கலப்புத் திருமணத்திற்குத் தங்கப் பதக்கம் கொடுக்கிறார்களாம்!

இந்தக் கொடுமையில் இருந்து சமுதாயம் மீள வேண்டும்.

இது வெறும் வாதப் பிரதி வாதங்களால் நடக்கின்ற காரியமல்ல.

`இறைவா! எனக்கு ஒரு சீதையைக் கொடு; அனுசூயையைக் கொடு; கோலார் தங்கச்சுரங்கம் வேண்டாம்’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

`நான் வரதட்சிணை வாங்காதவன்’ என்பதே ஒரு இந்து இளைஞனின் பெருமையாக இருக்க வேண்டும்.